பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 JUN 2025 4:14PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர்  துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, முதல்வர் திரு உமர் அப்துல்லா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு ஜிதேந்திர சிங், திரு வி. சோமன்னா அவர்களே, துணை முதல்வர் திரு சுரேந்திர குமார் அவர்களே, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு சுனில் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பர் திரு ஜூகல் கிஷோர் அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே. இது வீர் ஜோராவர் சிங்கின் நிலம், இந்த நிலத்தை நான் வணங்குகிறேன்.

 

நண்பர்களே,

 

இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இந்தியாவின் மன உறுதியின் ஒரு பெரிய கொண்டாட்டமாகும். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதத்துடன், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில்  இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.   பாரத அன்னையை விவரிக்கும் போது, நாம்  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று கூறி வருகிறோம். இது இப்போது ரயில்வே  இணைப்பிற்கும் ஒரு யதார்த்தமாகிவிட்டது. உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா, இந்த ரயில் பாதைத் திட்டங்கள், இவை வெறும் பெயர்கள் அல்ல. இவை ஜம்மு காஷ்மீரின் புதிய பலத்தின் அடையாளம். இது இந்தியாவின் புதிய பலத்தின் பிரகடனம். சிறிது நேரத்திற்கு முன்பு செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று ஜம்மு-காஷ்மீர் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்றுள்ளது. ஜம்முவில், ஒரு புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.46 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்கள், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தைத் தரும். வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இது ஹாஜியின் நிலம். இந்த மண்ணுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

 

நண்பர்களே,

 

ஜம்மு காஷ்மீரின் பல தலைமுறைகள் ரயில் இணைப்பு பற்றிய கனவு கண்டு மாண்டு போயின. நேற்று நான் முதல்வர் திரு உமர் அப்துல்லாவின் ஒரு அறிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், மேலும் அவர் 7-8 ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே இந்தத் திட்டம் நிறைவடையும் வரை காத்திருப்பதாகக் கூறியதாகவும் உரையில் குறிப்பிட்டேன். இன்று ஜம்மு காஷ்மீரின் லட்சக் கணக்கான மக்களின் கனவு நனவாகியுள்ளது. மேலும்  இன்னும் நான் செய்ய வேண்டிய நன்மைகள் ஏராளமாக உள்ளன என்பதும் உண்மை.

 

நண்பர்களே,

 

இந்தத் திட்டம் எங்கள் ஆட்சிக் காலத்தில் வேகம் பெற்றது, நாங்கள் அதை முடித்தோம் என்பது எங்கள் அரசின் அதிர்ஷ்டம். இடையில், கோவிட் காலம் காரணமாக பல சிரமங்கள் வந்தன, ஆனால் நாங்கள் உறுதியாக நின்றோம்.

 

நண்பர்களே,

 

பயணத்தில் சிரமங்கள், வானிலை சார்ந்த பிரச்சனைகள், மலைகளில் இருந்து தொடர்ந்து விழும் கற்கள் முதலியவற்றால், இந்தத் திட்டத்தை முடிப்பது கடினமாகவும் சவாலாகவும் இருந்தது. ஆனால் நமது அரசு இந்த சவாலையே சவால் செய்யும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்று, ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் அனைத்து வானிலைக்கும் ஏற்ற  பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சோன்மார்க் சுரங்கப்பாதை சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு முன்பு, நான் செனாப் மற்றும் அஞ்சி பாலம் வழியாக இங்கு வந்தேன். இந்தப் பாலங்களில் நடக்கும்போது, ​​இந்தியாவின் வலுவான உறுதியையும், நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமையையும் தைரியத்தையும் நான் அனுபவித்தேன். செனாப் பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவுப் பாலமாகும். மக்கள் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க பிரான்சின் பாரிஸுக்குச் செல்கிறார்கள். இந்தப் பாலம் ஈபிள் கோபுரத்தை விட மிக உயரமானது. இப்போது மக்கள் செனாப் பாலம் வழியாக காஷ்மீரைப் பார்ப்பது மட்டுமல்லாமல், இந்தப் பாலம் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாகவும் மாறும். அனைவரும் செல்ஃபி பாயிண்டிற்குச் சென்று செல்ஃபி எடுப்பார்கள். நமது அஞ்சி பாலம் பொறியியலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது இந்தியாவின் முதல் கம்பிவழி ரயில்வே பாலம். இந்த இரண்டு பாலங்களும் வெறும் செங்கல், சிமென்ட், எஃகு மற்றும் இரும்பினால் ஆன கட்டமைப்புகள் மட்டுமல்ல, அவை இந்தியாவின் சக்தியின் உயிருள்ள சின்னமாகும், அவை பிர் பஞ்சலின் அணுக முடியாத மலைகளில் நிற்கின்றன. இது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் கர்ஜனை. வளர்ந்த இந்தியா என்ற கனவு எவ்வளவு பெரியதோ, அவ்வளவு உயர்ந்தது நமது தைரியமும் நமது திறனும் என்பதை இது காட்டுகிறது. மிக முக்கியமான விஷயம் நல்ல நோக்கமும் மகத்தான முயற்சியும் ஆகும்.

