பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்


இந்த மருத்துவமனை வாரணாசி மற்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள பலரின் வாழ்க்கையில் இருளை அகற்றி, ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும்: பிரதமர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சலின் பெரிய சுகாதார மையம் மற்றும் மருத்துவக் குவிமையமாக காசி இப்போது பிரபலமாகி வருகிறது: பிரதமர்

நோய்த் தடுப்பு சுகாதாரம், நோயை சரியான நேரத்தில் கண்டறிதல், இலவசமாக, குறைந்த செலவில் சிகிச்சை, சிறிய நகரங்களில் நல்ல சிகிச்சை மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் என, இந்தியாவின் சுகாதார அணுகுமுறை இப்போது ஐந்து தூண்களைக் கொண்டுள்ளது : பிரதமர்

Posted On: 20 OCT 2024 5:24PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு  விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த புனிதமான காலத்தில் காசிக்கு செல்வது நல்லொழுக்கத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பாகும் என்றார். காசி மக்கள், துறவிகள், கொடையாளர்கள் கருணையுடன் இருப்பதையும் பரம பூஜ்ய சங்கராச்சாரியாரை  தரிசனம் செய்து பிரசாதம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெறுவதையும் அவர் குறிப்பிட்டார். காசியும்  உத்தராஞ்சலும் இன்று மற்றொரு நவீன மருத்துவமனையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சங்கரரின் தேசத்தில் ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டது பற்றி  குறிப்பிட்டார். இந்த விழாவில் காசி மற்றும் உத்தராஞ்சல் மக்களுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கோள் ஒன்றினை எடுத்துரைத்த  பிரதமர், ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனை இருளைத் துடைத்து, பலரை ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் என்று கூறினார். கண் மருத்துவமனைக்குச் சென்றபோது, இது ஆன்மீகம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக இருப்பதை உணர்ந்ததாகவும், வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கண்பார்வை வழங்குவதில் மருத்துவமனை சேவை செய்யும் என்றும் திரு மோடி கூறினார். ஏழைகள் அதிக அளவில் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த கண் மருத்துவமனை பல இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும், மருத்துவ மாணவர்களுக்கான வேலை மற்றும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளையும் உதவி ஊழியர்களுக்கான வேலைகளையும் உருவாக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.

குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் சங்கரா கண் அறக்கட்டளையுடன் தனக்கு இருந்த தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதியின் குரு முன்னிலையில் சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்ததைக் குறிப்பிட்டார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் ஆசியைப் பெறுவது மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் கூறிய அவர், பரம பூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பல பணிகளைச் செய்ததைக் குறிப்பிட்டார்மூன்று வெவ்வேறு மரபுகளுடன் தொடர்புடையது தனிப்பட்ட திருப்திக்குரிய விஷயம் என்று அவர் கூறினார். விழாவை ஆசீர்வதித்த ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்த பிரதமர், வாரணாசியின் மக்கள் பிரதிநிதியாக அவரை வரவேற்றார்.

பிரபல தொழிலதிபர், மறைந்த திரு ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சேவை மற்றும் பணி குறித்தும் திரு  மோடி நினைவு கூர்ந்தார். திரு ஜுன்ஜுன்வாலாவின் பாரம்பரியத்தைத் தொடர்ந்ததற்காக அவரது மனைவி திருமதி  ரேகா ஜுன்ஜுன்வாலாவையும் அவர் பாராட்டினார். சங்கரா கண் மருத்துவமனை, சித்ரகூட  கண் மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளையும் வாரணாசியில் நிறுவுமாறு கேட்டுக் கொண்டதை நினைவுகூர்ந்த பிரதமர், காசி மக்களின் கோரிக்கையை மதித்து இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த காலங்களில், தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரகூட கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், இப்போது வாரணாசியில் அவர்கள் பயனடையும் வகையில் இரண்டு புதிய அதிநவீன கண் மருத்துவமனைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பழங்காலத்திலிருந்தே, வாரணாசி மத மற்றும் கலாச்சார தலைநகராக அடையாளம் காணப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இப்போது வாரணாசி, உத்தரப் பிரதேசம், பூர்வாஞ்சலின் சுகாதார மையமாகவும் பிரபலமடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை அல்லது கபீர் சௌரா மருத்துவமனை அல்லது மூத்த குடிமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரிகளில் வசதிகளை வலுப்படுத்துவது என சுகாதாரப் பணியில் நிறைய பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று திரு மோடி கூறினார். புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூட வாரணாசியில் நவீன சுகாதார வசதி இருப்பதாகவும் அவர் கூறினார். முன்பு தில்லி அல்லது மும்பைக்கு சென்றதை விட இன்று வாரணாசியில் நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைத்து வருவதாக திரு மோடி தெரிவித்தார். பீகார், ஜார்க்கண்ட் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வாரணாசிக்கு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். முந்தைய "மோக்ஷதாயினி" (முக்தி அளிப்பது) வாரணாசி, புதிய ஆற்றல் மற்றும் வளங்களுடன் "நவஜீவந்தாயினி" (புதிய வாழ்வு தருவது) வாரணாசியாக மாறுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசுகளைப் பற்றிப் பேசிய பிரதமர், வாரணாசி உட்பட பூர்வாஞ்சலில் சுகாதார வசதிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன், பூர்வாஞ்சலில் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பு  சிகிச்சை மையங்கள் இல்லாத நிலை இருந்தது. இது குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்தது. கடந்த பத்தாண்டுகளில், காசியில் மட்டுமின்றி, பூர்வாஞ்சல் பகுதி முழுவதும் சுகாதார வசதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு திரு மோடி திருப்தி தெரிவித்தார். இன்று பூர்வாஞ்சலில் மூளைக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க இதுபோன்ற 100-க்கும் அதிகமான மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த தசாப்தத்தில் பூர்வாஞ்சலின் முதன்மை மற்றும் சமூக மையங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பூர்வாஞ்சல் கிராமங்களில் 10 ஆண்டுகளில் ஐந்தாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் கட்டப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பூர்வாஞ்சல் மாவட்ட மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு முன் டயாலிசிஸ் வசதிகள் இல்லாத நிலையில், இன்று 20க்கும் அதிகமான டயாலிசிஸ் பிரிவுகள் செயல்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார்.

