ரெயில்வே அமைச்சகம்

சரக்கு ரயில்களை இயக்குவது தொடர்பாக சரக்குப் போக்குவரத்து நிறுவனத் தலைவர்களுடன் ரயில்வே அமைச்சர் ஆலோசனை

Posted On: 01 MAY 2020 5:20PM by PIB Chennai

ரயில்வே அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்திய ரயில்வேயின் சரக்கு இயக்கத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய சரக்குப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுடனான கூட்டத்தை இன்று நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற நீண்ட கூட்டத்தில் பங்கேற்றவர்களிடமிருந்து, சரக்குப் போக்குவரத்து இயக்கத்தை அதிகத் திறனுடனும், இலாபம் ஈட்டும் வகையிலும் நடத்துவது தொடர்பான வாய்ப்புள்ள கொள்கைத் தலையீடுகள் பற்றி பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

கொவிட் நெருக்கடி காலத்தில் ரயில்வே முக்கியமான பங்காற்றி வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தச் சிக்கலான தருணத்தை ரயில்வே, மிகுந்த கவலையுடனும், மனித நேயத்துடனும் பார்த்து, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச்சென்று, உயிர் நாடியாகச் செயல்பட்டது என்று கூறினார். அத்துடன் நில்லாமல், ‘’ இந்த கால அவகாசத்தை, மெயின் லைன் தொடர்பை அதிகரித்தல், பல காலமாக நிலுவையில் இருந்த பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பழுதடைந்த பாலங்களை அகற்றி, பழுது நீக்குதல், தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் இருந்த எங்கள் பணிகளை நிறைவு செய்யப் பயன்படுத்திக் கொண்டோம்’’ என்று திரு. கோயல் தெரிவித்தார்.

தொழில்துறையினரின் யோசனைகளை வரவேற்ற ரயில்வே அமைச்சர், சரக்குப் போக்குவரத்தை இலாபகரமாக இயக்குவதற்கான புத்தாக்கத் தீர்வுகள் மிகவும் அவசியமானவை என்று கூறினார். ‘’சரக்கு இயக்கத்தை விரைவுபடுத்துவதற்கு ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு நில்லாமல் செல்லும் விரைவு ரயில்கள், சிறந்த சிக்னல் முறைகள், சிறந்த கால அட்டவனை சரக்கு ரயில்கள், சிறந்த நிதிவாய்ப்புகள் நமக்கு மிகவும் தேவையாகும். இதன் மூலமே நாம் மொத்த சரக்குப் போக்குவரத்தில் 2.5 பில்லியன் டன் என்ற இருமடங்கு அளவை எட்ட முடியும் ‘’ என்று திரு. கோயல் தெரிவித்தார்.



(Release ID: 1620110) Visitor Counter : 186