பிரதமர் அலுவலகம்
குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
பயங்கரவாத நடவடிக்கைகள் இனி மறைமுகப் போர் அல்ல, மாறாக நன்கு சிந்திக்கப்பட்டு திட்டமிட்ட செயலாக இருக்கும், எனவே பதிலடியும் அதுபோலவே இருக்கும்:பிரதமர்
நாம் 'உலகம் ஒரு குடும்பம்' என்று நம்புகிறோம், எவருடனும் பகைமையை நாம் விரும்பவில்லை, நாம் வளர்ச்சியடைய விரும்புகிறோம். அதனால் உலகளாவிய நல்வாழ்விற்கும் நாம் பங்களிக்க முடியும்: பிரதமர்
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும், சமரசம் கிடையாது, உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பாராட்டும் வகையில் 100 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்: பிரதமர்
நகர்ப்புறங்கள் நமது வளர்ச்சி மையங்கள், நகர்ப்புற அமைப்புகளை பொருளாதாரத்தின் வளர்ச்சி மையங்களாக மாற்ற வேண்டும்: பிரதமர்
தற்போது நம்மிடம் சுமார் இரண்டு லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன. அவை நமது மகளிரால் வழிநடத்தப்படுகின்றன: பிரதமர்
நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர மகத்தான ஆற்றல் உள்ளது, ஆபரேஷன் சிந்தூர் தற்போது 140 கோடி குடிமக்களின் பொறுப்பாகும்: பிரதமர்
இந்தியாவில
Posted On:
27 MAY 2025 2:33PM by PIB Chennai
குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். "பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது" என்று பிரதமர் கூறினார்.
இந்தியா 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடனேயே, 1947-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா மீதான முதலாவது பயங்கரவாதத் தாக்குதலை நினைவு கூர்ந்த திரு மோடி, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் ஒரு பகுதியை அபகரித்தது என்று கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் வரை இந்திய ராணுவம் போரை நிறுத்தியிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்திய சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வையை அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், படேலின் ஆலோசனையைப் பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் இந்த மரபு கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்றும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதன் மற்றொரு கொடூரமான வடிவம் என்றும் திரு மோடி தெரிவித்தார். ராஜீய நிலையிலான விளையாட்டுகளுக்கிடையே பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ வலிமையை போரில் மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது என்றும் அவர் கூறினார். மூன்று தருணங்களில், இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானைத் தீர்க்கமாகத் தோற்கடித்தன. இவை பாகிஸ்தான் நேரடி ராணுவ மோதலில் வெற்றிபெற முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் தனது வரம்புகளை உணர்ந்ததை குறிப்பிட்ட திரு மோடி, அண்டை நாடு மறைமுகப் போரை நாடியதாகக் கூறினார். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் முறையான ராணுவப் பயிற்சி மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவினர், அமைதியான முறையில் சுற்றுலா வந்தவர்கள் உட்பட அப்பாவி மற்றும் நிராயுதபாணியான பொதுமக்களை குறிவைத்து தாக்கினர் என்று அவர் விளக்கினார்.
இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய கலாச்சார விழுமியங்களை எடுத்துரைத்து, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதும் வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தியா பல நூற்றாண்டுகளாக இந்தப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி வருவதாகவும், அதன் அண்டை நாடுகளுடன் அமைதியான மற்றும் இணக்கமான உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்க விரும்புவதாகவும் கூறினார். இந்தியா எப்போதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரித்து வந்தாலும், அதன் வலிமைக்கு மீண்டும் மீண்டும் சவால்கள் வருவதால் உறுதியான பதில்கள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். வரலாற்று ரீதியாக, மறைமுகப் போர் என்று அழைக்கப்பட்டது மே 6 நிகழ்வுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்தது என்று கூறினார். அண்மை வளர்ச்சி போக்குகள், மறைமுகப் போர் எனக் கருதுவதை தவறென எடுத்துக் காட்டியுள்ளன. அடையாளம் காணப்பட்ட ஒன்பது பயங்கரவாத கட்டமைப்பு தளங்கள் 22 நிமிடங்களுக்குள் அழிக்கப்பட்டன. கேமரா ஆவணங்கள் மூலம் முழு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டில் எந்த