பிரதமர் அலுவலகம்

டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீலின் சுயசரிதை வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2020 2:33PM by PIB Chennai

 

மகாராஷ்டிர முதல்வர் திரு உத்தவ் தாக்கரே அவர்களே, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் திரு தேவேந்திர பட்னவிஸ் அவர்களே, திரு சந்திரகாந்த் பாட்டீல் அவர்களே, திரு ராதாகிருஷ்ண பாட்டீல் அவர்களே, திரு சுஜய் விக்கே பாட்டீல் அவர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இதர மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை விவசாய நண்பர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே! சத்ரபதி சிவாஜி மகராஜ் அவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்தி, வீரமகன்கள் மற்றும் மகள்களின் நிலமான மகாராஷ்டிராவை வணங்குகிறேன்!!!

இந்த புனித நிகழ்வில் கலந்து கொள்ள என்னை அழைத்த ராதாகிருஷ்ண பாட்டீல் அவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் அகமது நகரில் உள்ள எனது அனைத்து நண்பர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். முதலில் நான் உங்களுடன் இணைந்து நேரில் பங்குபெறுவதாகத் தான் இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, மெய்நிகர் முறையில் நாம் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம்.

நண்பர்களே,

டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீலின் சுயசரிதை இன்று வெளியிடப்பட்டாலும், அவரது வாழ்க்கை வரலாற்றை மகாராஷ்டிராவின் அனைத்துப் பகுதிகளிலும் காண முடியும். டாக்டர் வித்தல்ராவ் விக்கே பாட்டீல் அடியொற்றி செயல்பட்ட பாலாசாகிப் விக்கே பாட்டீல், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகளின் வாழ்க்கையின் சுமைகளைக் குறைத்தது, அவர்களின் துன்பங்களைக் குறைத்தது ஆகியவற்றில்தான் விக்கே பாட்டீல் வாழ்க்கை முழுக்க கவனம் செலுத்தினார். அவர் தன்னுடைய சுயசரிதையையும் எழுதியுள்ளார்.

சமூகத்தின் மேன்மைக்காக எப்போதும் உழைத்தவர் விக்கே பாட்டீல். சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், ஏழைகள் மற்றும் கிராமங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எப்போதும் அவர் வலியுறுத்தி வந்தார். பாலாசாகிப் விக்கே பாட்டீலின் இந்த அணுகுமுறைதான் மற்றவர்களிடம் இருந்து அவரை தனித்துவமாக்கிக் காட்டியது.

கிராமங்கள், ஏழைகளின் மேம்பாட்டுக்கும், அவர்களுடைய கல்விக்கும், மகாராஷ்டிராவில் கூட்டுறவு அமைப்புகளின் வெற்றிக்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள், அளித்த பங்களிப்புகள் ஆகியவை வரக்கூடிய தலைமுறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும். எனவே, பாலாசாகிப் விக்கே பாட்டீலின் சுயசரிதை நம் அனைவருக்கும் முக்கியமானது,

நண்பர்களே,

ஏழைகள், விவசாயிகளின் துன்பங்களை டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் புரிந்து கொண்டிருந்தார். அதனால் விவசாயிகளை திரட்டி, கூட்டுறவு அமைப்புகள் மூலம் அவர்களை ஒன்று சேர்த்தார். அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பாட்டீல், மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல பகுதிகளில் கூட்டுறவு அமைப்புகளை ஊக்குவித்தார்.

கிராமப்புற கல்வி குறித்து நாட்டில் அதிகம் பேசப்படாதிருந்த காலத்தில், பிரவரா ஊரகக் கல்வி சங்கம் மூலம் கிராமங்களின் இளைஞர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவதற்கு டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் பணியாற்றினார். கிராமப்புற இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்து, தொழில் திறன் பயிற்சி அளிக்க இந்தச் சங்கம் மூலம் பாட்டீல் அரும்பணி ஆற்றினார்.

கிராமங்களில் விவசாயம் குறித்த கல்வியின் முக்கியத்துவத்தை விக்கே பாட்டீல் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ஒரு நபர் என்ன தான் கல்வி கற்றிருந்தாலும், அவருக்கு விவசாயத் திறன்கள் இல்லையென்றால் அவரால் விவசாயம் செய்ய முடியாது. நிலைமை இவ்வாறு இருக்கையில், நாம் ஏன் வேளாண்மையை ஒரு தொழில் என்று அழைக்கக்கூடாது?

நண்பர்களே,

பாலாசாகேப் விக்கே பாட்டீலின் மனதில் இந்தக் கேள்வி போகிறபோக்கில் எழவில்லை. தசாப்தங்களாக களத்தில் அவர் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை அவர் கூறினார். அவரது கேள்விக்கான பதில்கள் இன்றைய வரலாற்று சிறப்பு மிக்க வேளாண் சீர்திருத்தங்களில் இருக்கின்றன. இன்றைக்கு முன்னோடி விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் நிலைக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன.

சர்க்கரை, மகாராஷ்டிராவில் புரட்சியை உருவாக்கியுள்ளது, பால் குஜராத்தில் புரட்சியை உருவாக்கியுள்ளது, கோதுமை பஞ்சாபில் புரட்சியையும், மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது; உள்ளூர் பொருளாதாரம் மற்றும் உள்ளூர் தொழில்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய முக்கியத்துவம் நாட்டை முன்னேற்றி செல்லும்.

