நிதி அமைச்சகம்

தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.


தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் அமலாக்கத்தில் நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு.

Posted On: 12 JUL 2020 11:51AM by PIB Chennai

இந்தியாவில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கான - அதாவது ரூ.20 லட்சம் கோடி அளவிலான சிறப்புப் பொருளாதார மற்றும் விரிவான தொகுப்புத் திட்டத்தை 2020 மே 12ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சிய நோக்கிலான அழைப்பை அவர் விடுத்தார். தற்சார்பு இந்தியாவுக்கு - பொருளாதாரம், கட்டமைப்பு, செயல்பாட்டு முறை, துடிப்பான மக்கள், தேவை என்ற ஐந்து அம்சங்கள் தான் தூண்களாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, 2020 மே 13 முதல் 17 ஆம் தேதி வரையில் தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகள் மூலம், தற்சார்பு இந்தியாவுக்கான திட்டங்களின் விவரங்களை நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகங்கள், தங்கள் இலாக்கா தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக அமல் செய்யத் தொடங்கின. பொருளாதாரத் தொகுப்புத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து தொடர்ச்சியாக நிதி அமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.

திருமதி நிர்மலா சீதாராமன் கடைசியாக மேற்கொண்ட ஆய்வின் போது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் என பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப் பட்டிருந்தன:

 

1. அரசுப் பணிகளுக்கான ரு.200 கோடி வரையிலான டெண்டர்களுக்கு உலக அளவிலான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படாது.

உள்நாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில், பொது நிதி விதிமுறைகள் 2017 விதி எண் 161 (iv) மற்றும் உலக அளவிலான டெண்ர்கள் குறித்த ஜி.எப்.ஆர். விதிமுறைகளில் செலவினங்கள் துறை திருத்தம் செய்துள்ளது. இப்போது, அமைச்சரவைச் செயலகத்தின் முன் ஒப்புதல் பெறப்படாத வரையில், ரூ.200 கோடி வரையிலான டெண்டர்களுக்கு உலக அளவிலான விசாரணைகள் (ஜி.டி.இ.) கோரப்படாது.

 

2. ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம்

ரயில்வே, சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் மத்திய பொதுப் பணித் துறைகளில் ஒப்பந்தப் பணிகளை முடிப்பதற்கான கெடுவை 6 மாதங்கள் வரை நீட்டிப்பதாக நிதி அமைச்சர் அறிவித்தார். ஈ.பி.சி. மற்றும் சலுகை ஒப்பந்தங்களின் கீழானவையும் இதில் அடங்கும்.

அதன்படி ஒப்பந்தப் பணியை முடிப்பதற்கான காலம் மூன்று மாதங்களுக்கும் குறையாத அளவில், ஆறு மாதங்களுக்கும் மிகாத அளவில் நீட்டிப்பதற்கும், அதற்கு எந்த செலவினம் அல்லது அபராதம் விதிக்கப்படாது என்றும் செலவினங்கள் துறை எப்.எம்.சி. பிரிவைப் பயன்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் / பொருள்கள் வழங்குநருக்கு அவர்கள் அளித்துள்ள பொருள்கள் / முடித்துள்ள பணிகளில் மொத்த ஒப்பந்த மதிப்பீட்டு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப செயல்பாட்டு உத்தரவாத மதிப்பைத் திருப்பி அளிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதே நடைமுறை பல்வேறு துறைகள் / அமைச்சகங்களிலும் அமல் செய்யப்படுகிறது.

 

3. மாநில அரசுகளுக்கு ஆதரவு அளித்தல்

முன் எப்போதும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளின் அடிப்படையில் 2020-21ஆம் ஆண்டில் மட்டும் மாநிலங்கள் வாங்கும் கடன் அளவை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கிடைக்கும்.

முடக்கநிலை அமல் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு நெருக்கடியில் தவிக்கும் மாநில அரசுகளின் நிதி நிலைக்கு ஆதரவாக இருக்கும் முயற்சியாக, 2020-21ஆம் ஆண்டுக்கான உத்தேச மாநில  ஒட்டுமொத்த உற்பத்தியில் (Gross State Domestic Product – GSDP) 2 சதவீத அளவுக்குk கூடுதலாகk கடன் வாங்க அனுமதி அளித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் செலவினங்கள் துறை கடிதங்கள் அனுப்பியுள்ளது. அதற்கான மாநில அளவிலான சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இது இருக்கும்.

