சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைத் தகவல்கள்

Posted On: 20 APR 2020 5:29PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சியுடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை மிக உயர்நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

அரசு அலுவலகங்கள் செயல்படுவது தொடர்பாக 2020 ஏப்ரல் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை அடுத்து, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தன்னுடைய அதிகாரிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • மீண்டும் பயன்படுத்தக்கூடிய / துணியால் ஆன முகக்கவசத்தை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.
  • கிருமிநீக்க நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
  • கைகளை சோப்பு போட்டு தண்ணீரால் அடிக்கடி கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி நீக்க திரவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொருவருக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.
  • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கடந்த ஏழு நாட்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி, நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 2020 ஏப்ரல் 19 தேதியின்படி 7.5 நாட்களாக இருந்தது (அதற்கு முந்தைய ஏழு நாட்களில்). முடக்கநிலை அமல் செய்வதற்கு முந்தைய வாரத்தில் அது 3.4 நாட்களாக இருந்தது.

ஏப்ரல் 19 ஆம் தேதி நிலவரத்தின்படி, தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாதலில் 18 மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இரட்டிப்பாகும் அவகாசம்: 20 நாள்களுக்கும் குறைவு -

  • டெல்லி (யூனியன் பிரதேசம்) - 8.5 நாள்கள்
  • கர்நாடகா - 9.2 நாள்கள்
  • தெலங்கானா - 9.4 நாள்கள்
  • ஆந்திரப் பிரதேசம் - 10.6 நாள்கள்
  • ஜம்மு காஷ்மீர் (யூனியன் பிரதேசம்) - 11.5 நாள்கள்
  • பஞ்சாப் - 13.1 நாள்கள்
  • சத்தீஸ்கர் - 13.3 நாள்கள்
  • தமிழ்நாடு - 14 நாள்கள்
  • பிகார் - 16.4 நாள்கள்

இரட்டிப்பாகும் அவகாசம்: 20 முதல் 30 நாள்கள் வரை:

  • அந்தமான் நிகோபர் (யூனியன் பிரதேசம்) - 20.1 நாள்கள்
  • ஹரியானா - 21 நாள்கள்
  • இமாச்சலப் பிரதேசம் - 24.5 நாள்கள்
  • சண்டிகார் (யூனியன் பிரதேசம்) - 25.4 நாள்கள்
  • அசாம் - 25.8 நாள்கள்
  • உத்தரகாண்ட் - 26.6 நாள்கள்
  • லடாக் (யூனியன் பிரதேசம்) - 26.6 நாள்கள்

இரட்டிப்பாகும் அவகாசம்: 30 நாள்களுக்கு மேல்:

  • ஒடிசா - 39.8 நாள்கள்
  • கேரளா - 72.2 நாள்கள்

கோவாவில் கோவிட்-19 பாதித்த அனைவரும் குணமாகி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். இப்போது கோவாவில் கோவிட் பாதித்த யாரும் இல்லை. மாகே (புதுச்சேரி), குடகு (கர்நாடகா), பாவ்ரி கர்வால் (உத்தரகாண்ட்) ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில், கோவிட்-19 பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பதிவாகவில்லை. இப்போது அந்தப் பட்டியலில் மேலும் ஆறு மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:

  • ராஜஸ்தானில் துங்கர்பூர் & பாலி
  • குஜராத்தில் ஜாம்நகர் மற்றும் மோர்பி
  • கோவாவில் வடக்கு கோவா
  • திரிபுராவில் கோமதி

நாட்டில்  17,265 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2547 பேர், அதாவது பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 14.75 சதவீதம் பேர் குணமாக்கப் பட்டுள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கோவிட்-19 பாதிப்பு காரணமாக 543 பேர் மரணம் அடைந்துள்ளனர்.



(Release ID: 1616454) Visitor Counter : 277