எரிசக்தி அமைச்சகம்

பொது முடக்க காலத்திலும் என்.டி.பி.சி தடையில்லாமல் மின்சார விநியோகம் செய்கிறது

Posted On: 25 APR 2020 3:31PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரும் மின்சார உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி (NTPC) நிறுவனத்தின் சக்தியை கொரோனா பெருந்தொற்றால் குறைக்க முடியவில்லை.  ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்திக் கழக லிமிட்டெட்டு (NTPC) நாட்டிற்குத் தடையில்லாமல் மின்சார விநியோகம் செய்வதை இந்தக் கொரோனா பெருந்தொற்றால் நிறுத்த முடியவில்லை.  இந்த மகாரத்தின நிறுவனத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படத் தொடங்கின.  மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர்.கே.சிங்கின் தலைமையின் கீழ் மின்சார அமைச்சகத்தின் உதவி மற்றும் வழிகாட்டுதலில் இந்த உற்பத்தி நிலையங்கள் தங்களது உற்பத்தி திறன் அளவு வரை மின் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.

கோவிட்-19 தொற்று உருவாக்கி இருக்கும் நெருக்கடியானது மின்சார பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.  பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் தடையின்றி செயல்பட மின்சாரம் மிகவும் முக்கியமானது ஆகும்.  மின்சாரம் தடையின்றி தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதற்கு நிலக்கரி விநியோகம் சீராக இருக்க வேண்டும். இதனை என்.டி.பி.சி திறம்பட நிர்வகிக்கிறது.

என்.டி.பி.சி ஊழியர்கள் முன்வரிசையில் நின்று 24 மணி நேரமும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்கின்றனர்.  என்.டி.பி.சி தனது உற்பத்தி ஆலைகள் அனைத்தும் ஊரடங்கு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிப்பதோடு சமூக இடைவெளியையும் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மின்உற்பத்தியைத் தாண்டியும், இந்தப் பொதுத்துறை நிறுவனமானது சமூக நல நடிவடிக்கைகளுக்காக நிறைய நன்கொடையையும் வழங்கி வருகிறது.  முன்னுரிமை பெறாத சமுதாயப் பிரிவினர் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் மருத்துவ உதவிகளையும் வழங்கி வருகிறது.  நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அன்றாட நிகழ்வுகளை என்.டி.பி.சி கவனமாகக் கண்காணித்து வருகிறது.



(Release ID: 1618230) Visitor Counter : 211