4. சிறு குறு நடுத்தரத் தொழில் பிரிவினர் உட்பட வர்த்தகத் துறையினருக்கு பிணை இல்லாக் கடனாக 3 லட்சம் கோடி ரூபாய்

 

வர்த்தகத் துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக 29 பிப்ரவரி 2020 தேதிப்படி நிலுவையில் உள்ள கடன் தொகையில் 20 சதவிகிதம் கூடுதல் பணி மூலதனக் கடனாக, சலுகை வட்டி விகிதத்துடன் குறித்த காலக் கடன் வழங்கப்படும். இதுவரை கடன் தொகை, முறையாக திருப்பி செலுத்தப்பட்டு வந்து கொண்டிருந்த 100 கோடி ரூபாய் பணப்புழக்கம் உள்ள, 25 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ள தொழில் அமைப்புகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் உத்திரவாதம் அல்லது பிணை எதுவும் அளிக்கத் தேவையில்லை. 45 இலட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் மூன்று லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் அளித்து, இதற்கான நூறு சதவிகித உத்திரவாதத்தை மத்திய அரசு அளிக்கும்.

 

அமைச்சரவை ஒப்புதல் 20.5.2020 அன்று அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை நிதிச் சேவைத்துறை 23.5.2020 அன்று வெளியிட்டது. அவசரகாலக் கடனுதவி உறுதித் திட்டம் நிதியம் (Emergency Credit Line Guarantee Scheme - ECLGS) 26.5.2020 அன்று பதிவு செய்யப்பட்டது. ஒன்றரை மாத குறுகிய காலத்தில், தொழில் நிறுவனங்களை அடையாளங்கண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 9 ஜூலை 2020 வரையிலான காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பின்வருமாறு:

 

 

வங்கி

மொத்தம் கணக்குகள்

அனுமதி அளிக்கப்பட்டவை

மொத்தம் கணக்குகள்

மொத்தம் பட்டுவாடா செய்யப்பட்டவை

மொத்தம் தொகை கோடி ரூபாயில்

அனுமதி அளிக்கப்பட்டது

மொத்தம் தொகை கோடி ரூபாயில்

பட்டுவாடா செய்யப் பட்டவை

பொதுத்துறை வங்கிகள்

3270305

1492749

68145.40

38372.88

தனியார் துறை வங்கிகள்

444242

172690

51953.97

23615.02

மொத்தம்

 

3714547

1665439

120099.37

61987.90

ஆதாரம்: 12 பொதுத்துறை வங்கிகள் 22 தனியார் துறை வங்கிகள் 21வங்கி சாரா நிதி நிறுவனங்கள்.

5. வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்காக பகுதி கடன் உறுதித்திட்டம் 2.0 – ரூபாய் 45 ஆயிரம் கோடி

 

தற்போதுள்ள பகுதிக் கடன் உறுதித்திட்டம் (Partial Credit Guarantee Scheme - PCGS) புனரமைக்கப்படும். தரத்தில் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிதிநிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் ஆகியவற்றின் கடனுக்கும் இது பொருந்தும் வகையில் புனரமைக்கப்படும். பொதுத்துறை வங்கிகளில் முதலாவது இழப்பிற்கு சவரின் கேரன்டி எனப்படும் அரசாங்கத்தின் உத்திரவாதம் 20 சதவிகிதம் மத்திய அரசால் வழங்கப்படும்.

 

 பி சி ஜி எஸ் (PCGS) திட்டத்திற்கு 20.5.2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான செயல்பாட்டு விதிமுறைகளும் 20.5.2020 அன்றைய தினமே வெளியிடப்பட்டது. போர்ட்ஃபோலியோக்களை வாங்குவதற்காக வங்கிகள் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்புதல் அளித்துள்ளன. 3 ஜூலை 2020 தேதியின்படி கூடுதலாக மேலும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாங்குவதற்காக ஒப்புதல்கள் /விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

 

6. நபார்டு மூலமாக விவசாயிகளுக்கு, கூடுதலாக அவசரகால மூலதன நிதி அளிப்பதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய்

 

கோவிட் காலத்தின் போது கிராமப்புற வங்கிகளுக்கும் (RRB), கூட்டுறவு வங்கிகளுக்கும் முன்கூட்டியே அளிக்கப்படும் வகையிலான மறு கடனுதவி திட்டத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வசதித் திட்டத்தின் மூலமாக 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் இவர்களில் பெரும்பாலானோர் அறுவடைக்கு பிந்தைய காலத் தேவைகளும், கரீஃப் விதைப்புத் தேவைகளும் உள்ள சிறு குறு விவசாயிகள்.

 

விவசாயிகள் கரீஃப் கால விதைப்புப்பணிகள் ஏற்கனவே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 6.7.2020 தேதியின் படி இந்த சிறப்புக் கடன் உதவித்திட்டத்தின் கீழ், 30,000 கோடி ரூபாயில் 24,876.87 கோடி ரூபாய் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

 

7. டி டி எஸ் /டி சி எஸ் விகிதத்தைக் குறைத்தல் மூலமாக 50,000 கோடி ரூபாய் பணப்புழக்கம்

 

இந்திய குடிமக்களுக்கு சில குறிப்பிட்ட தொகைகளுக்காக டிடிஎஸ் (TDS) விகிதம் மற்றும் 14 மே 2020 முதல் 31 மார்ச் 2021 வரையிலான காலத்திலான பணப்பரிமாற்றப் பரிவர்த்தனைகளுக்கு டிசிஎஸ் (TCS) விகிதம் ஆகியவை 25 சதவீதம் குறைக்கப்பட்டதாக வருவாய்த்துறை 3.5.2020 அன்று வெளியிட்ட தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

