பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா/ நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 16 SEP 2024 8:25PM by PIB Chennai

பாரத் மாதா கி -ஜெ!

பாரத் மாதா கி -ஜெ!

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் திருமதி பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா சி.ஆர்.பாட்டீல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்துள்ள இதர மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவில் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே.

வணக்கம்.

எல்லாரும் நலமா? நான் இந்த உரையை இந்தியில் நிகழ்த்த இருப்பதால் என்னை மன்னிக்கவும். ஏனென்றால் பிற மாநிலங்களிலிருந்து பல நண்பர்கள் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையில் இணைந்துள்ளனர். குஜராத்தில் இந்தி நன்றாக பேசப்படுகிறது அல்லவா?

இன்று தேசம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், பாரதத்தின் வளர்ச்சி கொண்டாட்டம் தொடர்கிறது. இன்று, சுமார் ரூ. 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, இதில் ரயில்வே, சாலைகள், மெட்ரோ எனப் பல திட்டங்கள் அடங்கும். இன்று, குஜராத்தின் பெருமையில் மற்றொரு நட்சத்திரமும் சேர்ந்துள்ளது. நமோ பாரத் ரேபிட் ரயிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நகர்ப்புறப் போக்குவரத்து இணைப்பில் ஒரு மைல்கல்லாக அமையப் போகிறது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று தங்கள் புதிய வீடுகளுக்குள் நுழைகின்றன. வீடுகளுக்கான முதல் தவணை நிதியுதவி ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போதிலிருந்து, நவராத்திரி, தசரா, துர்க்கா பூஜை, தந்தேராஸ், தீபாவளி என அனைத்து பண்டிகைகளையும் உங்கள் புதிய வீடுகளில் இதே உற்சாகத்துடன் கொண்டாடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இல்லத்தை வழங்க விரும்புகிறேன். அது உங்கள் கனவுகளுக்கு சிறகுகளை அளிக்கிறது. இந்த இல்லங்கள் யாருடைய பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவோ, அவர்களுக்கு நான் குறிப்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் குஜராத் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தப் பண்டிகைச் சூழலுக்கு இடையே, ஒரு வேதனையும் இருக்கிறது. குஜராத்தின் பல பகுதிகள் இந்த ஆண்டு ஒரே நேரத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக, இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பரவலான, தீவிரமான மழையை நாம் கண்டிருக்கிறோம்இதன் விளைவாக, நாம் பல அன்புக்குரியவர்களை இழந்துள்ளோம். உயிர், பொருட்சேதம் கணிசமாக ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து நிவாரணங்களையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. சிகிச்சை பெற்று வரும் நண்பர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

நண்பர்களே,

பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு குஜராத்திற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குஜராத் நான் பிறந்த மாநிலம்; வாழ்க்கையின் அனைத்து பாடங்களையும் குஜராத் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. நீங்கள் எப்போதும் என் மீது அன்பைப் பொழிந்துள்ளீர்கள். ஒரு மகன் வீடு திரும்பும்போது, தனது சொந்த மக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறும்போது, அவர் புதிய சக்தியைப் பெறுகிறார். அவரது உற்சாகமும் உற்சாகமும் உயர்ந்து நிற்கிறது. ஆசீர்வாதங்களை வழங்க நீங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்திருப்பதை ஒரு பெரிய அதிர்ஷ்டமாக நான் கருதுகிறேன்.

நண்பர்களே,

உங்கள் எதிர்பார்ப்புகளை நான் அறிவேன். பல்வேறு மூலைகளிலிருந்தும் எனக்கு மீண்டும் மீண்டும் தகவல்கள் வந்தன. மூன்றாவது முறையாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு நான் விரைவில் உங்களிடம் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாட்டு மக்கள் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருப்பது இயற்கையானது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பாரத ஜனநாயகத்தில் ஒரு மகத்தான நிகழ்வு. எனவே, "நரேந்திர மோடி நம்மவர், அவர் உடனடியாக குஜராத்திற்கு வர வேண்டும்" என்று குஜராத் உணர்வது இயல்பானது. உங்கள் உணர்வு நியாயமானது. ஆனால் நீங்கள்தான் தேசம்தான் முதன்மையானது என்ற உறுதியுடன் என்னை தில்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். மக்களவைத் தேர்தலின் போது, நான் உங்களுக்கு - இந்த நாட்டு மக்களுக்கு - ஒரு உத்தரவாதத்தை வழங்கினேன். மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று நான் கூறினேன். இந்த 100 நாட்களில், இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நான் இரவும் பகலும் உழைத்தேன். உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, எங்கெல்லாம் முயற்சிகள் தேவைப்பட்டதோ, அங்கெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எதுவும் முழுமையடையாமல் விடப்படவில்லை. கடந்த 100 நாட்களில் பல்வேறு வகையான விஷயங்கள் எவ்வாறு நடக்கத் தொடங்கின என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 குஜராத்தின் சகோதர சகோதரிகளே

இந்த மகன் சர்தார் படேலின் மண்ணில் பிறந்துள்ளேன். ஒவ்வொரு அவமதிப்பையும் தாங்கிக்கொண்டு, நான் ஒரு சபதம் எடுத்துக்கொண்டு, இந்த 100 நாட்களை உங்கள் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் கொள்கைகள், முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்தினேன். என்னை கிண்டல் செய்ய நினைப்பவர்கள் தொடர்ந்து பேசட்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஏளனங்கள் எதற்கும் பதில் சொல்வதில்லை என்று தீர்மானித்தேன். கேலி, கிண்டல், கிண்டல் என எதுவாக இருந்தாலும் தேசத்தின் நலனில் இருந்து நான் விலக மாட்டேன். அந்த அவமானங்களைத் தாங்கிக் கொண்டதன் மூலம், இந்த 100 நாட்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒவ்வொரு குடிமகனின், ஒவ்வொரு குடும்பத்தின், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் நலனையும் உறுதி செய்துள்ளன என்பதில் இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த 100 நாட்களில், 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது நாட்டுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்ட நான் உத்தரவாதம் அளித்தேன். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்று, இந்த நிகழ்ச்சியிலும், குஜராத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளனர். நேற்று, நான் ஜார்க்கண்டில் இருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்தன. கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். நகர்ப்புற நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு வீடுகளுக்கு நிதி உதவி வழங்குவது, தொழிலாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் நல்ல வாடகை வீடுகளை வழங்குவதற்கான இயக்கங்களைத் தொடங்குவது, தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான சிறப்பு வீட்டுத் திட்டங்கள், நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு புதிய விடுதிகளைக் கட்டுவது என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டங்களுக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடிக ரூபாய்ளை செலவிடுகிறது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு, ஏழைகள், நடுத்தர வகுப்பினரின் ஆரோக்கியம் குறித்து மிகவும் குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவரும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சையைப் பெறுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளித்தேன். இந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது, நடுத்தர வர்க்கத்தின் மகன்களும் மகள்களும் தங்கள் பெற்றோரின் சிகிச்சையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நண்பர்களே,

இந்த 100 நாட்களில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக 2 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு பிரதமரின் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பயனடைவார்கள். இப்போது, ஒரு நிறுவனம் முதல் முறையாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினால், அந்த நிறுவனத்தில் ஒரு இளைஞரின் முதல் வேலைக்கான நிதியை அரசு வழங்கும். முத்ரா கடன் திட்டத்தின் அளவையும் அரசு அதிகரித்துள்ளது. இது சுய வேலைவாய்ப்புத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி மிகவும் வெற்றிகரமானதாக உள்ளது. அதன் வெற்றியைப் பார்த்து, முந்தைய வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

நாட்டில் 3 கோடி 'லட்சாதிபதி சகோதரிகள்' உருவாக்கப்படுவார்கள் என்று தாய்மார்கள், சகோதரிகளுக்கு நான் உறுதியளித்தேன். கடந்த ஆண்டுகளில், 1 கோடி  'லட்சாதிபதி சகோதரிகள்' ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளனர். ஆனால், எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில், குஜராத் உட்பட நாடு முழுவதும் 11 லட்சம் புதிய  'லட்சாதிபதி சகோதரிகள்' உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். சமீபத்தில், எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. நமது எண்ணெய் வித்து விவசாயிகள் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், எண்ணெய் இறக்குமதி மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது சோயாபீன், சூரியகாந்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். சமையல் எண்ணெய்களில் நாட்டை தற்சார்புடையதாக மாற்றும் இயக்கத்தையும் இது துரிதப்படுத்தும். பாஸ்மதி அரிசி, வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையையும் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இந்திய அரிசி, வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக் கணக்கான விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.