 

நண்பர்களே,

 

செனாப் பாலமாக இருந்தாலும் சரி, அஞ்சி பாலமாக இருந்தாலும் சரி, இவை ஜம்மு-காஷ்மீரின் இரு பகுதிகளுக்கும் செழிப்புக்கான ஒரு வழியாக மாறும். இது சுற்றுலாவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பிற துறைகளுக்கும் பயனளிக்கும். ஜம்மு-காஷ்மீர் இடையேயான ரயில் இணைப்பு இரு பகுதிகளின் வணிகர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இது இங்குள்ள தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும், இப்போது காஷ்மீரின் ஆப்பிள்கள் நாட்டின் பெரிய சந்தைகளைக் குறைந்த விலையில் அடைய முடியும் மற்றும் சரியான நேரத்தில் அடைய முடியும். உலர் பழங்கள், பாஷ்மினா சால்வைகள் என எதுவாக இருந்தாலும், இங்குள்ள கைவினைப்பொருட்களால் இப்போது நாட்டின் எந்தப் பகுதியையும் எளிதாக அடைய முடியும். இது ஜம்மு-காஷ்மீர் மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிப்பதை மிகவும் எளிதாக்கும்.

 

நண்பர்களே,

 

சங்கல்தானைச் சேர்ந்த ஒரு மாணவர் செய்தித்தாளில் எழுதிய கருத்தை நான் இங்கு படித்துக்கொண்டிருந்தேன். அந்த மாணவர், கிராமத்தை விட்டு வெளியே சென்றிருந்த தனது கிராம மக்கள் மட்டுமே இதுவரை ரயிலைப் பார்த்ததாகக் கூறினார். கிராமத்தின் பெரும்பாலான மக்கள் ரயிலின் காணொலியை மட்டுமே பார்த்திருந்தனர். ஒரு உண்மையான ரயில் அவர்களின் கண்களுக்கு முன்பாக கடந்து செல்லும் என்பதை அவர்களால் இன்னும் நம்ப முடியவில்லை. ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை பலர் நினைவில் வைத்திருப்பதாகவும் நான் படித்தேன். மற்றொரு மகள் ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னாள்- இப்போது சாலைகள் திறக்கப்படுமா அல்லது மூடப்பட்டிருக்குமா என்பதை வானிலை தீர்மானிக்காது, இப்போது இந்த புதிய ரயில் சேவை ஒவ்வொரு பருவத்திலும் மக்களுக்கு உதவிக்கொண்டே இருக்கும், என்று அவள் கூறினாள்.

 

நண்பர்களே,

 

ஜம்மு காஷ்மீர், பாரத அன்னையின் கிரீடம். இந்த கிரீடம் அழகான ரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான ரத்தினங்கள் ஜம்மு காஷ்மீரின் பலம். இங்குள்ள பண்டைய கலாச்சாரம், இங்குள்ள மரபுகள், இங்குள்ள ஆன்மீக உணர்வு, இயற்கையின் அழகு, இங்குள்ள மூலிகைகளின் உலகம், பழங்கள் மற்றும் பூக்களின் மிகுதி, இங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் திறமை, அவை கிரீடத்தில் ஒரு ரத்தினம் போல பிரகாசிக்கின்றன.

 

நண்பர்களே,

 

நான் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீருக்குச் சென்று வருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். உட்புறப் பகுதிகளுக்குச் சென்று வழும் வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது. இந்தத் திறனை நான் தொடர்ந்து பார்த்து உணர்ந்திருக்கிறேன், அதனால்தான் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன்.

