பிரதமர் அலுவலகம்
ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்வில் பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடல் மற்றும் அவரது உரையின் தமிழாக்கம்
Posted On:
18 JAN 2025 6:04PM by PIB Chennai
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்- இந்தப் பெருமைமிகு நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதமருடன் சொத்து அட்டை வைத்திருக்கும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளின் உரையாடலுடன் தொடங்குகிறது. முதலாவதாக மத்தியப் பிரதேசத்தின் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த சொத்து அட்டை வைத்திருக்கும் பயனாளி மனோகர் மேவாடா அவர்களை நான் அழைக்கிறேன்.
பிரதமர் – மனோகர் அவர்களே, உங்கள் குடும்பத்தில் யார், யார் இருக்கிறார்கள்?
மனோகர் மேவாடா - நான், எனது மனைவி, இரண்டு மகன்கள் ஆகியோரைக் கொண்டது எனது குடும்பம். எனது மகன்களில் ஒருவர் திருமணமானவர். எனக்கு பேரனும் இருக்கிறான்.
பிரதமர் – மனோகர் அவர்களே, சொத்துப் பத்திரங்கள் மீது நீங்கள் கடன் வாங்கியிருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. இந்தக் கடன் உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்தது. இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்கள் நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் அனுபவத்தை கூறுங்கள்.
மனோகர் மேவாடா - உடமையாளர் திட்டத்தின் கீழ் பால்பண்ணை வைப்பதற்காக 10 லட்சம் ரூபாய் நான் கடன் பெற்றேன். நான் தொடங்கிய பால்பண்ணையில், எனது பிள்ளைகளும் பணியாற்றினார்கள். இப்போது நானும், எனது குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நான் உங்களை வணங்குகிறேன். உங்களுக்கு எனது நன்றி.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்- இப்போது ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வாமித்வா பயனாளியும் சொத்து அட்டை வைத்திருப்பவருமான திருமதி ரச்னா அவர்கள்.
ரச்னா – ஐயா, நான் இங்கு 20 ஆண்டுகளாக வசிக்கிறேன். எனக்கு சிறிய வீடு இருக்கிறது. ஆனால் இதற்கு ஆவணங்கள் எதுவுமில்லை. இருப்பினும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் நான் இந்த சொத்து அட்டையைப் பெற்றேன். இதையடுத்து 7,45,000 ரூபாய் கடன் பெற்றேன். இதைக் கொண்டு ஒரு கடை வைத்தேன். இப்போது எனது குழந்தைகளின் உயர்கல்வி கனவை நான் நனவாக்கியிருக்கிறேன்.
பிரதமர் – 20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற வாய்ப்புகள் இல்லாததால் நீங்கள் நம்பிக்கையை இழந்திருப்பீர்கள். இப்போது நடந்திருப்பது உங்களுக்கு நடக்கும் என்று நினைத்தீர்களா?
ரச்னா – ஒருபோதும் இல்லை ஐயா.
பிரதமர் – உங்களின் மகள் வெளிநாட்டில் படிக்க விரும்புவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு சென்று படிக்க விரும்புகிறார்.
ரச்னா – ஆஸ்திரேலியாவுக்கு ஐயா.
பிரதமர்- உங்கள் கனவும் உங்கள் மகளின் கனவும் விரைவில் நிறைவேற நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - இப்போது மதிப்பிற்குரிய பிரதமரை உரையாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வணக்கம்!