நண்பர்களே,

சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உணவளிக்க போதிய விளைச்சல் இல்லாத நிலையில், பயிர் சாகுபடியை எப்படி அதிகரிக்கலாம் என்ற யோசனைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுத்தது. ஆனால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில் கவனம் இருந்ததால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

ஆனால் தற்போது முதல் முறையாக இந்த சிந்தனை மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இப்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, அதற்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதார விலையின் அமல்படுத்துதல் மற்றும் உயர்வு, வேம்பு தடவிய யூரியா விநியோகம், சிறந்த பயிர்க் காப்பீட்டு வசதிகள் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி விவசாயிகள் எதிர்கொள்ளும் சிறு பிரச்சனைகளையும் களைய முயற்சிகளை எடுத்து வருகிறது.. பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜ்னா போன்ற திட்டங்கள் காரணமாக, விவசாயிகள், சிறு செலவுகளுக்காக இப்போது யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் போனது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப் படுகிறது. சொல்லப்போனால், குளிர்பதன வசதி அளித்தல், சங்கிலித் தொடர்கள், மெகா உணவுப் பூங்காக்கள் மற்றும் வேளாண் - பதப்படுத்தல் கட்டமைப்பு போன்றவற்றை மேம்படுத்த முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

நண்பர்களே,

இயற்கை சூழலுக்கு ஏற்ற நிலையில் நடைபெறும் பாரம்பரிய விவசாயம் குறித்த அறிவைப் பாதுகாக்க வேண்டும் என்று பாலாசாகிப் விக்கே பாட்டீல் வலியுறுத்தினார். பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதுடன், வேளாண்மையில் புதிய மற்றும் பழைய நடைமுறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். கரும்பு சாகுபடியில் பழைய மற்றும் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கரும்பில் இருந்து சர்க்கரை எடுப்பதுடன், எத்தனால் தயாரிப்பிலும் கரும்பாலைகள் ஈடுபடுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகள் சுமார் 100 மகராஷ்டிராவில் உள்ளன. பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது அதிகரிக்கும் போது, எண்ணெய்க்கு செலவிடப்படும் தொகை விவசாயிகளின் சட்டைப்பைகளுக்கு திரும்பும்.

நண்பர்களே,


மகாராஷ்டிராவின் கிராமங்களில் குடிநீர், பாசன நீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எப்போதும் டாக்டர் பாலாசாகிப் விக்கே பாட்டீல் அதிக அக்கறை காட்டினார். 2014-க்கு பின்னர், ஒவ்வொரு கிராமத்திலும், வீட்டிலும் தண்ணீர் கிடைப்பதற்காக, இந்த முயற்சிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் தேவேந்திர பட்னவிஸ் அவர்களின் ஆட்சியில் வழங்கப்பட்டது என்பதை நாம் இன்று அதிக திருப்தியுடன் கூறலாம். பிரதமரின் கிரிஷி சின்சயி யோஜ்னா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் 26 திட்டங்களின் பணிகளை விரைந்து முடிக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்கள் இப்போது முடிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் 9 திட்டங்களின் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இவற்றின் மூலம் சுமார் 5 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும்..

அதேபோல 2018 ஜூலை மாதம் மகாராஷ்டிராவில் மேலும் 90 பெரிய மற்றும் சிறிய பாசனத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் அடுத்த 2-3 ஆண்டுகளில் நிறைவடையும். அவற்றின் மூலம் 4 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும். அடல் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டம், மகாராஷ்டிராவில் நிலத்தடி நீர்வளம் குறைவாக உள்ள 13 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

நண்பர்களே,

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று காலத்தில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.

நண்பர்களே,

முத்ரா திட்டத்தின் மூலம் கிராமங்களில் சுயவேலை வாய்ப்பு பெருகியுள்ளது. சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் வங்கிகளில் எளிதாகக் கடன் வாங்க முடியும். முன்பு கிசான் கடன் அட்டை மறுக்கப்பட்ட இரண்டரை கோடி பேருக்கு இப்போது இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு தன்னம்பிக்கை பெருகச் செய்தால், தற்சார்பு என்ற நமது இலக்கை நோக்கிய முயற்சிகள் பலப்படுத்தப்படும். கிராமங்களில் இதுபோன்ற தன்னம்பிக்கையை உருவாக்க பாலாசாகிப் விக்கே பாட்டீல் விரும்பினார். இந்த சுயசரிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் புதிய ஞானம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். பாலாசாகேப் விக்கே பாட்டீல் அவர்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை தலை வணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!

ஆனால், என்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு முன், அனைவருக்கும், குறிப்பாக மகாராஷ்டிரா மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் இன்னமும் கொரோனாவின் பிடியில் தான் இருக்கிறோம். மகாராஷ்டிராவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. எனவே, முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு நான் மகாராஷ்டிராவின் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நாம் இந்தப் போரைக் கட்டாயம் வெல்வோம், நாம் இதை வெல்ல வேண்டும், நாம் வெற்றி பெறுவோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி

                                        -------


(வெளியீட்டு அடையாள எண்: 1666157) வருகையாளர் எண்ணிக்கை : 177