ஆதாரமும் கேள்விக்குள்ளாக்கப்படாது என்று அவர் தெரிவித்தார். சமீபத்திய சம்பவங்கள் இது இனி மறைமுகப் போர் அல்ல, மாறாக பாகிஸ்தானின் திட்டமிட்ட மற்றும் கணக்கிடப்பட்ட ராணுவ உத்தி என்பதை நிரூபிக்கின்றன என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார். மே 6-ம் தேதி நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டன. அவர்களின் சவப்பெட்டிகள் தேசியக் கொடிகளால் மூடப்பட்டிருந்தன, மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கூட வணக்கம் செலுத்தினர். இவை தனிமைப்படுத்தப்பட்ட போராளி நடவடிக்கைகள் அல்ல, மாறாக ஒரு கட்டமைக்கப்பட்ட போர் அணுகுமுறையின் ஒரு பகுதி என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும். இதுபோன்ற உத்திகள் பயன்படுத்தப்பட்டால், சமமான தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நெருக்கடி காலங்களில் உதவிகளை வழங்கி, இந்தியா எப்போதும் முன்னேற்றத்தையும் அனைவரின் நலனையும் பின்பற்றி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நாடு பெரும்பாலும் வன்முறை பழிவாங்கலை எதிர்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இளைய தலைமுறையினரிடம் உரையாற்றிய அவர், பல ஆண்டுகளாக நாடு எவ்வாறு குறைவாக மதிப்பிடப்பட்டது என்பதை உணருமாறு கூறினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது பற்றிப் பேசிய பிரதமர், ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்வளம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துரைத்தார். ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டாலும், சரியான பராமரிப்பு மற்றும் தூர்வாருதல் அறுபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். நீர் ஒழுங்குமுறைக்கான கதவுகள் திறக்கப்படாமல் விடப்பட்டன. இதனால் சேமிப்புத் திறன் கடுமையாகக் குறைந்தது. முழு பயன்பாட்டிலிருந்து வெறும் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். தண்ணீரை உரிமையுடன் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
இந்தியா எந்த பகைமையையும் விரும்புவதில்லை என்றும், அமைதி மற்றும் செழிப்பை விரும்புகிறது என்றும் வலியுறுத்திய திரு மோடி, முன்னேற்றத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டையும், உலகளாவிய நல்வாழ்வுக்கு பங்களிப்பதையும் எடுத்துரைத்தார். மிகுந்த உறுதியுடன், இந்தியா தனது குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறினார். மே 26 என்பது பிரதமராக தாம் முதன்முதலில் 2014 இல் பதவியேற்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். அந்த நேரத்தில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 11 வது இடத்தில் இருந்தது. கோவிட்-19-க்கு எதிரான போர், அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார். இந்தத் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, உலகளவில் 11-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சிக்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வையையும், முன்னேற்றத்திற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். குஜராத்தில் தனது பணிகளை நினைவு கூர்ந்த அவர், தாம் கற்றுக் கொண்டதை மற்றும் மதிப்புகளை எடுத்துரைத்தார். குடிமக்கள் தமது விருப்பங்கள் மற்றும் கனவுகளுக்கு தம்மை நம்பியதற்காக நன்றி தெரிவித்தார். அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்றுவதாக உறுதியளித்தார்.
நகர்ப்புற வளர்ச்சிக்கான குஜராத் அரசின் உறுதிப்பாட்டிற்கு மகிழ்ச்சியைத் தெரிவித்த பிரதமர், 2005-ம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சி தற்போது 20 ஆண்டுக் கால முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். வெறும் சாதனைகளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு நகர்ப்புற வளர்ச்சிக்கான எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு திட்டமிடலை உருவாக்க அரசு கடந்த 20 ஆண்டுகளில் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். குஜராத் மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த திட்டம், நிலையான முன்னேற்றத்திற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தொலைநோக்கைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். எதிர்கால நோக்கில் நகர்ப்புற மேம்பாட்டு உத்தியை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் முயற்சித்த மாநில அரசு, முதலமைச்சர் மற்றும் அவர்களது குழுவினரை பிரதமர் பாராட்டினார்.
இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய போட்டியாளர்களை வெற்றி கொள்வது பெருமைக்குரிய தருணம் என்றார். உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்தபோது குடிமக்களிடையே ஏற்பட்ட உற்சாகத்தை நினைவு கூர்ந்தார். குறிப்பாக இளைஞர்களின் உற்சாகத்தைக் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரிட்டிஷை முந்துவது ஒரு வரலாற்று மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா தற்போது 4-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், மூன்றாவது இடத்தை அடைவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக திரு மோடி கூறினார். 2047-ம் ஆண்டுக்குள், இந்தியா முழுமையாக வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்றும், சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், வளமான, வலிமையான நாடாக உலகளாவிய அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சுதந்திர இயக்கத்திற்கு இணையாக, பகத் சிங், ராஜ்குரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர் சாவர்க்கர், ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் போன்ற தலைவர்களின் தியாகங்களை திரு மோடி எடுத்துரைத்தார். அன்றைய 25-30 கோடி மக்கள் சுதந்திரத்திற்காகப் போராட உறுதியாக இல்லாவிட்டால், 1947-ல் சுதந்திரத்தை அடைந்த செயல் சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த தலைமுறையினர் 20-35 ஆண்டுகளில் காலனித்துவ ஆட்சியாளர்களை விரட்டியடிக்க முடிந்தால், இன்றைய 140 கோடி குடிமக்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். 2035-ம் ஆண்டை எதிர்நோக்கி, குஜராத்தின் 75-வது ஆண்டு விழாவிற்கு திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். தொழில், வேளாண்மை, கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க இப்போதே தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குஜராத்தின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிப் பாதையுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கு கூட்டாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பங்களையும் அவர் குறிப்பிட்டார், இது உலகளாவிய தலைமைத்துவத்திற்கான நாட்டின் தயார்நிலையை சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் உருவான தினத்திலிருந்து அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் குறிப்பிடத்தக்க பயணம் குறித்து பிரதமர் சிந்தித்தார். தொடக்க ஆண்டுகளில், அதன் புவியியல், பொருளாதார வரம்புகளை சுட்டிக் காட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்கான திறன் குறித்து பலர் வினா எழுப்பிய நிலையில், அது தொடர்பான அப்போது எழுந்த சந்தேகங்கள் குறித்து அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்ற மாநிலம் என்பதில் இருந்து, வைரத் தொழிலில் உலகின் முன்னணி மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வெற்றிக்கு ஒழுக்கமைக்கப்பட்ட திட்டமிடல் மற்றும் உத்திசார் முயற்சிகளே காரணம் என்று அவர் கூறினார். அரசு நிர்வாகம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பிரதமர் விவாதித்தார். தனிமையான நிலையில் உள்ள அரசுத் துறைகள் பெரும்பாலும் முன்னேற்றத்தைத் தடுக்கும் காரணிகளாக உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து திறம்பட செயல்படும் முழுமையான அரசின் அணுகுமுறை குறித்த முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். 2005-ம் ஆண்டில் நகர்ப்புற மேம்பாடு, மற்றொரு ஆண்டில் பெண் கல்வி, மற்றொரு கட்டத்தில் சுற்றுலா போன்ற துறைகளில் கவனம் செலுத்த ஏதுவாக மேற்கொள்ளப்படும் அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளை அர்ப்பணிக்கும் குஜராத் மாநிலத்தின் முன்மாதிரியை அவர் மேற்கோள் காட்டினார். "சில நாட்களை குஜராத் மாநிலத்தில் செலவிடுங்கள்" என்ற பிரச்சாரம் மேற்கொண்டதை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். இது சுற்றுலாத் துறை உத்வேகம் பெற உதவியதுடன், சோம்நாத், துவாரகா மற்றும் அம்பாஜி போன்ற இடங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. போக்குவரத்து சேவைகளை விரிவாக்கம் செய்வதில் இருந்த தொடக்க கால எதிர்ப்புகளை சந்தித்த அவர், அகமதாபாத் நகரில், நகர்ப்புற மேம்பாட்டில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அகமதாபாத் நகரத்திற்கு வெளியே சிவப்பு நிறப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான தொடக்க கால முயற்சிகள் எவ்வாறு அதிகாரத்துவம், அரசியல் சார்ந்த தடைகளை எதிர்கொண்டது என்றும், ஆனால் விடாமுயற்சி குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது என்பதையும் அவர் விவரித்தார். இதேபோல், நகரப்புற மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உள்ள சவால்களை அவர் குறிப்பிட்டார். மக்கள் நன்மைகளைக் காணத் தொடங்கியவுடன், அத்தகைய எதிர்ப்புகள் எவ்வாறு பரவலான பொது ஆதரவாக மாறியது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.
குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு, குறிப்பாக அரசியல் எதிரிகள், ஊடக புலனாய்வுகளிலிருந்து ஏற்பட்ட விரிவான எதிர்ப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், தலைவர்கள் நேர்மையுடனும், பொது நலனுக்காகவும் முடிவுகளை எடுக்கும்போது, நீண்டகால பலன்கள் அத்தகைய முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைகின்றன என்பதை அவர் வலியுறுத்தினார். தேர்தல் கால பின்னடைவுகள் குறித்து தொடக்கத்தில் அச்சங்கள் இருந்தபோதிலும், அரசின் நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகள் தேர்தல் வெற்றிகளையும் பரவலான பாராட்டையும் பெற்று தந்ததை அவர் குறிப்பிட்டார். தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படக் கூறினார். நான்காவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து, மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறுவதற்கான அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அத்தகைய லட்சியங்கள் உறுதியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக நகர்ப்புற விரிவாக்கம் என்பதைக் காட்டிலும், நகர்ப்புற மையங்கள் பொருளாதார வளர்ச்சி மையங்களாக பரிணமிக்க வேண்டியதன் அவசியத்தை திரு. நரேந்திர மோடி, வலியுறுத்தினார். "நகரங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான ஆற்றல்மிக்க மையங்களாக செயல்பட வேண்டும் என்றும், நகராட்சி அமைப்புகள் அவற்றின் மாற்றத்திற்காக தீவிரமாக திட்டமிட வேண்டும்" என்றும் கூறினார். நாடு முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் நகரங்களுக்கு பொருளாதார வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், பொருளாதார நடவடிக்கைகளுக்கான புதிய வழிவகைகளை அடையாளம் காண்பதிலும் கவனம் செலுத்தி, உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை மதிப்பிடவும், ஒரு வருடத்திற்குள் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் உத்திசார் கொள்கைகளை வகுக்குமாறும் திரு நரேந்திர மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வர்த்தக வளாகங்களைக் கட்டுவதற்கு பதிலாக, வேளாண் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதற்கும், உள்ளூர் சந்தைகளுக்குள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை செயல்படுத்துவதற்கும் நகர்ப்புற அமைப்புகள் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாரம்பரியம் கொண்ட பெரிய தொழில்கள் பெருநகரப் பகுதிகளில் செழித்து வளர்ந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் 2-ம் நிலை அல்லது 3 -ம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன. இவை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் பல்வேறு பெண்களால் வழிநடத்தப்படுகின்றன என்பதை அவர் பெருமையுடன் எடுத்துக் கூறினார். இது பொருளாதார மற்றும் தொழில்முனைவோர் புரட்சியின் புதிய அலையைக் குறிக்கிறது. கல்வி மற்றும் விளையாட்டுகளிலும் இதே போன்ற முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நகர்ப்புற பொருளாதார மேம்பாட்டிற்கான இந்தியாவின் கவனம், உள்ளூர் பொருளாதார செயல்பாடுகளை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகளாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் நான்காவது இடத்திலிருந்து உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக அதன் பயணத்தை துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார். வலுவான நிர்வாக நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், வரலாற்று ரீதியாக இந்தியாவின் ஆற்றலைக் குறைவாக மதிப்பிடுவதற்கு சில மனப்பான்மைகள் முயற்சித்து வருவதைக் குறிப்பிட்டு, வளர்ச்சிக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கு கருத்தியல் எதிர்ப்பு எவ்வாறு வழிவகுத்துள்ளது என்றும், முன்முயற்சி நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் எவ்வாறு தொடர்ச்சியான வடிவமாக மாறி வருகின்றன என்பதையும் எடுத்துரைத்தார். நகர்ப்புற வளர்ச்சிக்கான அரசின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் திட்டவட்டமாக கூறினார். மேலும் அதிகாரத்துவ தடைகளை சமாளிக்க முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் எவ்வாறு தொடங்கப்பட்டது என்பதை விவரித்தார். சுமார் 40 மேம்பாட்டு அளவுருக்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, மேலும் நீண்டகால உத்தியுடன் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர். இந்த முயற்சி தற்போது வளரும் நாடுகளுக்கு முன்மாதிரி நடவடிக்கையாக மாறியுள்ளது. பயனுள்ள நிர்வாகம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அவை வழங்குகின்றன என்று அவர் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் பாலைவன நிலப்பரப்பால் கவனிக்கப்படாத கட்ச் பகுதி தற்போது ஒரு சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மிக உயரமான சிலை போன்ற பெரிய அளவிலான முயற்சிகள் கருத்துக்களை மறுவடிவமைத்து பிராந்திய பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
