பிரதமர் அலுவலகம்

தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


“இயற்கைக்கும், மகிழ்ச்சிக்கும் அப்பால், கோவா என்பது வளர்ச்சியில் புதிய மாதிரி, கூட்டு முயற்சிகளின் பிரதிபலிப்பு, பஞ்சாயத்து முதல் அரசு நிர்வாகம் வரை வளர்ச்சிக்கான ஒருமைப்பாடு ஆகியவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது”

“திறந்தவெளியில் மலம் கழிக்காதது, மின்சாரம், குழாய் மூலம் குடிநீர், ஏழைகளுக்கு உணவுப் பொருள் விநியோகம் போன்ற அனைத்து முக்கியத் திட்டங்களிலும் கோவா 100% சாதித்துள்ளது”

“ஸ்வயம்பூர்ண கோவா என்பது கோவா குழுவில் புதிய குழு உணர்வின் விளைவாகும்”

“கோவாவில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியிருப்பது விவசாயிகள், கால்நடைப் பராமரிப்போர், மீனவர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும்”

“சுற்றுலாவைக் கொண்டுள்ள மாநிலங்கள் தடுப்பூசி இயக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளன, இதனால் கோவா பெருமளவில் பயனடைந்துள்ளது”

Posted On: 23 OCT 2021 12:47PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா ஸ்வயம்பூர்ண கோவா திட்டத்தில் பயனாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

கோவா அரசின் துணைச் செயலாளர் திருமதி.ஈஷா ஷாவந்த்-வுடன் கலந்துரையாடிய பிரதமர், ஸ்வயம்பூர்ண மித்ராவாகப் பணியாற்றுவதன் அனுபவம் பற்றி அவரிடம் வினவினார். பயனாளிகள் சேவைகளைப் பெறுகிறார்கள் என்றும் அவர்களின் வீடுகளிலேயே தீர்வுகள் ஏற்படுகின்றன என்றும் அவர் பதிலளித்தார். ஒற்றைச் சாளர சேவை முறை எளிதாக இருக்கிறது. தொழில்நுட்பப் பயன்பாடு பற்றி பிரதமர் கேட்டபோது, கூட்டான முறையில் தரவுகள் சேகரிப்பதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கேள்விக்கு, பயிற்சி மற்றும் சுயஉதவிக் குழு நடைமுறை மூலம் பெண்களுக்கு சாதனங்கள் வழங்கப்பட்டதோடு, சமூக ஊடக சந்தைப்படுத்துதல் மற்றும் குறியீடு செய்வதற்கு உதவி செய்யப்பட்டதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அடல் பாதுகாப்புக் குழுக்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. முதலமைச்சராக இருந்த தமது நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், உகந்த சூழலை உருவாக்குவது மற்றும், பயிற்சி அளிப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் வழங்குவது, சமையல் செய்வது போன்ற சேவைகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பயிற்சி பற்றி பேசினார். உற்பத்திப் பொருட்களுக்கு அப்பால், சேவைகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் கூறினார். நிர்வாகத்தில் இருப்பவர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் உணர்வுபூர்வமாகவும் புதியன கண்டறிவோராகவும் இருக்க வேண்டும் என்றார். இத்தகைய அதிகாரிகளை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் தற்சார்பு என்ற இலக்கினை எட்டுவதற்கான புதிய செயல்களில் ஸ்வயம்பூர்ணா இயக்கம் உதவி செய்துள்ளது என்று பிரதமரிடம் முன்னாள் தலைமை ஆசிரியரும், கிராமத் தலைவருமான திரு.கான்ஸ்டான்சியோ மிராண்டா கூறினார். அவர்கள் தேவை அடிப்படையில் மாநிலத்தைத் தேர்வு செய்கிறார்கள். மத்திய திட்டங்களில் கூட்டான முறையில் பணியாற்றி வருகின்றனர். நீண்ட காலம் நிலுவையில் இருந்த பணிகளைப் பூர்த்தி செய்திருப்பதற்காக அவர்களைப் பாராட்டிய பிரதமர், அரசும் கூட சுதந்திரத்திற்கு பின் நீண்டகாலம் புறக்கணிக்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளைப் முடிப்பதற்குப் பணியாற்றி வருகிறது என்றார்.

