பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச அபிதம்மா தின கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

தம்மத்தில் அடங்கிய அபிதம்மா, தம்மத்தை அதன் சாராம்சத்துடன் புரிந்து கொள்ள, பாலி மொழியில் ஞானம் பெற்றிருப்பது அவசியம்:பிரதமர்

மொழி என்பது தொடர்புக்கான ஒரு ஊடகம் மட்டுமல்ல, மொழி என்பது நாகரீகம் மற்றும் கலாச்சாரத்தின் ஆன்மா:பிரதமர்

ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புடையது, துரதிருஷ்டவசமாக இந்த அம்சத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால், நாடு தற்போது அச்ச உணர்விலிருந்து விடுபட்டு, பெரிய முடிவுகளை மேற்கொள்கிறது:பிரதமர்

புதிய கல்விக் கொள்கையின் படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தாய்மொழியில் பயிலும் வாய்ப்பை பெறத்தொடங்கியிலிருந்து மொழிகளும் வலுவடைந்து வருகின்றன:பிரதமர்

இந்தியா தற்போது ஒரே நேரத்தில் விரைவான வளர்ச்சி மற்றும் பாரம்பரிய செழுமை ஆகிய இரண்டு உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றி வருகிறது:பிரதமர்

புத்தபிரானின் மரபில் உள்ள மறுமலர்ச்சியால், இந்தியா அதன் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை மீட்டெடுத்து வருகிறது:பிரதமர்

உலகிற்கு இந்தியா போரைக் கொடுக்கவில்லை, ஆனால் புத்தரைக் கொடுத்துள்ளது:பிரதமர்

அபிதம்மா தினமான இன்று, பிரச்சனைகளுக்கு போர்

Posted On: 17 OCT 2024 12:16PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டம் மற்றும் பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதற்கான விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தபிரான்  அபிதம்மாவைப் போதித்து ஞானம் பெற்ற பிறகு, அவரது பாதையைப் பின்பற்றுவதை நினைவு கூர்வதே அபிதம்மா தினமாகும். அபிதம்மா குறித்த புத்தபிரானின் போதனைகளின்  மூலம்  பாலி மொழியில் தான் உள்ளது என்பதால், அண்மையில்,  பாலி மொழிக்கு  செம்மொழி அங்கீகாரம் அளிக்கப்பட்டது, இந்த ஆண்டின் அபிதம்மா கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அபிதம்மா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த உலகை அமைதி மற்றும் கருணை மிகுந்த இடமாக மாற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி மக்களுக்கு நினைவூட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு குஷி நகரில் நடைபெற்ற இதே போன்ற விழாவில் பங்கேற்றதை நினைவு கூர்ந்த திரு மோடி, புத்தபிரான் தொடர்பான இடங்களை இணைக்கும் பயணம், அவரது பிறப்பிலிருந்து தொடங்கி இன்று வரை தொடர்வதாக கூறினார்.  தாம் குஜராத் மாநிலம் வத் நகரில் பிறந்ததை  நினைவு கூர்ந்த பிரதமர்,  இந்த நகரம்  புத்தமதம் தொடர்பான  முக்கிய இடமாக திகழ்ந்ததுடன், புத்தபிரானின் தம்மா மற்றும் அவரது போதனைகளை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டியதாகவும் தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் புத்தபிரான் தொடர்புடைய எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நேபாளத்தில் உள்ள புத்தபிரான் பிறந்த இடத்தை பார்வையிட்டிருப்பதுடன், மங்கோலியாவில் புத்தபிரானின் சிலையைத் திறந்து வைத்தது, இலங்கையின் பைஷாக் சமரோ சென்றது போன்றவற்றையும் நினைவு கூர்ந்தார். புத்தபிரானின் ஆசியால் தான் சங்க் மற்றும் சதக் ஆகியவை ஒன்றிணைந்ததாக நம்புவதாக கூறிய பிரதமர், இந்த நிகழ்ச்சியையொட்டி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். சரத் பூர்ணிமா புனித தினம் மற்றும் மகரிஷி வால்மீகி முனிவரின் பிறந்த நாள் வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  இந்நாளையொட்டி அவர் மக்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். புத்தபிரான் சொற்பொழிவாற்றிய பாலி மொழிக்கு மத்திய அரசால் இந்த மாதம் செம்மொழி தகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் அபிதம்மா தினம் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். எனவே, இன்றைய நிகழ்ச்சி மேலும் சிறப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். பாலி மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதன் அந்த மொழிக்கு கௌரவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறிய பிரதமர், இந்த நடவடிக்கை புத்தபிரானின் மரபு மற்றும் பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை என்றும் தெரிவித்தார். மேலும், தம்மாவில் அபிதம்மா அடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, தம்மமாவின் உண்மையான அர்த்தத்தை உணர்வதற்கு பாலி மொழியை அறிந்திருப்பது அவசியம் என்றார். தம்மாவின் பல்வேறு அர்த்தங்களை விளக்கிக் கூறிய திரு மோடி, தம்மா என்பது செய்தி என்ற பொருள் படுவதோடு, புத்தபிரானின் கோட்பாடுகள் மனிதர்கள் உயிர் வாழ்வது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், மனித இனத்திற்கு அமைதிக்கான வழியைக் காட்டுவதாகவும் புத்தரின் நித்திய போதனைகள் மற்றும்  ஒட்டுமொத்த மனித குல நலனுக்கு உறுதியான உத்தரவாதத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  ஒட்டுமொத்த உலகமும் புத்தரின் தம்மத்தால், தொடர்ந்து ஞானம் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

