பிரதமர் அலுவலகம்
குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
19 JUN 2025 5:32PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்.
நண்பர்களே,
இந்தியாவும் குரோஷியாவும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்மைத்துவம் மற்றும் சமத்துவம் போன்ற பொதுவான மதிப்புகளால் ஒன்றுபட்டுள்ளன. கடந்த ஆண்டு, இந்திய மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர், அதே போல குரோஷியா மக்கள் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சை தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்க அவருக்கு வாக்களித்தது, மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. இந்தப் புதுப்பிக்கப்பட்ட மக்களின் தீர்ப்பு மூலம், இந்தப் பதவிக் காலத்தில் நமது இருதரப்பு உறவுகளின் வேகத்தை மூன்று மடங்காக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளோம்.
பாதுகாப்புத் துறையில் நீண்டகால ஒத்துழைப்புக்காக 'பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம்' தயாரிக்கப்படும், இது பயிற்சி, ராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். நமது பொருளாதாரங்கள் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் அவை தீவிரமாகப் பின்பற்றப்படும்.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கவும் பல பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மருந்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், சுத்தமான தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் குறைக்கடத்திகள் போன்ற பல முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிப்போம்.
கப்பல் கட்டுதல் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். இந்தியாவின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுக நவீனமயமாக்கல், கடலோர மண்டல மேம்பாடு மற்றும் பல-மாதிரி இணைப்பு முயற்சிகளில் பங்கேற்க குரோஷிய நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன. எங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். கூடுதலாக, இந்தியா அதன் விண்வெளி நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் குரோஷியாவுடன் பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது.
நண்பர்களே,
நமது நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள், நமது பரஸ்பர பாசம் மற்றும் நல்லெண்ணத்தின் அடித்தளமாக அமைகின்றன. 18 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் முதன்முதலில் சமஸ்கிருத இலக்கணத்தை வெளியிட்டவர் இவான் பிலிப் வெஸ்டின் ஆவார். கடந்த 50 ஆண்டுகளாக, ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இன்று, நமது கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் இந்தி இருக்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கலாச்சார பரிமாற்றத் திட்டம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மக்களின் நடமாட்டத்தை எளிதாக்க, போக்குவரத்து ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும். இந்தியாவின் திறமையான தகவல் தொழில்நுட்ப மனிதவளத்தால் குரோஷிய நிறுவனங்கள் பயனடைய முடியும். இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் விவாதித்தோம்.
யோகாவிற்குக் கிடைத்துள்ள ஆதரவை நான் இங்கு தெளிவாக அனுபவித்திருக்கிறேன். ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில், எப்போதும் போல, குரோஷிய மக்கள் இந்த நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பயங்கரவாதம், மனிதகுலத்தின் எதிரி என்பதையும், ஜனநாயக சக்திகளில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் எதிரானது என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஏப்ரல் 22 அன்று இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்காக பிரதமருக்கும் குரோஷிய அரசிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற கடினமான காலங்களில், எங்கள் நண்பர்களின் ஆதரவு எங்களுக்கு மிகுந்த மதிப்புடையது.
இன்றைய உலகளாவிய சூழலில், இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான கூட்டாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான எங்கள் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் குரோஷியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம்.
ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்று நாங்கள் இருவரும் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே முன்னோக்கிச் செல்லும் ஒரே சாத்தியமான பாதை. ஒவ்வொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பது அவசியம்.
நண்பர்களே,
இன்று 'பான்ஸ்கி ட்வோரி'யில் இருப்பது எனக்கு ஒரு சிறப்பான தருணம். இந்த இடத்தில்தான் சாக்சின்ஸ்கி குரோஷிய மொழியில் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார், இன்று, இந்தியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்துவதில் பெருமிதம் மற்றும் மனநிறைவு அடைகிறேன். 'மொழி என்பது ஒரு பாலம்' என்று அவர் சரியாகச் சொன்னார், இன்று, நாங்கள் அந்தப் பாலத்தை வலுப்படுத்துகிறோம்.
குரோஷியாவிற்கு எங்கள் வருகையின் போது எங்களுக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் அவர்களே, விரைவில் உங்களை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்
***
AD/RB/DL
(Release ID: 2137825)