சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 பாதித்தவர்களில் ஒரே நாளில் குணம் அடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா சாதனை - ஒரே நாளில் 51,255 பேர் குணம் பெற்றனர்

குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 11.5 லட்சம்

குணம் பெறுவோர் விகிதம் 65.44% என புதிய உச்சம் தொட்டது

தொற்றுநோயால் மரணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து
2.13% ஆக உள்ளது

Posted On: 02 AUG 2020 12:40PM by PIB Chennai

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர். 51,225 பேர் குணம் பெற்று வீடு திரும்பியதை அடுத்து, இந்தியாவில் கோவிட்-19 நோயில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,45,629 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் குணம் அடைவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவை எட்டியுள்ளதை அடுத்து, கோவிட் பாதிப்பில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இன்னும் அதிகமான கோவிட் 19 நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்புகின்றனர்.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் கடைபிடித்து வரும் ஒருங்கிணைப்புடன் கூடிய கோவிட்-19 மேலாண்மைத் திட்டம், முன்கள சுகாதார அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களின் தன்னலமற்ற தியாகம், நாடு முழுக்க கோவிட் -19 பாதிப்புக்கு எதிராகப் போராடி வருபவர்களின் முயற்சிகள் காரணமாக, இதில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

குணம் பெறுபவர்கள் மற்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் முறையாக, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. அப்போது அந்த இடைவெளி 1,573 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி இந்த இடைவெளி 5,77,899  ஆக உள்ளது. தற்போது கோவிட் நோய் பாதிப்புக்காக 5,67,730 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 32.43 சதவீதம். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

விரிவான சிகிச்சைக் கட்டமைப்புத் தரங்களின் அடிப்படையிலான சிறப்பான நோய்க் கட்டுப்பாட்டு நடைமுறைகள், தீவிர மருத்துவப் பரிசோதனை மற்றும் தரநிலைப்படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகளை வெற்றிகரமாகவும், ஒருங்கிணைந்தும் அமல்படுத்தியதாலும், குணம் அடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மரண விகிதம் குறைந்து வருகிறது. இந்தத் தொற்று நோயால் மரணம் அடைவோர் சதவீதம் 2.13 சதவீதம் என்ற நிலையில், உலக அளவில் இந்தியாவில் தான் குறைந்தபட்சமாக உள்ளது.


 



(Release ID: 1643008) Visitor Counter : 190