 

நண்பர்களே,

 

ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் கல்வி மற்றும் கலாச்சாரத்தின் பெருமையாக இருந்து வருகிறது. இன்று, நமது ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பு உலகின் மிகப்பெரிய அறிவு மையங்களில் ஒன்றாக மாறி வருகிறது, எனவே எதிர்காலத்தில் இதில் ஜம்மு காஷ்மீரின் பங்கேற்பும் அதிகரிக்கும். இங்கு ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் என்ஐடி போன்ற நிறுவனங்கள் உள்ளன. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரிலும் ஆராய்ச்சி சூழல் விரிவடைந்து வருகிறது.

 

நண்பர்களே,

 

படிப்புகளுடன், மருத்துவத்திற்காகவும் இங்கு முன்னெப்போதும் இல்லாத பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், இரண்டு மாநில அளவிலான புற்றுநோய் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு புதிய மருத்துவக் கல்லூரிகள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும்போது, ​​நோயாளிகள் மட்டுமல்ல, அந்தப் பகுதியின் இளைஞர்களும் அதிகப் பயனடைகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்போது ஜம்மு காஷ்மீரில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1300 ஆக அதிகரித்துள்ளது. இப்போது ரியாசி மாவட்டத்திலும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி வரப்போகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி உயர் மருத்துவ நிறுவனம், ஒரு நவீன மருத்துவமனை மட்டுமல்ல, இது நமது பண்டைய கலாச்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு. இந்த மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு செலவிடப்பட்ட பணம், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மாதா வைஷ்ணோ தேவியின் பாதங்களுக்கு வணங்க வரும் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதப் பணிக்காக ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்திற்கும் அதன் தலைவர் மனோஜ் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவமனையின் கொள்ளளவும் 300 படுக்கைகளிலிருந்து 500 படுக்கைகளாக அதிகரிக்கப்படுகிறது. கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவியை தரிசிக்க வரும் மக்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.

 

நண்பர்களே,

 

மத்தியத்தில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இந்த 11 ஆண்டுகள், ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. 4 கோடி ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு என்ற கனவு பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் மூலம் நிறைவேறியுள்ளது. உஜ்வாலா திட்டம் 10 கோடி சமையலறைகளில் உள்ள புகையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் 50 கோடி ஏழை மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையை வழங்கியுள்ளது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்,   ஒவ்வொரு தட்டிலும் போதுமான உணவை உறுதி செய்துள்ளது. முதல் முறையாக, மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வங்கிகளின் கதவுகளைத் திறந்துள்ளது. சௌபாக்யா திட்டம் இருளில் வாழும் 2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட 12 கோடி கழிப்பறைகள், திறந்தவெளியில் மலம் கழிக்கும் கட்டாயத்திலிருந்து மக்களை விடுவித்துள்ளன. ஜல் ஜீவன் இயக்கம் 12 கோடி புதிய வீடுகளுக்கு குழாய் நீரைக் கொண்டு வந்துள்ளது, இது பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்10 கோடி சிறு விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கியுள்ளது.

 

நண்பர்களே,

 

கடந்த 11 ஆண்டுகளில், அரசின் இதுபோன்ற பல முயற்சிகளால், 25 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள், நமது சொந்த ஏழை சகோதர சகோதரிகள், வறுமைக்கு எதிராகப் போராடியுள்ளனர், மேலும் 25 கோடி ஏழை மக்கள் வறுமையைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர். இப்போது அவர்கள் புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். சமூக அமைப்பின் நிபுணர்கள், பெரிய நிபுணர்கள், கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலில் மூழ்கியவர்கள், தலித்துகளின் பெயரில் அரசியல் ஆதாயம் ஈட்டி வருபவர்கள், நான் இப்போது குறிப்பிட்ட திட்டங்களைப் பாருங்கள். இந்த வசதிகளைப் பெற்றவர்கள் யார், சுதந்திரத்திற்குப் பிறகு 7-7 தசாப்தங்களாக இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தவர்கள் யார். இவர்கள் எனது தலித் சகோதர சகோதரிகள், இவர்கள் எனது பழங்குடி சகோதர சகோதரிகள், இவர்கள் எனது பின்தங்கிய சகோதர சகோதரிகள், இவர்கள் மலைகளில் வாழும் மக்கள், இவர்கள் காடுகளில் வாழும் மக்கள், இவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் குடிசைகளில் கழிக்கும் மக்கள், மோடி தனது 11 ஆண்டுகளை இந்தக் குடும்பங்களுக்காக கழித்தார். ஏழைகளுக்கு, புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகபட்ச பலத்தை அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஒரு பதவி ஒரு ஓய்வூதியம், ரூ.12 லட்சம் வரை சம்பளத்தை வரி விலக்கு அளித்தல், வீடு வாங்குவதற்கு நிதி உதவி வழங்குதல், மலிவான விமான பயணத்திற்கு உதவுதல் என அனைத்து வகையிலும், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடன் அரசு தோளோடு தோள் சேர்ந்து செயல்படுகிறது.