 

 

8. இதர நேரடி வரி நடவடிக்கைகள்

 

ஜூலை 3, 2020 தேதியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 20.44 லட்சத்துக்க்கும் அதிகமான வழக்குகளில் ரூ 62,361 கோடிக்கும் அதிகமான திரும்ப செலுத்துதல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏப்ரல் 8 மற்றும் ஜூன் 30-க்கு இடையில் வழங்கியது. நிதி ஆண்டு 2019-20-க்கான வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்வதற்கானக் கடைசி தேதி, 31 ஜூலை, 2020-இல் இருந்து (தனி நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு) 31 அக்டோபர், 2020 வரையிலும், (நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு) 30 நவம்பர், 2020 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக 24.6.2020 தேதியிட்ட அறிவிப்பில் வருமான வரித் துறை தெரிவித்திருந்தது. மேலும், வரித் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஏற்கனவே இருந்த 30 செப்டம்பர், 2020-இல் இருந்து 31 அக்டோபர், 2020-க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

குறைபாட்டால் ரத்து செய்யப்படும் மதிப்பீடுகளுக்கான காலக்கெடுத் தேதியை 30 செப்டம்பர், 2020-இல் இருந்து 31 மார்ச், 2021 என வருவாய்த் துறை நீட்டித்தது. 'விவாத் சே விஷ்வாஸ்' திட்டத்தின் கீழ் கூடுதல் தொகை இல்லாமல் கட்டணம் செலுத்துவதற்கானக் கெடு 31 டிசம்பர், 2020 வரையில் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பான திருத்தங்கள்  'விவாத் சே விஷ்வாஸ்சட்டம், 2020-இல் உரிய நேரத்தில் செய்யப்படும் என்றும் 24.6.2020 தேதியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விவாத் சே விஷ்வாஸ் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 20 மார்ச், 2020-இல் இருந்து 30 டிசம்பர், 2020 வரையிலான காலக்கெடுத் தேதிகள் 31 டிசம்பர், 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

9. நொடித்துப்போதல் மற்றும் திவாலாதல் குறியீடு (IBC) தொடர்பான நடவடிக்கைகள் மூலமாக, தொழில் செய்தலை மேலும் எளிதாக்குதல்

 

நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் குறியீடு, 2016-இன் நான்காம் பிரிவின் கீழ் வழுவதலுக்கான வரையறையை (ஏற்கனவே இருக்கும் ரூ. 1 லட்சத்தில் இருந்து) ரூ. 1 கோடியாக பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் உயர்த்தியது. அதாவது, "நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் குறியீடு, 2016-இன் (2016-இன் 31) நான்காம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, குறிப்பிடப்பட்டுள்ள பிரிவின் நோக்கங்களுக்கான வழுவதலுக்கான குறைந்தபட்ச தொகை ரூ. 1 கோடியாக" என 24.6.2020 தேதியிட்ட அறிவிப்பு மூலம் மத்திய அரசு தெரிவித்தது.

 

குறியீட்டின் 240அ பிரிவின் படி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நொடித்துப்போதல் சிறப்புத் தீர்வை பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் இறுதி செய்து வருகிறது. இது விரைவில் வெளியிடப்படும்.

 

குறியீட்டின் 7, 9, 10-ஆம் பிரிவுகளின் கீழ் ஆறு மாதங்கள் வரையிலோ அல்லது ஒரு வருடத்துக்கு மிகாமல் அதற்கு மேலோ பெருநிறுவன நொடித்துப் போதல் தீர்வு செயல்முறையை (CIRP) தற்காலிகமாக நிறுத்தி வைக்க, நொடித்துப் போதல் மற்றும் திவாலாதல் குறியீடு, 2016-இன் 10அ பிரிவில் இணைப்பதற்காக நொடித்துப்போதல் மற்றும் திவாலாதல் குறியீடு சட்டத் திருத்தம், 2020  5 ஜூன், 2020 அன்று பிரகடனப்பட்டுள்ளது.    

 

10. வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/குறு நிதி நிறுவனங்களுக்கான ரூ 30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம்

 

வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/குறு நிதி நிறுவனங்களுக்கான ரூ 30,000 கோடி சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பிறகு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கையை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு 1 ஜூலை, 2020 அன்றே இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியிருந்தது. சுமார் ரூ 9,875 கோடி நிதிக்காக 24 விண்ணப்பங்கள் 7 ஜூலை, 2020 வரை எஸ்பிஐ கேப்பால் (SBICAP) பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான முதல் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மீதமிருப்பவையும் பரிசீலிக்கபப்ட்டு வருகின்றன.

 

***
 



(Release ID: 1638130) Visitor Counter : 566