சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலகளவில் ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவில் மிக குறைவு

தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4.4. லட்சத்தை நெருங்குகிறது, குணமடைந்தோர் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கை விட
1.8 லட்சத்துக்கும் அதிகமாகும்
தேசிய அளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 விழுக்காட்டை தாண்டியது

Posted On: 07 JUL 2020 2:26PM by PIB Chennai

ஒரு மில்லியனுக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின், 2020 ஜூலை 6 தேதியிட்ட சூழல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 505.37 மட்டுமே. அதே சமயத்தில் உலக சராசரியோ 1453.25 ஆகும்.  

ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையானது சிலி நாட்டில் 15,459.8 ஆகும். இது பெரு நாட்டில் 9070.8 ஆகவும், அமெரிக்காவில் 8560.5, பிரேசிலில் 7419.1, ஸ்பெயினில் 5358.7 ஆகவும் உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சூழல் அறிக்கையானது, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு மிகக் குறைந்த இறப்புகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 14.27 மட்டுமே. அதே நேரத்தில், உலக சராசரி இதை விட 4 மடங்கு அதிகமாக, அதாவது 68.29 ஆக உள்ளது.

பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை 651.4 ஆகும். இது ஸ்பெயினில் 607.1, இத்தாலியில் 576.6, பிரான்சில் 456.7, அமெரிக்காவில் 391 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் கொவிட்-19 தொடர்பான சிகிச்சைகளுக்காக மருத்துவ உள்கட்டமைப்பு போதுமான அளவிலும், சிறப்பாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உதவி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. 2020 ஜூலை 7 நிலவரப்படி, மிகக் குறைந்த அளவில் அறிகுறிகள் உள்ளவர்கள் முதல் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வரை கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 1201 மருத்துவமனைகளும், 2611 மருத்துவ கவனிப்பு மையங்களும், 9,909 கொவிட் கவனிப்பு மையங்களும் உள்ளன. இத்தகைய மருத்துவ வசதிகளால், குணமடைவோர் விகிதம் சீராக மேம்பட்டுள்ளதுடன், இறப்பவர் விகிதமும் குறைந்து வருகிறது.

துவக்கத்திலேயே கொவிட்-19 நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருவதால் குணமடைவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 15,515 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இது வரை 4,39,947 பேர் குணமடைந்துள்ளனர். 

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 61.13 விழுக்காட்டை இன்று எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையை விட 1,80,390 அதிகமாகும்.

தற்போது 2,59,557 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கொவிட்டை கண்டறியும் பரிசோதனைச் சாலைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கும் கூடுதலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து தேசிய அளவில் கொவிட்-19 தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மொத்தம் 1,02,11,092 ஆகும்.

தற்போது 1115, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நமது நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 793, தனியார் பரிசோதனைச் சாலைகள் 322.

· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 598 (அரசு : 372 + தனியார் : 226 ),

· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 423 (அரசு : 388 + தனியார் : 35)

· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 94 (அரசு  : 33 + தனியார் : 61) ஆகும்.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் அண்மைத் தகவல்களுக்கு https://www.mohfw.gov.in/ and @MoHFW_INDIA என்ற இணையதளங்களைத் தவறாமல் பார்க்கவும்.

*****



(Release ID: 1636981) Visitor Counter : 160