 

நண்பர்களே,

 

ஏழைகள் வறுமையிலிருந்து விடுபட உதவுவதுடன், நேர்மையாக வாழ்ந்து, அவ்வப்போது நாட்டிற்காக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் ஆற்றலை அதிகரிப்பதும், சுதந்திரத்தில் முதல் முறையாக நடைபெறுகிறது.  இதற்காக நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

 

நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். இதற்கு ஒரு முக்கியமான வழி சுற்றுலா. சுற்றுலா வேலைவாய்ப்பை வழங்குகிறது, சுற்றுலா மக்களை இணைக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு எதிரானது, நல்லிணக்கத்திற்கு எதிரானது, சுற்றுலாவுக்கு எதிரானது. இது மட்டுமல்ல, ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும் எதிரானது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்தது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பஹல்காமில் மனிதகுலத்தையும், காஷ்மீரியத்தையும் பாகிஸ்தான் தாக்கியது. இந்தியாவில் கலவரங்களை உருவாக்குவதே அந்நாட்டின் நோக்கம். காஷ்மீரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களின் வருவாயை நிறுத்துவதே அவரது நோக்கம். அதனால்தான் பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது. கடந்த 4-5 ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் சுற்றுலாவில், ஒவ்வொரு ஆண்டும் சாதனை எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து கொண்டிருந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஏழைகளின் வீடுகளை ஆதரிக்கும் சுற்றுலா பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது. சிலர் குதிரை சவாரி செய்பவர்கள், சிலர் சுமை தூக்குபவர்கள், சிலர் வழிகாட்டிகள், சிலர் விருந்தினர் மாளிகை உரிமையாளர்கள், சிலர் கடை-தாபா உரிமையாளர்கள், அவர்கள் அனைவரையும் அழிப்பதே பாகிஸ்தானின் சதி. பயங்கரவாதிகளுக்கு சவால் விடுத்த இளைஞன் ஆதிலும், கூலி வேலை செய்ய அங்கு சென்றிருந்தான், ஆனால் அவன் தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேலை செய்து கொண்டிருந்தான். பயங்கரவாதிகள் ஆதிலையும் கொன்றனர்.

 

நண்பர்களே,

 

பாகிஸ்தானின் இந்த சதித்திட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் எழுந்து நின்ற விதம், இந்த முறை ஜம்மு காஷ்மீர் மக்கள் காட்டிய சக்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு உலகின் பயங்கரவாத மனநிலைக்கும் ஒரு வலுவான செய்தியை வழங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் இப்போது பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளனர். பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிகளை எரித்த பயங்கரவாதம் இதுதான், பள்ளிகள் அல்லது கட்டிடங்களை மட்டுமல்ல, இரண்டு தலைமுறைகளின் எதிர்காலத்தையும் எரித்தது. மருத்துவமனைகள் அழிக்கப்பட்டன. இது பல தலைமுறைகளை நாசமாக்கியது. இங்குள்ள மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம், இங்கு தேர்தல்கள் நடத்தப்படலாம், இதுவும் பயங்கரவாதத்தால் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

 

நண்பர்களே,

 

பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தைத் தாங்கிக் கொண்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் கனவு காண்பதை நிறுத்திவிட்டு, பயங்கரவாதத்தை தங்கள் தலைவிதியாக ஏற்றுக்கொண்டதால், ஜம்மு-காஷ்மீர் மக்கள் பெரும் அழிவைக் கண்டனர். இந்த சூழ்நிலையிலிருந்து ஜம்மு-காஷ்மீரை மீட்டெடுப்பது அவசியம், அதை நாங்கள் செய்துள்ளோம். இன்று, ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் புதிய கனவுகளைக் கனவு காண்கிறார்கள், அவற்றை நனவாக்குகிறார்கள். இப்போது காஷ்மீர் இளைஞர்கள் சந்தைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் பரபரப்பாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மீண்டும் திரைப்பட படப்பிடிப்புக்கான முக்கிய மையமாக மாறுவதை இங்குள்ள மக்கள் பார்க்க விரும்புகிறார்கள், இந்தப் பகுதி விளையாட்டு மையமாக மாறுவதைக் காண விரும்புகிறார்கள். மாதா கீர் பவானியின் கண்காட்சியிலும் அதே உணர்வைக் கண்டோம். ஆயிரக்கணக்கான மக்கள் மாதா கோவிலை அடைந்த விதம், புதிய ஜம்மு-காஷ்மீரின் தோற்றத்தைக் காட்டுகிறது. இப்போது அமர்நாத் யாத்திரை 3 ஆம் தேதி தொடங்கப் போகிறது. எல்லா இடங்களிலும் ஈத் பண்டிகையின் உற்சாகத்தைக் காண்கிறோம். ஜம்மு-காஷ்மீரில் உருவாக்கப்பட்ட வளர்ச்சியின் சூழல் பஹல்காம் தாக்குதலால் அசைக்கப்படப் போவதில்லை. ஜம்மு காஷ்மீரில் உள்ள உங்கள் அனைவருக்கும், நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி என்னவென்றால், வளர்ச்சியை இங்கேயே நிறுத்த விடமாட்டேன். இங்குள்ள இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் தடைகள் வந்தால், அந்தத் தடையை முதலில் சந்திப்பவர் மோடிதான் என்பதாகும்.

 

நண்பர்களே,

 

இன்று ஜூன் 6. ஒரு மாதத்திற்கு முன்பு, சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, மே 6 ஆம் தேதி இரவு, பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் அழிந்ததை நினைவில் கொள்க. இப்போது பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம், அதன் அவமானகரமான தோல்வியை நினைவுகூரும். பாகிஸ்தானிய ராணுவமும் பயங்கரவாதிகளும் இந்தியா பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்று பயங்கரவாதிகளைத் தாக்கும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அவர்கள் பல வருட கடின உழைப்பால் கட்டிய பயங்கரவாதக் கட்டிடங்கள் சில நிமிடங்களில் இடிபாடுகளாக மாறிவிட்டன. இதைப் பார்த்த பாகிஸ்தான் மிகவும் கிளர்ந்தெழுந்து, ஜம்மு, பூஞ்ச் ​​மற்றும் பிற மாவட்ட மக்கள் மீதும் தனது கோபத்தை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் இங்கு வீடுகளை அழித்தது, குழந்தைகள் மீது குண்டுகளை வீசியது, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழித்தது, கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களைத் தாக்கியது என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. பாகிஸ்தானின் தாக்குதல்களை நீங்கள் எதிர்கொண்ட விதத்தை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்திருக்கிறார்கள். அதனால்தான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் குடும்பங்களுடன் முழு பலத்துடன் நிற்கிறார்கள்.

 

நண்பர்களே,

 

சில நாட்களுக்கு முன்பு, எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் துன்பம் எங்களுடைய சொந்த துன்பமாகும். ஷெல் தாக்குதலுக்குப் பிறகு இந்த குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை சரிசெய்ய நிதி உதவி வழங்கப்பட்டது. இப்போது மத்திய அரசு இந்த உதவியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், இது பற்றிய தகவல்களையும் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

 

இப்போது, ​​அதிக அளவில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 2 லட்சமும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 1 லட்சமும் கூடுதல் உதவியாக வழங்கப்படும். அதாவது, முதலில் அறிவித்த உதவிக்குப் பிறகு இப்போது அவர்களுக்கு இந்த கூடுதல் தொகை கிடைக்கும்.