புத்தபிரான் பேசிய பாலி மொழி, தற்போது பொது புழக்கத்தில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மொழியைப் புரிந்து கொள்வது என்பது தொடர்புக்கான ஒரு ஊடகமாக மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஆன்மாவாக திகழ்வதாக கூறிய பிரதமர், இது அடிப்படை உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதுடன், தற்காலத்திலும் பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும் தெரிவித்தார். இந்தப் பொறுப்பை தற்போதைய அரசு மிகுந்த அடக்கத்துடன் நிறைவேற்றியிருப்பது குறித்து மனநிறைவு தெரிவித்த அவர், இதன் மூலம் புத்தபிரானின் கோடிக்கணக்கான சீடர்களிடையே உரையாற்றும் வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

“எந்தவொரு சமுதாயத்தின் மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆன்மீகத்தின் பாரம்பரியம் தான்  அதனை நிலை பெறச் செய்கிறது” என்று கூறிய பிரதமர், எந்தவொரு நாடாலும் கண்டுபிடிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேதம் அல்லது கலைப்பொருட்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமிதத்துடன் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு நாடும் தங்களது பாரம்பரியம் மற்றும் அடையாளத்துடன் இணைந்திருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு ஏற்பட்ட படையெடுப்புகளாலும், சுதந்திரத்திற்குப் பிறகு அடிமை மனப்பான்மை காரணமாகவும் இந்தியா இதில் பின்தங்க நேர்ந்ததாகவும் கூறினார். எதிர் திசையில் பணியாற்றும் வகையில், இந்த நாட்டை ஆளாக்கிய சூழலியல் இந்தியாவை ஆட்டுவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆன்மாவில் வசித்தவர் புத்தர் என்று கூறிய அவர், சுதந்திரத்தின் போது பின்பற்றப்பட்ட அவரது அடையாளங்களை அதற்குப் பிந்தைய தசாப்தங்களில் மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் கூட பாலி மொழிக்கு உரிய இடம் கிடைக்காதது வருத்தத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.

இந்த நாடு தற்போது அச்ச உணர்விலிருந்து விடுபட்டு முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதுடன், பெரிய முடிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.  ஒரு புறம் பாலி மொழி செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுள்ள வேளையில், மறுபுறம் மராத்தி மொழிக்கும் அதே அங்கீகாரம்  வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட பாபா சாஹேப் அம்பேத்கரும், புத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக திகழ்ந்ததுடன், பாலி மொழியில்தான் அவர் தம்ம தீக்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார். வங்காளம், அசாமிஸ் மற்றும் பிரக்ரித் மொழிகளுக்கும் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதையும் அவர்  தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் நமது பன்முகத்தன்மையை வளம் பெறச்செய்கின்றன” என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த காலங்களில் மொழிக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டைதை சுட்டிக்காட்டிய திரு மோடி, நமது ஒவ்வொரு மொழியும், தேச நிர்மாணத்தில் முக்கியப் பங்கு வைத்திருப்பதை எடுத்துரைத்தார்.  இந்தியாவால் தற்போது பின்பற்றப்படும் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இத்தகைய மொழிகளைப் பாதுகாக்கும் ஊடகமாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தாய் மொழியில் கல்வி பயிலும் விருப்பம் கிடைத்ததிலிருந்து, தாய் மொழிகள் வலிமைப் பெற்று வருவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.

