பிரதமர் அலுவலகம்

கொரோனா தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல், பரிசோதனைக்கான பணிக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 05 MAY 2020 11:00PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்து உருவாக்குதல், மருந்து கண்டுபிடிப்பு, நோய்க்குறி அறிதல் மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி விரிவான ஆய்வு மேற்கொண்டார். தரமான மருந்து தயாரிப்புக்கு பெயர் பெற்ற இந்திய மருந்துகள் உற்பத்தித் துறை, அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகவும், உலக அளவில் கிடைப்பவையாகவும் உள்ளன. இப்போது நோய்த் தடுப்பு மருந்து உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்துத் துறை புதுமை சிந்தனையாளர்களாக ஆரம்ப நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதேபோல, இந்தியாவின் கல்வித் துறையினரும், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினரும் இதில் முன்னோடிகளாக உருவாகியுள்ளனர். கொரோனா தடுப்பூசிக்காக 30 இந்திய தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. சில மருந்துகள் மருத்துவப் பரிசோதனைக்கு உரிய நிலையை எட்டியுள்ளன.

அதேபோல, மருந்துகள் தயாரிப்பில் மூன்று அணுகுமுறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்துகளை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்துவது முதலாவது அணுகுமுறை. இந்தப் பிரிவில் குறைந்தபட்சம் 4 மருந்துகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. அடுத்தது புதிய மூலக்கூறுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள். மூன்றாவதாக, பொதுவான வைரஸ் எதிர்ப்பு குணங்களைக் கொண்ட மருந்துகளைத் தயாரிக்க தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் பொருள்களைப் பரிசோதித்தல்.

நோய்க்குறி அறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனையில், பல கல்வி ஆராய்ச்சி நிலையங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஆர்.டி.-பி.சி.ஆர். அணுகுமுறை மற்றும் நோய் எதிர்ப்பு அணுக்களை கண்டறியும் இரண்டு முறைகளின் அடிப்படையிலும், புதிய பரிசோதனை முறைகளை உருவாக்கியுள்ளன. மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஆய்வகங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம், இந்த வகையிலான பரிசோதனைகளின் திறன் அபரிமிதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. பரிசோதனைக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொறுப்பை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கூட்டமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது. இப்போதைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் துறையில் நீண்டகாலம் பயன்தரக் கூடிய, திறன்மிகுந்த தொழில் துறையை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

கல்வி, தொழில் துறைகளும், அரசும் ஒன்று சேர்ந்து, வேகமாகவும், திறன் வாய்ந்த ஒழுங்குமுறை நடைமுறைகளை உருவாக்குவதாகவும் செயல்படும் விதம் குறித்து பிரதமர் திரு மோடி ஆய்வு மேற்கொண்டார். இதுபோன்ற வேகமும் ஒத்துழைப்பும் நிலைப்படுத்திய நடைமுறை பட்டியலில் உட்பொதிந்திருக்கும் அம்சங்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். நெருக்கடி காலத்தில் சாத்தியமாகக் கூடிய விஷயங்கள், நமது அறிவியல் ரீதியிலான செயல்பாடுகளில் சாத்தியமாகக் கூடிய இயல்பான விஷயங்களாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மருந்து கண்டுபிடிப்பதில் கணினி அறிவியல், வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகள் இணைந்து செயல்படுவதைப் பாராட்டிய பிரதமர், மருந்து உருவாக்கத்தின் செயல்பாட்டை கம்ப்யூட்டரில் உருவாக்கி ஆய்வக சோதனை நடத்துவதற்கு தொழில்நுட்ப அடிப்படையிலான போட்டிகள் நடத்தலாம் என்று அவர் கூறினார். அதில் வெற்றி பெறுபவர்களை, மேற்கொண்டு ஆய்வுகளுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.

அடிப்படை அறிவியலில் இருந்து, நடைமுறையில் பயன்படக் கூடிய விஷயங்களுக்கான நிலை வரையில் அறிவியலைப் பயன்படுத்தும் இந்திய விஞ்ஞானிகளின் புதுமை சிந்தனை மற்றும் இயல்பு தன்மைகள், தொழில் துறையுடன் கை கோர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்று பிரதமர் கூறினார். இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நமது அணுகுமுறையில் இதுபோன்ற பெருமைக்குரிய, உணர்வுகள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் உலக நாடுகளை அறிவியலில் நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாமல், அவர்களைவிட சிறந்தவர்களாக உருவாக முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

***



(Release ID: 1621360) Visitor Counter : 253