தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கோவிட்-19 நெருக்கடி சூழ்நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு, ஓய்வறியாத உழைப்பைத் தொடர வேண்டும் என்று தபால் துறையினருக்கு திரு. சஞ்சய் தோட்ரே வேண்டுகோள்.

Posted On: 24 APR 2020 12:19PM by PIB Chennai

கோவிட்-19 பரவல் காலத்தில் தபால் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல் தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே, காணொளிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். தபால்துறை மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றி திருப்தி தெரிவித்த அவர், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தலின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நாட்டு மக்களுக்கு அதிகபட்ச சேவை அளிப்பதில் தபால் துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா நடைமுறையை தபால் துறையினர் பிரபலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பயனாளிகளின் வீட்டு வாசலிலேயே பணம் பட்டுவாடா செய்வதில் மாநில நிர்வாகத்தினர், மாவட்ட அதிகாரிகளுடன் கோட்டத் தபால் தலைமை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முடக்கநிலை அமல் காலத்தில் 2020 ஏப்ரல் 20ஆம் தேதி வரையில், ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான 1.8 கோடி தபால் நிலைய சேமிப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். ரூ.2100 கோடி அளவுக்கான 84 லட்சம் வங்கிக் கணக்குகளுக்கு செய்யப்பட்ட பி.பி.பி. பரிவர்த்தனைகள் இதில் அடங்காது. மேலும், நாடு முழுக்க ரூ.135 கோடி அளவுக்கு 4.3 லட்சம் ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த காலக்கட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 15 லட்சம் ஆதார் அடிப்படையிலான பணப் பட்டுவாடாக்கள் செய்யப்பட்டுள்ளன. முடக்கநிலை காலத்தில் 52 லட்சம் பயனாளிகளுக்கு சேமிப்புக் கணக்குகளில் ரூ.480 கோடி அளவுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் வாழும் சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா நடைமுறை மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பார்சல்களை கொண்டு போய் சேர்ப்பதில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலுமான சேவைகள் குறித்தும் அமைச்சரிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

சேவைகளை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, உதவி மையங்களின் தொடர்பு எண்கள் பற்றிய தகவலைப் பரவச் செய்யவேண்டும் என்று வட்டார / மாநிலப் பிரிவு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.


 



(Release ID: 1617744) Visitor Counter : 215