இந்த உறுதிப்பாடுகளை நிறைவேற்ற செங்கோட்டையிலிருந்து ‘பஞ்ச பிரானம்’ என்ற தொலைநோக்குக் கொள்கையை அரசு வெளியிட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். பஞ்ச பிரானம் என்ற தத்துவம் பற்றி விளக்கிய திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது, அடிமை மனப்பான்மையிலிருந்து விடுவிப்பது, நாட்டின் ஒற்றுமை, கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் நமது பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்வது தான் இதன் உண்மையான அர்த்தம் என்றார். மேலும் தற்போதைய இந்தியா விரைவான வளர்ச்சி மற்றும் பாரம்பரிய செழுமை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புத்தபிரானுடன் தொடர்புடைய பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பஞ்ச பிரான இயக்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியாவிலும் நேபாளத்திலும் உள்ள புத்தபிரான் தொடர்புள்ள இடங்களை புத்த சுற்றுத் தளங்களாக மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட திரு மோடி, குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் செயல்படத் தொடங்கியிருப்பதுடன், லும்பினியில்  சர்வதேச பௌத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம் கட்டப்பட்டது. லும்பினியில் உள்ள பௌத்த பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆராய்ச்சிக்கான டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் இருக்கை ஏற்படுத்தப்பட்டதுடன், புத்த கயா, ஷ்ரவாஸ்டி, கபிலவஸ்து, சாஞ்சி, சத்னா மற்றும் ரேவா  போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுத் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.  சாரநாத், வாரணாசி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை 2024 அக்டோபர் 20-ம் தேதி தாம் தொடங்கி வைக்கவிருப்பதாகவும் திரு மோடி புதிய கட்டுமானங்களுடன் இந்தியாவின் கடந்த கால செழுமையை பேணிக்காப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட பண்டைக்கால பாரம்பரிய சிறப்பு வாய்ந்த பொருட்கள், கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அரசு மீட்டு வந்துள்ளதாக கூறிய திரு மோடி, இவற்றில் பெரும்பாலானவை பௌத்த மதம் சார்ந்தவை என்றார். புத்தரின் பாரம்பரியம் மறுமலர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியா அதன் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை புதிய வழியில் எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

புத்த பிரானின் போதனைகளை ஊக்குவிப்பதென்ற இந்தியாவின் உறுதிப்பாடு,  நாட்டின் நலனுக்கானது மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குல சேவைக்கானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். புத்தரின் போதனைகளைப் பின்பற்றும் நாடுகளை ஒன்றி்ணைக்க உலக அளவில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், மியான்மர், இலங்கை மற்றும்  தாய்லாந்து போன்ற பல நாடுகள் பாலி மொழி வர்ணனைகளைத் தொகுக்கும் பணியில்  மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்தியாவிலும் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் ஆன்லைன் தளங்கள், டிஜிட்டல் ஆவணக் காப்பகங்கள் மற்றும் செயலிகள் உள்ளிட்ட  நவீன அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பாலி மொழியை ஊக்குவிப்பதற்கான பணிகளை அரசு  விரைவுப்படுத்தி வருவதாகவும் திரு மோடி குறிப்பிபிட்டார். புத்தபிரானை உணர்ந்து கொள்வது குறித்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, புத்தர் அறிவாற்றல் மற்றும் விசாரணை  ஆகிய இரண்டிலும் திறமைமிக்கவர் என்பதால், புத்தரின்  போதனைகள் குறித்து உள்ளக ஆய்வு மற்றும் கல்வி ரீதியான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இந்த இயக்கத்திற்கு இளைஞர்களை வழிநடத்துவதில் பௌத்த கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தத் துறவிகள் வழங்கிய வழிகாட்டுதல்கள் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், புத்தரின் போதனைகள் தற்காலத்திற்கு ஏற்றவை என்பது மட்டுமின்றி தற்போதைய உலகிற்கு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார். “இந்தியா உலகிற்கு போரைக் கொடுக்கவில்லை, ஆனால் புத்தரைக் கொடுத்துள்ளது” என்று ஐநா சபையில், தாம் தெரிவித்த கருத்தை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  புத்த பிரானின் போதனைகளிலிருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த உலகம் தீர்வு காணவேண்டுமே தவிர, போர் மூலம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், புத்தரின் போதனைகளிலிருந்து உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் என்றும், போரை புறந்தள்ளி அமைதிப் பாதைக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  புத்த பிரானின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், அமைதியைவிட மகிழ்ச்சி மிக்கது வேறு ஏதும் கிடையாது; பழி தீர்ப்பது, பழி வாங்குவது ஆகாது என்றும் கருணை மற்றும் மனித நேயம் மூலமே வெறுப்பை அகற்ற முடியும் என்றும் தெரிவித்தார். மகிழ்ச்சி மற்றும் நலவாழ்வு என்ற புத்தபிரானின் கருத்து அனைவருக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2047 வரையிலான அடுத்த 25 ஆண்டு காலத்தை அமிர்த காலம் என இந்தியா அடையாளம் கண்டிருப்பதாக கூறிய திரு மோடி, இந்த அமிர்த காலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான காலம், வளர்ச்சியடைந்த இந்தியாவை நிர்மாணிப்பதற்கான காலம் என்றும் இதில் புத்தபிரானின் போதனைகள், வளர்ச்சிக்கான இந்தியாவின் செயல் திட்டத்திற்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்தார். புத்தரின் இந்த பூமி தான் தற்போது உலகில் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உணர்ந்த மக்கள் அதிக  அளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த உலகமும் பருவநிலை மாற்றப் பிரச்சனையை எதிர்கொண்டு வருவது பற்றி சுட்டிக்காட்டிய பிரதமர், இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்தியா தானாக தீர்வு காணவில்லை என்றும் அவற்றை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உலகில் பல்வேறு நாடுகளை ஓரணியில் திரட்டி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கத்தை இந்தியா தொடங்கியிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