சமூகத்தின் கடைக்கோடி மனிதருக்கும் பயன் கிடைக்க தாமும் உள்ளூர் நிர்வாகமும் செயல்பட்டு வருவதாக தெரிவித்த திரு.குண்டன் ஃபலாரியிடம் பிரதமர் பேசினார். தமது பகுதியில் ஸ்வநிதி திட்டத்தைப் பிரபலப்படுத்திய தமது அனுபவத்தை அவர் எடுத்துரைத்தார்.  இந்தத் திட்டத்தின் சிறப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி பரிவர்த்தனை வரலாற்றை உருவாக்கும் நிலையில், சாலையோர வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்களா என்று பிரதமர் விசாரித்தார். கோவா விடுதலையின் 60 ஆண்டுகளின் ஒரு பகுதியாக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ரூ.50 லட்சமும், ஒவ்வொரு நகராட்சிக்கும் ரூ.1 கோடியும் வழங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். நிதிச் சேவையில் அனைவரையும் உள்ளடக்கும் அரசின் முயற்சிகள் பற்றி பேசிய பிரதமர், அரசுத் திட்டங்கள் கிடைக்கச் செய்வதில் மக்களை ஈடுபடுத்த வேண்டுமென்று கூறினார்.

அரசுத் திட்டங்கள் மூலம் தாம் பெற்ற பயன்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவது பற்றிய தகவல்களை மீன்வளத் தொழில் முனைவோரான திரு.லூயிஸ் கார்டோசோ விவரித்தார். கிசான் கடன் அட்டை, நேவிக் செயலி, படகுகளுக்கு நிதியுதவி போன்ற மீனவ சமூகத்திற்கு உதவி செய்யும் திட்டங்கள் பற்றி பிரதமர் பேசினார். மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைப்பதற்கு கச்சாவாகத் தங்களின் பொருட்களை விற்பதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பனையை விரிவுபடுத்தும் தமது விருப்பத்தைப் பிரதமர் தெரிவித்தார்.

ஸ்வயம்பூர்ணா கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி திரு.ருக்கி அகமது ராஜாசாப் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் எளிதாகவும், கவுரவமாகவும் பணிபுரிய அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். வசதிகளைத் தரப்படுத்துதல் போன்ற முயற்சிகளையும் அண்மையில் நடைபெற்ற பாராலிம்பிக்சில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வெற்றி பற்றியும் அவர் நினைவு கூர்ந்தார்.

சுயஉதவிக் குழுவின் தலைவராக இருக்கும் திருமதி.நிஷிதா நாம்தேவ் கவாசுடன் பேசிய பிரதமர், இந்தக் குழுவின் பொருட்கள் தயாரிப்பு பற்றி கேட்டறிந்ததோடு அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றியும் கேட்டறிந்தார். பெண்களின் கவுரவத்தையும், நம்பிக்கையையும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜன்தன், பிரதமரின் வீட்டு வசதி, தூய்மை இந்தியா, உஜ்வாலா போன்று நடைமுறையில் உள்ள அரசின் திட்டங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். ராணுவம், விளையாட்டுக்கள் துறை என எதுவாக இருந்தாலும் அனைத்திற்கும் மகளிரைக் கொண்டு வருவது பாராட்டுக்குரியது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