வாட்நகர் போன்ற இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார், அதன் அருங்காட்சியகத்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மையமாக விவரித்தார். இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தைக் குறிப்பிட்டு, தற்போது உலகின் மிகப்பெரிய கடல்சார் அருங்காட்சியகங்களில் ஒன்றான லோதல் பற்றி திரு மோடி பேசினார். கிஃப்ட் நகரக் கருத்து தொடர்பான ஆரம்பகால சந்தேகங்களை அவர் நினைவு கூர்ந்தார். இது இப்போது நிதி மையங்களுக்கான ஒரு அளவுகோலாக மாறியுள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தும் பலன்கள் ஏற்படும் வகையில் முன்னோடி யோசனைகள் உறுதியுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சபர்மதி ஆற்றங்கரை, உலகின் மிகப்பெரிய அரங்கத்தின் கட்டுமானம் மற்றும் ஒற்றுமை சிலை உள்ளிட்ட பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை அவர் மேற்கோள் காட்டினார், இது இந்தியாவின் மாற்றத்தக்க முயற்சிகளைச் செயல்படுத்தும் திறனைக் காட்டுகிறது. இந்தியாவின் ஆற்றல் குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நாட்டின் திறன் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
கடந்த கால முயற்சிகளை மீண்டும் பார்வையிட வாய்ப்பளித்த குஜராத் அரசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்துவதில் குஜராத்தின் முக்கிய பங்கை பிரதமர் வலியுறுத்தினார். தேசத்திற்கான உயர் தரங்களை தொடர்ந்து அமைக்குமாறு மாநிலத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் மீதான தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மே 6 அன்று தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அது அதன் அசல் நோக்கத்திற்கு அப்பால் விரிவடையும் என்றும் தேசிய முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பைக் குறிக்கும் என்பதை வலியுறுத்தினார். 2047 இல் 100 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகும் போது, இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான உறுதியை திரு மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். நான்காவது பெரிய பொருளாதாரத்திலிருந்து மூன்றாவது நாடாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், வெளிநாட்டுப் பொருட்களின் மீதான சார்பைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குடிமக்கள் தங்கள் அன்றாட நுகர்வை மதிப்பிடவும், வெளிநாட்டுப் பொருட்களை அடையாளம் காணவும், அவற்றை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களால் மாற்றீடு செய்யவும் திரு மோடி வலியுறுத்தினார். மத விழாக்களுக்கான சிலைகள் போன்ற பாரம்பரியமாக மதிக்கப்படும் பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்படும் நிகழ்வுகளை அவர் மேற்கோள்காட்டி, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "சிந்தூர் நடவடிக்கை என்பது வெறும் இராணுவ முன்முயற்சி மட்டுமல்ல, ஒவ்வொரு இந்திய குடிமகனும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு" என்று திரு மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார், பொருளாதார தன்னிறைவின் அவசியத்தை வலியுறுத்தி, உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தவும், உள்நாட்டு தொழில்களை ஆதரிக்கவும் ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி பொருள் என்ற உத்தியை ஆதரித்தார். கடந்த காலங்களில், வெளிநாட்டுப் பொருட்கள் எவ்வாறு தேடப்பட்டன என்பதை அவர் நினைவு கூர்ந்தார், ஆனால் இன்று, இந்தியா உலகத் தரம் வாய்ந்த பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
நாட்டின் பெருமையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பெருமை கொள்வதுடன், நாட்டின் முன்னேற்றங்கள் கொண்டாடப்பட வேண்டும் எனவும் குடிமக்களை பிரதமர் வலியுறுத்தினார். தனது உரையை நிறைவு செய்த அவர், ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அதன் உலகளாவிய நிலையை உறுதிப்படுத்தவும் பங்களிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். நகர்ப்புற வளர்ச்சியில் அதன் தலைமைத்துவப் பண்பையும், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழிகாட்டும் சக்தியாக அதன் பங்களிப்பு உள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டு, குஜராத் மாநில அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
குஜராத் மாநில ஆளுநர் திரு. ஆச்சார்யா தேவரத், அம்மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர்கள் திரு. மனோகர் லால், திரு. சி.ஆர். பாட்டீல் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
குஜராத் மாநிலத்தில், நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு-2005 என்பது, திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு, சிறந்த நிர்வாகம் மற்றும் நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மூலம் அம்மாநில நகர்ப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அப்போதைய முதலமைச்சர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியாகும். 2005 - ம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் காந்திநகரில் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டு 2025, குஜராத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில தூய்மையான காற்றுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 22,000 - க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்கினார். ஸ்வர்ணிம் ஜெயந்தி முதலமைச்சர் ஷஹேரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியையும் அவர் விடுவித்தார்.
-----
(Release ID: 2131588)
AD/TS/IR/SV/KPG/RJ/DL
(Release ID: 2131728)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam