பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

நிலக்கரி வாயுவாக்கம் மூலம் டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யும் உரத்துக்கான பிரத்தியேக மானியக் கொள்கை : அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 APR 2021 3:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நிலக்கரி வாயுவாக்கம் மூலம் டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யும் உரத்துக்கு பிரத்தியேக மானியக் கொள்கையை வகுப்பதற்கான உரத்துறையின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நோக்கங்கள்:

நாட்டின் திட்டமிட்ட எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர தற்சார்பை பரிசீலித்து, நாட்டின் விரிவான நிலக்கரி கையிருப்பை கருத்தில் கொண்டு, நிலக்கரி வாயுவாக்கம் அடிப்படையிலான டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை மேம்படுத்தி, கிழக்குப் பகுதியின் வளர்ச்சியை ஊக்குவித்து, நாட்டின் கிழக்குப் பகுதிக்கு உரம் விநியோகம் செய்வதற்கான போக்குவரத்து மானியத்தை சேமிக்க உதவும். ஒரு வருடத்திற்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உர இறக்குமதியைக் குறைத்து, அந்நிய செலாவணியை சேமிக்க இது உதவும்.

மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா பிரச்சாரங்களுக்கு இத்திட்டம் ஊக்களிப்பதோடு, சாலைகள், ரயில்வே, தண்ணீர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதற்கும் உதவும். இத்திட்டத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் துணைத் தொழில்கள் உருவாக வசதி செய்து, புதிய தொழில் வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கும்.

நிலக்கரி அதிக அளவில் கிடைப்பதாலும், அதன் விலை அதிக ஏற்றத்தாழ்வின்றி இருப்பதாலும், நிலக்கரி வாயுவாக்கல் ஆலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முக்கியமான இயற்கை எரிவாயு மீதான சார்பைக் குறைப்பதன் மூலம், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செலவுகளை டால்ச்சர் ஆலை குறைக்கும். நேரடி நிலக்கரி எரிப்பு செயல்முறைகளோடு ஒப்பிடும்போது, தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பத்தை இந்த ஆலை பயன்படுத்தும். இதன் மூலம் மாசுகளின் அளவு குறையும்.

பின்னணி:

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ், கெயில் இந்தியா லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகிய நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட், 2015 நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. வருடத்திற்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் திறனுடன் கூடிய புதிய பசுமை உர ஆலையை நிறுவுவதன் மூலம் ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் முந்தைய டால்ச்சர் ஆலைக்கு டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் புத்துயிர் அளிக்கிறது. டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட்டின் உரத்திட்டத்தின் மதிப்பு, ரூ. 13277.21 கோடி (+/-10%) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

*****************



(Release ID: 1712956) Visitor Counter : 255