பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு
Posted On:
26 MAY 2025 6:47PM by PIB Chennai
மூவண்ண தேசியக் கொடியை அனைவரும் பெருமையுடன் அசைக்க வேண்டும்.
பாரத் மாதா கி ஜெய்,
பாரத் மாதா கி ஜெய்,
பாரத் மாதா கி ஜெய்,
பாரத் மாதா கி ஜெய்.
குஜராத் மாநில முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, குஜராத் மாநில அமைச்சரவையைச் சேர்ந்த எனது அனைத்து சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிற சிறப்புமிக்க பிரமுகர்கள் மற்றும் தாஹோத் நகரத்தைச் சேர்ந்த எனது அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? தயவுசெய்து உரக்கப் பதிலளிக்கவும் - தாஹோத் நகரின் செல்வாக்கு தற்போது உயர்ந்துள்ளது!
2014 - ம் ஆண்டு மே 26 - ம் தேதி அன்று இதே நாளில் தான் நான் முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டேன். மூவண்ணக் கொடி எப்போதும் பெருமையுடன் அசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குஜராத் மாநில மக்கள் எனக்கு ஏராளமான ஆசிகளை வழங்கியுள்ளனர். பின்னர், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் தங்களது ஆசிகளை வழங்கியுள்ளனர். உங்களது ஆசிகளால் அதிகாரம் பெற்ற நான், இரவும் பகலும் என் சக நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன்.
இந்த ஆண்டுகளில், ஒரு காலத்தில் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிலும், இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெப்போதும் மேற்கொள்ளப்படவில்லை என்று கருதப்பட்ட முடிவுகளையும் இந்த நாடு எடுத்துள்ளது. கடந்த பல தசாப்தங்களின் பிற்போக்கான சிந்தனைகளிலிருந்து நாம் விடுபட்டு, ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இன்று, நாடு விரக்தி நிலையிலிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடன் மூவண்ணக் கொடியை உயர்த்தி வருகிறது.
நண்பர்களே,
இன்று, 140 கோடி இந்தியர்களாகிய நாம், இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். இதுவே காலத்தின் தற்போதைய தேவையுமாகும். உற்பத்தித் துறையில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வது, போன்ற அனைத்திலும் தொடர் வளர்ச்சியைக் காண முடிகிறது. இன்று, இந்தியா ஸ்மார்ட்போன்கள், கார்கள் முதல் பொம்மைகள், இராணுவ உபகரணங்கள், மருந்துகள் வரை பல்வேறு நாடுகளுக்கு ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், இந்தியா தற்போது ரயில்வே, மெட்ரோ ரயில் போக்குவரத்து மற்றும் அவற்றிற்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் உற்பத்தி செய்து வருவதுடன், அவற்றை ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு தாஹோத் நகரம் வாழும் சான்றாக உயர்ந்து நிற்கிறது.
சிறிது நேரத்திற்கு முன்பு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு இங்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைத்தோம். இவற்றில், மிக முக்கியமானது தாஹோத் நகரில் அமைந்துள்ள மின்சார ரயில் இன்ஜின் உற்பத்தித் தொழிற்சாலையாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு இந்தத் தொழிற்சாலையை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக நான் இங்கு வந்தபோது, சில தனிநபர்கள், வழக்கத்திற்கு மாறாக, விமர்சனங்களில் ஈடுபட்டனர். தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே மோடி இத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதாகவும், அதனால் எதுவும் நடக்காது என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும், இன்று, அதாவது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தொழிற்சாலையில் முதல் மின்சார ரயில் இன்ஜின் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும். சிறிது நேரத்திற்கு முன்பு, இங்கு தயாரிக்கப்பட்ட மின்சார ரயில் இன்ஜின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த பெருமை எனக்கு கிடைத்தது. இது குஜராத் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதிற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும்.
இன்று, குஜராத் மாநிலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது - அதன் ரயில் கட்டமைப்பு அனைத்தும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைக்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
முதலில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இங்குள்ள மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மீண்டும் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். பல வயதான மூத்த குடிமக்களையும், பழக்கமான முகங்களைச் சந்திக்கவும், எண்ணற்ற அன்பான நினைவுகளை மீட்டெடுக்கவும் இது எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தாஹோத் நகரத்துடனான எனது தொடர்பு, அரசியலில் நான் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து தொடங்கவில்லை. இது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பு ஆகும். இங்கு இரண்டு முதல் மூன்று தலைமுறைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இன்று, 20 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நான் பரேளுக்குச் சென்றேன். அந்த நகரம் முழுவதும் மாறிவிட்டது. முன்பு, நான் செல்லும் போதெல்லாம், சூரிய அஸ்தமனத்தில் பரேளுக்கு சைக்கிளில் செல்ல முயற்சிப்பேன். மழை பெய்து சுற்றுப்புறம் பசுமையால் செழிப்பாக மாறினால், சிறிய மலைகள் வழியாகச் செல்லும் குறுகிய பாதைகளில் மகிழ்ச்சியுடன் சைக்கிள் ஓட்டுவேன். அத்தகைய மாலைப் பொழுதுகள் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்தன. அதன் பிறகு, பரேலில் ரயில்வேத் துறையில் பணிபுரியும் சகோதரர்களின் வீடுகளில் உணவருந்துவேன். அவர்களுடனான எனது பிணைப்பு அவ்வளவு நெருக்கமாக இருந்தது. இன்று பரேலின் மகிமையைக் காண்பது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது.
நண்பர்களே,
இங்கே உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு காண நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேலும் பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தாஹோத் நகரம் குறித்து நான் ஒரு காலத்தில் கண்ட கனவுகள் தற்போது என் கண் முன்னே நனவாகி வருகின்றன என்று பெருமையுடன் கூறுகிறேன். இந்தியாவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதற்கான முன்மாதிரியைக் காண எவராவது விரும்பினால், அவர்கள் தாஹோத் நகருக்குச் செல்ல வேண்டும் என்று முழு நம்பிக்கையுடன் நான் கூறுகிறேன். பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் ஒரு நவீன நகரத்தை உருவாக்கும் யோசனை ஒரு காலத்தில் பலரை வியப்பிற்குள்ளாக்கியது. இருப்பினும், கடந்த 10–11 ஆண்டுகளில், நமது ரயில்வேத் துறை எவ்வளவு விரைவாக மாறிவிட்டது என்பதை நாம் கண்டிருக்கிறோம். ரயில்வேத் துறையின் வளர்ச்சி திசை மாறிவிட்டதுடன், அதன் வேகமும் அதிகரித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவைகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. முன்பு, அரை-அதிவேக ரயில்கள் நாட்டின் சொற்களஞ்சியத்தில் கூட இல்லை. இன்று, இந்தக் கருத்து விரைவான வேகத்தில் யதார்த்தமாகி வருகிறது. தற்போது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று, தாஹோத் நகரில் இருந்து, அகமதாபாத் - வேராவ் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131411
******
AD/TS/SV/KPG/RJ
(Release ID: 2131661)