திரு.துர்கேஷ் எம்.ஷிரோட்கரிடம் அவரது குழுவின் பால்பண்ணை செயல்பாடுகள் பற்றி விவாதித்தார். கிசான் கடன் அட்டையினைத் தமது குழு நன்கு பயன்படுத்துவதாக  அவர் கூறினார். இந்த வசதி குறித்து அவர்கள் மற்ற விவசாயிகள் மற்றும் பால்பண்ணை தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள். கிசான் கடன் அட்டை திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்கான திரு.ஷிரோட்கரின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார். அவர்களின் வருவாய் அதிகரிப்பதில் உதவி செய்ய விதையிலிருந்து சந்தை வரை நல்ல சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தத் திசையில், கிசான் கடன் அட்டை, மண்வள அட்டை, வேம்பு கலந்த யூரியா, இ-நாம், அங்கீகரிக்கப்பட்ட விதைகள், எம்எஸ்பி கொள்முதல், புதிய வேளாண் சட்டங்கள் போன்றவை இதற்கான முயற்சிகள் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவா மகிழ்ச்சிக்கு முக்கியத்துவமாக இருக்கிறது, கோவா இயற்கைக்கு முக்கியமாக இருக்கிறது, கோவா சுற்றுலாவுக்கு முக்கியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆனால் இன்று வளர்ச்சியின் புதிய மாதிரிக்கும், கூட்டான முயற்சிகளின் பிரதிபலிப்பிலும், பஞ்சாயத்து முதல் அரசு நிர்வாகம் வரை வளர்ச்சிக்கான ஒருமைப்பாட்டிலும் கோவா முக்கியத்துவம் உடையதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கோவாவின் உறுதியான செயல்பாட்டை மெச்சிய பிரதமர், திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பதற்கான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது என்றார். இந்த இலக்கை கோவா 100% நிறைவேற்றியுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார இணைப்பு வழங்குவது என்ற இலக்கை நாடு நிர்ணயித்துள்ளது. 100% இலக்கை கோவா சாதித்துள்ளது. வீடு தேடி குடிநீர் திட்டம் என்பதில் 100% அமலாக்கத்தை எய்திய முதல் மாநிலமாக கோவா இருக்கிறது.

ஏழைகளுக்கு விலையின்றி உணவுப் பொருட்கள் வழங்கும் விஷயத்திலும் கோவா 100% சாதித்துள்ளது என்று பிரதமர் பாராட்டினார்.

பெண்களின் வசதிக்காகவும், கவுரவத்திற்காகவும் மத்திய அரசின் திட்டங்களைக் கள அளவில் திருப்திகரமாக அமல்படுத்தி வரும் கோவா, இவற்றை விரிவுபடுத்தவும் செய்கிறது என்று பிரதமர் கூறினார். கழிப்பறைகள், மகளிருக்கான ஜன்தன் வங்கிக் கணக்குகள், அல்லது உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகளை வழங்கியுள்ள மகத்தான செயல்பாட்டிற்காக கோவா அரசை அவர் பாராட்டியுள்ளார்.

கோவாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற, மறைந்த மனோகர் பாரிக்கரைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். கோவாவின் வளர்ச்சியை நோக்கிய திட்டத்தை நன்கு நிறைவேற்றுவதற்காகவும் கோவாவுக்கு புதிய உச்சங்களை அளிப்பதற்காகவும் தற்போதுள்ள முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை அவர் பாராட்டினார். கோவா தற்போது புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இரட்டை என்ஜின் அரசான இது மாநிலத்தின் வளர்ச்சிக்காக சக்தியோடும், தீர்மானத்தோடும் பணி செய்து வருகிறது. கோவா குழுவினரின் புதிய விளையாட்டு உணர்வின் விளைவு, ஸ்வயம்பூர்ண கோவாவின் தீர்மானமாக உள்ளது என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.

கோவாவில் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படைக் கட்டமைப்பு விவசாயிகளின், கால்நடைப் பராமரிப்பவர்களின், நமது மீனவர்களின் வருவாயை அதிகரிக்க உதவும் என்று பிரதமர் தெரிவித்தார். முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஊரகப் பகுதி அடிப்படைக் கட்டமைப்பு நவீனமயத்திற்கான கோவாவின் நிதி 5 மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மீனவர்களின் படகுகள் நவீனமயத்திற்குப் பல்வேறு அமைச்சகங்களின் அனைத்து நிலையிலும் ஊக்கத் தொகை வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் மத்சய சம்பட யோஜனா திட்டத்தின் கீழும், கோவா மீனவர்கள் ஏராளமான உதவிகளை பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி இயக்கம் பற்றி பேசிய பிரதமர், கோவா உட்பட நாட்டின் சுற்றுலா அடிப்படையிலான மாநிலங்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு அல்லும் பகலும் முயற்சிகளை மேற்கொண்ட கோவா அரசை அவர் பாராட்டினார்.

********



(Release ID: 1765973) Visitor Counter : 275