பிரதமர் அலுவலகம்

நான்காவது சர்வதேச ஆயுர்வேத திருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்


ஆயுர்வேத பொருட்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: பிரதமர்

உலகளாவிய உடல்நலம் குறித்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு

ஆயுர்வேத துறைக்கு அரசின் முழு ஆதரவுக்கு உத்தரவாதம்

Posted On: 12 MAR 2021 9:46PM by PIB Chennai

நான்காவது சர்வதேச ஆயுர்வேத திருவிழாவில் காணொலி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆயுர்வேதத்தின் மீது உலகெங்கும் வளர்ந்து வரும் ஆர்வம் குறித்து குறிப்பிட்டதோடுஆயுர்வேத துறையில் உலகம் முழுவதும் பணிபுரிபவர்களின் முயற்சிகளை பாராட்டினார்.

 "முழுமையான மனித அறிவியல் என்று ஆயுர்வேதத்தை சரியாக வர்ணிக்கலாம். உங்கள் தட்டில் இருக்கும் தாவரங்களிலிருந்து, உடல் வலிமைக்கான பொருட்கள் முதல் மனவலிமை வரை ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் தாக்கமும் ஊக்கமும் அளப்பரியது," என்று அவர் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஆயுர்வேத பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.

"ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருந்துகள் உலகம் முழுவதும் இன்னும் பிரபலம் அடைவதற்கான சரியான வாய்ப்பை தற்போதைய நிலைமை வழங்குகிறது. அவற்றின் மீதான ஆர்வம் வளர்ந்து வருகிறது. உடல் நலத்தை மேலும் பேண நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவங்கள் ஆகிய இரண்டுமே முக்கியம் என்று உலகம் நினைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதத்தின் பங்கையும் அதன் பலன்களையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்," என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் உடல்நல சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி பேசிய அவர், உடல்நல சுற்றுலாவின் அடிநாதமாக விளங்குவது நோய்க்கு சிகிச்சை அளித்து உடல் நலத்தை மேம்படுத்துவது ஆகும். எனவே உடல்நல சுற்றுலாவின் வலிமை வாய்ந்த தூணாக ஆயுர்வேதமும் பாரம்பரிய மருத்துவமும் விளங்குகிறது.

உங்கள் உடல் அல்லது மனம்இரண்டில் எதற்கு நீங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்பினாலும் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அவர் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆயுர்வேதத்தின் புகழைப் பயன்படுத்தி பாரம்பரிய மற்றும் நவீன முறைகளை ஒன்றிணைப்பதால் ஏற்படும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ஆயுர்வேத பொருட்களை பெருமளவில் இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதையும் ஆதாரம் சார்ந்த மருத்துவ அறிவியல் உடன் ஆயுர்வேதத்தை இணைப்பதற்கு வளர்ந்து வரும் ஆர்வம் குறித்தும் குறிப்பிட்ட பிரதமர், ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த ஆராய்ச்சியை ஆழப்படுத்துமாறு கல்வியாளர்களை கேட்டுக்கொண்டார்.

உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் நமது பாரம்பரிய சிகிச்சை முறைகளை வெளிப்படுத்துவதற்காக இளைஞர்களை அவர் பாராட்டினார்.

ஆயுர்வேத துறைக்கு அரசின் முழு ஆதரவுக்கு உத்தரவாதம் அளித்த திரு மோடி, ஆயுஷ் மருத்துவ முறைகளை விலைக் குறைந்த ஆயுஷ் சேவைகள் மூலம் பிரபலப்படுத்துவதற்காக தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

கல்வி முறைகளை வலுப்படுத்துவதற்கும், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் தரங்களை உறுதிப்படுத்துவதற்கும், மூலப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அது பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

பல்வேறு தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுர்வேதம் மற்றும் இதர இந்திய மருத்துவ முறைகள் குறித்த நமது கொள்கை உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவ திட்டத்தோடு ஒத்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவ உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து கற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி மாணவர்கள் வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகளாவிய ஆரோக்கியம்  குறித்து சிந்திப்பதற்கான சரியான நேரம் இது என்று கூறினார். இது குறித்த சர்வதேச உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

ஆயுர்வேதம் சார்ந்த மற்றும் உடல் நலத்தை மேம்படுத்த கூடிய உணவுப் பொருட்களை ஊக்கப்படுத்துவதற்கான தேவை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தினையின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

ஆயுர்வேதத்தில் நமது சாதனைகளை தொடருமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். "உலகை நமது நாட்டுக்கு கொண்டு வரும் சக்தியாக ஆயுர்வேதம் இருக்கட்டும். நமது இளைஞர்களுக்கு அது வளத்தை உண்டாக்கட்டும்," என்று அவர் கூறினார்.

------



(Release ID: 1704635) Visitor Counter : 180