புத்தபிரானின் போதனைகளைப் பாடிய திரு மோடி, சிறந்தவை எந்த வடிவிலானதாக இருந்தாலும் அது நம்மிலிருந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை இயக்கத்தை அடிப்படை சாராம்சத்திலிருந்து வெளிப்பட வேண்டும் என்றும் கூறினார். நீடித்த எதிர்காலத்திற்கான பாதை, ஒவ்வொருவரின் நீடித்த வாழ்க்கை முறையிலிருந்துதான் உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்த போது உருவாக்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு என்ற பல்வேறு முன்முயற்சிகளில் உலகிற்கான இந்தியாவின் பங்களிப்பை நினைவு கூர்ந்த திரு மோடி, இவை அனைத்தும் புத்தபிரானின் சிந்தனைகளை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.  இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும், உலகின் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார பெரு வழித்தடம், இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் இயக்கம், 2030-க்குள் இந்திய ரயில்வேயை கரியமில வாயு உமிழ்வு இல்லாத நிலையை எட்டுவதற்கான இலக்கு, பெட்ரோலில்  எத்தனால் கலப்பை இருபது சதவீதமாக அதிகரிப்பது போன்ற பல்வேறு முன்முயற்சிகள், இந்தப் பூமியைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் வலிமையான விருப்பத்தை எடுத்துக் காட்டுகிறது என்றார். அரசின் பெரும்பாலான முடிவுகள் புத்தர், தம்மா மற்றும் சங்காவால் உத்வேகம் பெற்று மேற்கொள்ளப்பட்டவை என்றும், உலகில் நெருக்கடி ஏற்படும்  காலத்தில், முதலில் உதவும் நாடாக இந்தியா திகழ்வதே இதற்கு உதாரணம் என்றும் பிரதமர் தெரிவித்தார். துருக்கி நிலநடுக்கம், இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும், கொவிட்-19 பெருந்தொற்று போன்ற உலகலாளவிய நெருக்கடிகள் போன்ற நாட்டின் விரைவான செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இவை அனைத்தும் புத்தரின் கருணைக் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். “உலகின் நண்பன் என்ற முறையில் இந்தியா அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். யோகா பயிற்சி, சிறுதானிய உணவு, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற முன் முயற்சிகள் புத்தபிரானின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமது உரையின் நிறைவாக, “வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்லும் இந்தியா, அதன் வேர்களை வலுப்படுத்துகிறது” என்றும் தெரிவித்தார். கலாச்சாரம் மற்றும் நற்பண்புகள் மீது பெருமிதம்அடையும் அதே வேளையில், அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் உலகிற்கு முன்னோடியாகத்திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  புத்தரின் போதனைகள் தான் இது போன்ற முயற்சிகளில் நமது சிறந்த வழிகாட்டி என்று கூறிய அவர், புத்தபிரானின் போதனைகளைப் பின்பற்றி இந்தியா தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

மத்திய அரசு மற்றும்  சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச அபிதம்மா தினக் கொண்டாட்டத்தில், 14 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், புத்தத் துறவிகளும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புத்த தம்மத்தில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

***


MM/KPG/DL



(Release ID: 2065897) Visitor Counter : 25