பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஏழைகள் நல்வாழ்வுக்கான வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் திரு.நரேந்திரமோடி 20 ஜுன் 2020 அன்று தொடங்கிவைக்க உள்ளார்

6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில், 125 நாட்களுக்கு திட்டமிட்ட இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது
இந்தப் பிரச்சார இயக்கம், வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதோடு தகுந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் வழிவகுக்கும்
ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு பிரச்சார இயக்கத்தின்கீழ், ரூ.50, 000 கோடி மதிப்பிலான அரசுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன

Posted On: 18 JUN 2020 9:24AM by PIB Chennai

நாட்டின் கிராமப்புற மக்களுக்கும் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்கான மாபெரும் கிராமப்புற பொதுப்பணி திட்டமான  ‘கரீப் கல்யான் ரோஜ்கார் அபியான் எனப்படும் ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்பு இயக்கத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   இந்தத் திட்டத்தை, பிரதமர் திரு.நரேந்திரமோடி,  20 ஜுன், 2020 அன்று  பகல் 11 மணியளவில்,  பிகார் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில், காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ளார். பிகார் மாநிலம் ககாரியா மாவட்டம் பெல்தார் வட்டத்திற்குட்பட்ட தெலிஹார் கிராமத்தில், இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.  காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மேலும் 5 மாநில முதலமைச்சர்களும்  சம்பந்தப்பட்ட துறைகளுக்கான மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.   6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்கள்,  பொது சேவை மையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் வாயிலாக இந்திட்டத்தில் பங்குபெறுவதுடன்,  கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

125 நாட்களுக்கு, மாபெரும் பணி அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த இயக்கம்,  முனைப்புடன் கூடிய திட்டமிட்ட அடிப்படையில், ஒரு புறம் புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கு 25 வகையான பணிகளை வேலைவாய்ப்பு அளித்து, நாட்டின் கிராமப்புறங்களில் தகுந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு, மறுபுறம் ரூ.50,000 கோடி நிதி ஆதாரத்திற்கும் வழிவகுக்கும். 

25,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்ட, பிகார், உத்தரபிரப்தேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள முன்னேற்றத்தை விரும்பும் 27 மாவட்டங்கள் உட்பட,  மொத்தம் 116 மாவட்டங்கள், இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 2/3 பங்கு தொழிலாளர்கள், இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ்,  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை,  சுரங்கத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவு,  சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,  எல்லைப்புறச் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் வேளாண்மை போன்ற,  12 பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. 

******



(Release ID: 1632310) Visitor Counter : 276