பிரதமர் அலுவலகம்

போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்

Posted On: 05 MAY 2020 7:02PM by PIB Chennai

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

கடந்த பிப்ரவரியில் போர்ச்சுக்கல் அதிபர் மெர்சிலோ ரெபெல்லோ டி சவுசா இந்தியாவுக்கு வருகை புரிந்ததை அந்த உரையாடலின்போது பிரதமர் நினைவுகூர்ந்தார்.

கோவிட் 19 தொற்று நிலைமை குறித்தும், அதன்மூலம் ஏற்படும் மக்கள் நல்வாழ்வு மற்றும் பொருளாதார பாதிப்புகளைக்  கட்டுப் படுத்துவதற்காக இரு நாடுகளும் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். போர்ச்சுக்கல் நாட்டில் இது தொடர்பான பிரச்சினைகளைச் சாமாளிக்க பிரதமர் கோஸ்டா எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளைப் பாரதப் பிரதமர் பாராட்டினார்.

தொற்றுக் கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன், நிலைமையைச் சமாளிக்க பரஸ்பரம் உதவி செய்து கொள்வது குறித்து இரு தலைவர்களும் முன்வருவதாகக் குறிப்பிட்டனர். கோவிட் 19 தொற்றை ஒழிப்பதற்காக புதிய வழிமுறைகள், ஆய்வுகளில் இணைந்து ஈடுபடுவது என்று இரு தரப்பினரும் இசைந்தனர்.

பொது முடக்கம் காரணமாக போர்ச்சுக்கலில் தங்க நேர்ந்துள்ள இந்தியர்களின் விசாக் காலத்தை அந்நாடு நீடிப்பதற்கு பாரதப் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதைப் போல் இந்தியாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் குடிமக்களுக்கு உரிய வசதிகளை இந்திய அதிகாரிகள் செய்து தருவதைப் பிரதமர் கோஸ்டா பாராட்டினார்.

இரு தலைவர்களும் அவ்வப்போது தொடர்பில் இருக்க இசைந்தனர். அத்துடன், கொரானா தொற்றினால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும், கொரானாவுக்குப் பின் உருவாக இருக்கும் பிரச்சினைகள் ஆகியவை குறித்தும் இரு தரப்பினரும் அவ்வப்போது விவாதிப்பது என்றும் முடிவு செய்தனர்.

****



(Release ID: 1621377) Visitor Counter : 197