 

நண்பர்களே,

 

எல்லையில் வசிக்கும் மக்களை நாட்டின் முதல் காவலாளிகளாக நமது அரசு கருதுகிறது. கடந்த பத்தாண்டுகளில், எல்லை மாவட்டங்களில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அரசு முன் எப்போதும் இல்லாத வகையில் பணிகளைச் செய்துள்ளது, இந்தக் காலகட்டத்தில் சுமார் பத்தாயிரம் புதிய பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்ற இந்த பதுங்கு குழிகள் பெரிதும் உதவியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பிரிவுக்கு இரண்டு எல்லைப் பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்குச் சொல்கிறேன். இரண்டு பெண்கள் பட்டாலியன்களை உருவாக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

 

நண்பர்களே,

 

நமது சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள தொலைதூரப் பகுதிகளில் கூட, நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் புதிய உள்கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது. கதுவா முதல் ஜம்மு வரையிலான நெடுஞ்சாலை ஆறு வழி விரைவுச் சாலையாக மாற்றப்படுகிறது, அக்னூர் முதல் பூஞ்ச் ​​வரையிலான நெடுஞ்சாலையும் விரிவுபடுத்தப்படுகிறது. துடிப்பான கிராமத் திட்டத்தின் கீழ், எல்லைக் கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் அனைத்து வானிலை இணைப்பும் இல்லாத 400 கிராமங்கள் 1800 கிலோமீட்டர் புதிய சாலைகள் அமைப்பதன் மூலம் இணைக்கப்படுகின்றன. இதற்காகவும் அரசு 4200 கோடிக்கு மேல் செலவிட உள்ளது.

 

நண்பர்களே,

 

இன்று நான் ஜம்மு காஷ்மீர் மக்களிடம், குறிப்பாக இங்குள்ள இளைஞர்களிடம், ஜம்மு காஷ்மீர் நிலத்திலிருந்து, ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுக்க வந்துள்ளேன், நாட்டிற்கும் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். ஆபரேஷன் சிந்தூர் எவ்வாறு தன்னிறைவு இந்தியாவின் சக்தியைக் காட்டுகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இன்று உலகம் இந்தியாவின் பாதுகாப்பு சூழலைப் பற்றி விவாதிக்கிறது. இதற்குப் பின்னால் ஒரே ஒரு காரணம் உள்ளது, நமது படைகள் 'மேக் இன் இந்தியா' மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இப்போது ஒவ்வொரு இந்தியனும் படைகள் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பட்ஜெட்டில், உற்பத்தி இயக்கத்தை அறிவித்துள்ளோம். இந்த இயக்கத்தின் கீழ், உற்பத்திக்கு புதிய உத்வேகம் அளிக்க அரசு செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன், வாருங்கள், இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகுங்கள். நாட்டிற்கு உங்கள் நவீன சிந்தனை தேவை, நாட்டிற்கு உங்கள் புதுமை தேவை. உங்கள் யோசனைகள், உங்கள் திறன்கள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உச்சங்களைத் தரும். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா ஒரு பெரிய பாதுகாப்பு ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இப்போது உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் இந்தியாவின் பெயரைச் சேர்ப்பதே எங்கள் குறிக்கோள். இந்த இலக்கை நோக்கி நாம் எவ்வளவு வேகமாக நகர்கிறோமோ; இந்தியாவில் வேகமாக லட்சக் கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

 

நண்பர்களே,

 

முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும், அதில் நம் நாட்டு மக்களின் வியர்வை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதுவே தேசபக்தி என்றும், இதுவே தேசத்திற்கு செய்யும் சேவை என்றும் நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். எல்லையில் நமது படைகளின் கௌரவத்தை அதிகரிக்க வேண்டும், மேலும் சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையை அதிகரிக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

ஜம்மு காஷ்மீருக்கு ஒரு பொன்னான மற்றும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசும் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டு ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருகின்றன. நாம் முன்னேறிச் செல்லும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். மாதா வைஷ்ணோ தேவியின் ஆசீர்வாதத்துடன், வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஜம்மு காஷ்மீரின் இந்த தீர்மானம் நிறைவேறட்டும். இந்த விருப்பத்துடன், இந்த ஏராளமான வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், பல அற்புதமான திட்டங்களுக்காகவும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

 

பாரத் மாதா கி ஜெய்! என்ற குரல் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்க வேண்டும்.

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

பாரத் மாதா கி ஜெய்!

 

மிக்க நன்றி!

***

(Release ID: 2134533)

AD/RB/DL


(Release ID: 2134724)