21ஆம் நூற்றாண்டின் இந்தியா, சுகாதாரம் தொடர்பான பழைய மனநிலையையும் அணுகுமுறையையும் உதறித்தள்ளிவிட்டதாக பிரதமர் தெரிவித்தார். நோய்த் தடுப்பு சுகாதாரம், சரியான நேரத்தில் நோயறிதல், இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சை, சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் சிறிய நகரங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடு போன்ற இந்தியாவில்  சுகாதார உத்தியின் ஐந்து தூண்களை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், பல அமைச்சகங்கள் இணைந்து செயல்படுத்தும் இந்திரதனுஷ் திட்டத்தைக் குறிப்பிட்டு, தடுப்பூசி பாதுகாப்பு விகிதம் அதிகரித்து, கோடிக்கணக்கான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சேவைகளை எடுத்துச் சென்றது பற்றியும், கொவிட் தொற்றுநோய் காலத்தில் தடுப்பூசிக்கு அரசு  முக்கியத்துவம் அளித்ததன் பலன்கள் காணக்கூடியதாக இருந்தது பற்றியும் அவர் கூறினார். தடுப்பூசி இயக்கம்  நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் நிறுவபடுவது பற்றி  குறிப்பிட்டார். முக்கியமான பராமரிப்புத் தொகுப்புகள் மற்றும் நவீன ஆய்வகங்களின் வலையமைப்பும் இன்று நாட்டில் கட்டமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். "சுகாதாரத் துறையின் இந்த இரண்டாவது தூண் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

குறைந்த செலவில் சிகிச்சை மற்றும் மலிவான மருந்துகள் ஆரோக்கியத்தின் மூன்றாவது தூணாக இருப்பதை விளக்கிய பிரதமர், சிகிச்சைக்கான சராசரி செலவு 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்க பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம்  ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் அதே வேளையில் இதய ஸ்டென்ட், முழங்கால் மாற்று மற்றும் புற்றுநோய் மருந்துகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 7.5 கோடிக்கும் அதிகமான நோயாளிகள் இலவச சிகிச்சையின் பலனைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையின் நான்காவது தூண் பற்றி விவரித்த திரு மோடி, சிகிச்சைக்காக தில்லி-மும்பை போன்ற பெரிய நகரங்களைச் சார்ந்திருப்பதை இது குறைக்கப் போகிறது என்றார். கடந்த பத்தாண்டுகளில் சிறு நகரங்களில் எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள், பன்னோக்கு உயர் சிறப்பு  மருத்துவமனைகள் போன்றவற்றை   அரசு நிறுவியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான புதிய மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்களை சேர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

சுகாதாரத் துறையின் ஐந்தாவது தூண் என்பது தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதார வசதிகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதுதான் என்று பிரதமர் விளக்கினார். இன்று டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், -சஞ்சீவனி செயலி போன்ற வழிகள் மூலம் நோயாளிகளுக்கு வீட்டிலேயே ஆலோசனை வழங்கும் வசதி அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்-சஞ்சீவனி செயலி மூலம் இதுவரை 30 கோடிக்கும் அதிகமானோர் ஆலோசனை பெற்றுள்ளனர் என்று திரு மோடி குறிப்பிட்டார். ட்ரோன் தொழில்நுட்பத்துடன் சுகாதார சேவைகளை இணைக்கும் நோக்கில் இந்தியா முன்னேறுகிறது என்றும் அவர் கூறினார்.

ஆரோக்கியமான மற்றும் திறமையான இளம் தலைமுறையினர் வளர்ச்சியடைந்த பாரதத்தின் உறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்த பிரதமர் திரு மோடி, நாட்டின்  மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு  தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

******

SMB/ KV

 

 

 

 



(Release ID: 2066558) Visitor Counter : 18