இன்று நாட்டின் கிராமங்களுக்கும், கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். பல மாநிலங்களின் மதிப்புமிகு ஆளுநர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் எங்களுடன் இணைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர், லடாக் துணை நிலை ஆளுநர் ஆகியோரும் நம்முடன் உள்ளனர். மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது சகாக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். மாநில அரசுகளின் அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் வந்துள்ளனர். மற்ற அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளுடன் தொடர்புடைய அனைத்து சகாக்களே, ஸ்வாமித்வா திட்டத்தின் லட்சக்கணக்கான பயனாளிகளே, இது ஒரு விரிவான, மிகப்பெரிய திட்டமாகும். நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் இணைந்துள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஸ்வமித்வா திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது, இதனால் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்கள் வீட்டிற்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை வழங்க முடியும். சில இடங்களில் இது கரானி என்றும் சில இடங்களில் இது அதிகார் அபிலேக் என்றும், சில இடங்களில் இது சொத்து அட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக உள்ளது. ஆனால் இதன் பொருள், உரிமைச் சான்றிதழ் என்பதாகும். கடந்த 5 ஆண்டுகளில், சுமார் 1.5 கோடி மக்களுக்கு இந்த சொத்து உரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்தத் திட்டத்தில் 65 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த உரிமை அட்டைகளைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்கள், எனது நல்வாழ்த்துக்கள். இன்றைய நிகழ்ச்சியின் காரணமாக, நிலம் தொடர்பான அரசாங்க ஆவணங்களை இப்போது பெற்றவர்கள், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து நான் நடத்திய உரையாடலில் இருந்து உங்களுக்கு நிச்சயமாக யோசனைகள் கிடைத்திருக்கும்.
சகோதர சகோதரிகளே,
நம் நாட்டில் 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ பாதி கிராமங்கள் ட்ரோன்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. சட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பணத்தில், அவர்கள் கிராமத்தில் தங்கள் சொந்த சிறு தொழிலைத் தொடங்கியுள்ளனர். இவர்களில் பலர் சிறு மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பங்கள். அவர்களைப் பொறுத்தவரை, இந்த சொத்து அட்டைகள் பொருளாதார பாதுகாப்பின் பெரிய உத்தரவாதமாக மாறியுள்ளன. சட்டவிரோத அத்துமீறல்களாலும், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நடந்த தகராறுகளாலும் நமது தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இப்போது, சட்ட ஆதாரங்கள் கிடைப்பதன் மூலம், அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்ட பிறகு, ரூ .100 லட்சம் கோடிக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகளுக்கான வழி திறக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு மூலதனம் சேர்க்கப்படும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.
நண்பர்களே,
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்று மகாத்மா காந்தியடிகள் கூறுவார். பூஜ்ய பாபுவின் இந்த உணர்வு கடந்த பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் பெற்ற 2.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களில் பெரும்பாலானவை கிராமங்களைச் சேர்ந்தவை. கடந்த 10 ஆண்டுகளில் கழிப்பறைகளைப் பெற்ற 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவை கிராமங்களைச் சேர்ந்தவை. உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்ற 10 கோடி சகோதரிகளில் பெரும்பாலோர் கிராமங்களில் வசிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் குழாய் வழிக் குடிநீரைப் பெற்ற 12 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களும் கிராமங்களைச் சேர்ந்தவை. வங்கிக் கணக்கு தொடங்கியுள்ள 50 கோடிக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானோர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த பத்தாண்டுகளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் கட்டப்பட்டுள்ளன, அவை பெரும்பாலும் கிராமங்களில் உள்ளன, கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கு சேவை செய்கின்றன. சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகளாக, நமது கிராமங்களும், கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தனர். நமது தலித், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தின் குடும்பங்கள் மிகவும் பின்தங்கியவை. இப்போது இந்த அனைத்து வசதிகளிலிருந்தும் இந்தக் குடும்பங்கள் மிகவும் பயனடைந்துள்ளன.
நண்பர்களே,
ஸ்வமித்வா திட்டத்தின் மூலம், இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைக்கும் திறனை கிராம மக்களுக்கு எங்கள் அரசு வழங்கியுள்ளது. நமது கிராமங்களும், ஏழைகளும் அதிகாரம் பெற்றால், வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணமும் இனிமையானதாக இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஸ்வாமித்வா போன்ற திட்டங்கள் மூலம், கிராமங்களை வலுவான வளர்ச்சி மையங்களாக நம்மால் மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நன்றி!
***
(Release ID: 2094052)
TS/SMB/AG/KR
(Release ID: 2123432)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Malayalam
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada