சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் 19 தொற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைய நிலவரங்கள் குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை

கோவிட் 19 தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்காற்றும் அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளுக்கும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

Posted On: 25 APR 2020 3:09PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், புதுதில்லி நிர்மாண் பவனில் இன்று கோவிட் 19 தொடர்பான அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக் குழுவின் பதிமூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ஹர்தீப் எஸ் பூரி; மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர்; மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த ராய்;  மத்திய கப்பல் போக்குவரத்து ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் திரு.மான்சுக் மாண்டவியா; மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வின் குமார் சவபே ஆகியோர் உடனிருந்தனர்.

பாதுகாப்புப் படை தலைமை தளபதி திரு பிபின் ரவாத்; நித்தி ஆயோக் அமைப்பின் நிர்வாக செயல் அதிகாரி மற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள குழு 6ன் தலைவர் திரு.வி பிரகாஷ், திரு அமிதாப் காந்த்; திரு சி கே மிஸ்ரா (சுற்றுச்சூழல் வளங்கள் மற்றும் பருவநிலை மாற்றம்) மற்றும்  அதிகாரம் வழங்கப்பட்டுள்ள குழு 2 ன் தலைவர் டாக்டர் அருண் பாண்டா,  (செயலர், எம்எஸ்எம்இ); - குழு 4 ன் தலைவர் மற்றும் குழு 3 ன் தலைவர் திரு பி டி வகேலா ஆகியோரும் உடனிருந்தனர்

நாட்டில் கோவிட் 19 தொற்றின் சமீபத்திய நிலைமை குறித்தும், நோய் பாதிப்பு மற்றும் அதற்கான மேலாண்மை ஆகியவை குறித்தும் விரிவான விளக்கம் அமைச்சர்கள் குழுவிற்கு காண்பிக்கப்பட்டது.   நோய் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மேலாண்மை, போன்றவற்றுக்கான மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அமைச்சர்கள் குழு விவாதித்தது. கோவிட் 19 தொற்றுக்கு எதிராக அவசர காலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துமாறும் அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. போதுமான அளவு தனிப்பட்ட படுக்கைகள், வார்டுகள் , தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், என் 95 கவசங்கள், மருந்துகள், செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை உள்ள, கோவிட்19 தொற்று  சிகிச்சை அளிப்பதற்கான தனிப்பட்ட மருத்துவமனைகளின் மாநில வாரியான விரங்கள் அமைச்சர்கள் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மூலமாக தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், முகக் கவசங்கள் போன்றவற்றுக்கான உற்பத்தி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது என்றும், இவை போதுமான அளவு கிடைக்கும் என்றும் அமைச்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை நாட்டில் நாளொன்றுக்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் கருவிகளும்,  என் 95 கவசங்களும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது நாட்டில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்க 104 உள்நாட்டு தயாரிப்பாளர்களும், என் 95 முகக் கவசங்கள் தயாரிக்கும் மூன்று நிறுவனங்களும் உள்ளன. இது தவிர உள்நாட்டு தயாரிப்பாளர்களைக் கொண்டு செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்வதும் தொடங்கிவிட்டது. ஒன்பது தயாரிப்பாளர்கள் மூலமாக 59 ஆயிரம் யூனிட் செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை உத்திகள், பரிசோதனை செய்வதற்கான சோதனை கருவிள் நாடு முழுவதும் கிடைக்கச்செய்தல், தீவிர பாதிப்பு பகுதிகளுக்கான விதிகள், தொகுப்பு மேலாண்மை போன்றவை குறித்தும் அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்தது. கோவிட் 19 நோய் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யக்கூடிய திறன் கொண்ட, பொது மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை குறித்தும், இந்த ஆய்வுக்கூடங்களின் மூலமாக, ஒவ்வொரு நாளும் எவ்வளவு சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் அமைச்சர் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதிகாரம் வழங்கப்பட்ட குழுக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகள் குறித்தும் அமைச்சர்கள் குழு விவாதித்தது.ிரு அமிதாப் காந்த், டாக்டர் அருண்குமார் பாண்டா மற்றும் திரு பிரதீப் கரோலா ஆகியோர் பல்வேறு விவரங்களை அமைச்சர் குழுவுக்கு எடுத்துக் கூறினார்கள்

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பிறமாநில தொழிலாளர்களுக்கு உணவளிப்பது போன்ற பணிகளை சுமார் 92 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், சிவில் சமுதாய அமைப்புகள் செய்து வருகின்றன என்றும் அமைச்சர் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு எஸ் டி ஆர் எஃப் நிதியத்திலிருந்து மாநிலங்கள் மூலமாக நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்திய உணவு கழகம் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குகிறது.

தேவையான நேரத்தில் மிகவும் தேவைப்படும் இடங்களில் இந்த தன்னார்வலர்களை (கோவிட் போராளிகளை) பயன்படுத்திக் கொள்வதற்காக, சுகாதாரப் பணியாளர்கள், தேசிய மாணவர் சேவை, நேரு இளைஞர் மையம், தேதிய மாணவர் படை,  மருத்துவர்கள் போன்றவர்களின் விவரங்கள் தேசிய அளவில் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது

தற்போது 1.24 நான்கு கோடி மனித ஆற்றல் பற்றிய புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட உள்ளன என்றும் இவை தொடர்ந்து அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் பல புதிய பிரிவுகள், உட்பிரிவுகள் அந்தந்த நிபுணத்துவத்திற்கு ஏற்ப இணைக்கப்படுகின்றன என்றும், ஒவ்வொரு பிரிவிலும் மாநில, மாவட்ட அளவில் எத்தனை பேர் உள்ளனர் என்பதும், தொடர்பு கொள்ள வேண்டிய மாநில மற்றும் மாவட்ட மைய ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் தொடர்பு எண்களும் விவரங்களில் உள்ளன என்றும் அமைச்சர் குழுவிடம் கூறப்பட்டது.  இந்த புள்ளிவிவரம் இந்த இணையத்தில் உள்ளது https://covidwarriors.gov.in/default.aspx மேலும் திறனை கூட்டுவதற்காக  இது, https://diksha.gov.in/igot/ இந்த வலை தளத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.  மத்திய சுகாதார குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் வலைதளங்கள் மூலமாக கோவிட் 19 போராளிகளுக்கு பயிற்சிளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வலைதளத்தில் 53 மாட்யூல்களைக் கொண்ட 14 பயிற்சி வகுப்புகள் உள்ளன. 113 வீடியோக்களும், 29 ஆவணங்களும் உள்ளன. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து பங்குதாரர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் மிகக் கடின உழைப்புடனும் ஆற்றி வரும் பல்வேறு பணிகளுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார். கோவிட் t9 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் இந்த நோய்க்கு எதிராக பணிபுரியும் சுகாதாரப்பணியாளர்கள் பாரபட்சமாக பாகுபாட்டுடன் நடத்தப்படும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பெருந்தொற்றுநோய் சட்டம் 1897 சட்டத்தில் பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகள் கொண்ட திருத்தங்கள் கொண்டு வருவதற்கான சட்டம் சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.   இது அவர்களுடைய போராட்டம் மட்டுமல்ல; நம் அனைவருடைய கூட்டு முயற்சியாகும். அவர்கள் முன்னணியில் நின்று போராடுகிறவர்கள். ஒரு தேசமாக நாம், அவர்கள் ஆற்றிவரும் பங்கு குறித்து மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுடைய பாதுகாப்பையும் அவர்களுடைய மரியாதையைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளது என்றும், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20% ஆக உள்ளது என்றும் அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்பதாகவே உள்ளது. நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது, தொகுப்பு மேலாண்மை மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான உத்திகள் ஆகியவற்றால் இவ்வாறு நேர்மறை விளைவு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம். நாட்டில், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரிப்பதற்கு, தற்போது சராசரியாக 9.1 நாட்கள் எடுக்கிறது.

இதுவரை 5602 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இது 20.66% சதவீதம் ஆகும் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல் புதிதாக 1429 பேர் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 506 பேருக்கு கோவிட் 19 நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது..



(Release ID: 1618250) Visitor Counter : 266