நண்பர்களே,

கடந்த 100 நாட்களில், ரயில், சாலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோக்கள் தொடர்பான டஜன் கணக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, இன்றைய நிகழ்விலும் இது பிரதிபலிக்கிறது. குஜராத்தில் இணைப்பு தொடர்பான பல திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சிறிது நேரத்திற்கு முன்பு, நான் கிப்ட் சிட்டி நிலையத்திற்கு மெட்ரோவில் பயணம் செய்தேன். இந்த பயணத்தின் போது பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அகமதாபாத் மெட்ரோவின் விரிவாக்கத்தில் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 100 நாட்களில், நாடு முழுவதும் பல நகரங்களில் மெட்ரோ சேவைகளை விரிவுபடுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

நண்பர்களே,

மற்றொரு காரணத்திற்காகவும் இன்று குஜராத்திற்கு சிறப்பு வாய்ந்தது. இன்று முதல் அகமதாபாத் - பூஜ் இடையேயான நமோ பாரத் ரேபிட் ரயில் இயக்கப்படுகிறது. நகரங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்யும் நடுத்தர குடும்பங்களுக்கு நமோ பாரத் துரித ரயில் பெரிதும் பயனளிக்கும். இது வேலை, வணிகங்கள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வசதியை வழங்கும். வரும் காலத்தில், நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள் நமோ பாரத் ரேபிட் ரயில் மூலம் இணைக்கப்படும்.

நண்பர்களே,

கடந்த 100 நாட்களில் வந்தே பாரத் ரயில்களின் நெட்வொர்க்கின் விரைவான விரிவாக்கம் முன்னெப்போதும் இல்லாதது. இந்த காலகட்டத்தில், வந்தே பாரத் ரயில்களுக்காக 15 க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 15 வாரங்களில், சராசரியாக, ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று, ஜார்க்கண்டிலிருந்து பல வந்தே பாரத் ரயில்களை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இன்றும், நாக்பூர்-செகந்திராபாத், கோலாப்பூர்-புனே, ஆக்ரா கான்ட்-பனாரஸ், துர்க்-விசாகப்பட்டினம் மற்றும் புனே-ஹூப்ளி போன்ற வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கியுள்ளன. வாரணாசி - புது டெல்லி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் இப்போது 20 பெட்டிகள் உள்ளன. இன்று, நாடு முழுவதும் 125-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கி வருகின்றன.

நண்பர்களே,

குஜராத் மக்களாகிய நாங்கள் நேரத்தின் மதிப்பை புரிந்துகொண்டுள்ளோம். இது பாரதத்தின் பொற்காலம், பாரதத்தின் 'அம்ரித் காலம்'. அடுத்த 25 ஆண்டுகளில், நமது நாட்டை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும், இதில் குஜராத்துக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. இன்று, குஜராத் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது. குஜராத் பாரதத்தில் மிகவும் நன்றாக இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். குஜராத் தனது முதல் மேட்-இன்-இந்தியா போக்குவரத்து விமானமான சி -295 இந்தியாவுக்கு வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. செமிகண்டக்டர் மிஷனிலும் குஜராத் முன்னணியில் உள்ளது, இது அசாதாரணமானது. இன்று, குஜராத்தில் பெட்ரோலியம், தடயவியல் அல்லது நல்வாழ்வு என எதுவாக இருந்தாலும் சில சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. நவீன பாடங்களைப் படிக்க குஜராத்தில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன, மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கூட தங்கள் வளாகங்களை இங்கு திறக்கின்றன. குஜராத் கலாச்சாரம் முதல் விவசாயம் வரை உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கி வருகிறது. நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பயிர்கள் மற்றும் தானியங்கள் இப்போது குஜராத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதையெல்லாம் சாத்தியமாக்கியது யார்? குஜராத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தது யார்?

நண்பர்களே,

குஜராத்தின் கடின உழைப்பாளிகள்தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக ஒரு தலைமுறை முழுவதும் அயராது உழைத்திருக்கிறது. இப்போது, இங்கிருந்து, குஜராத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அண்மையில் செங்கோட்டையில் நான் ஆற்றிய உரையில், பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து நான் பேசியது உங்களுக்கு நினைவிருக்கும். நாம் ஏதாவது 'ஏற்றுமதி தரம்' என்று கூறும்போது, ஏற்றுமதி செய்யப்படாத தயாரிப்புகள் அதே உயர் தரத்தில் இருக்காது என்று அடிக்கடி குறிப்பிடுகிறோம். அதனால்தான் இதை 'ஏற்றுமதி தரம்' என்று அழைக்கிறோம். இந்த மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். சிறந்த தரமான தயாரிப்புகளுக்கு குஜராத் இந்தியாவிலும், உலகெங்கிலும் பெரும் நற்பெயரை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

நண்பர்களே,

இன்று, பாரதம் புதிய தீர்மானங்களுடன் செயல்படும் விதம் காரணமாக, உலகம் நம் நாட்டைப் பாராட்டுகிறது. சமீப காலங்களில், பல நாடுகளில் பல்வேறு பெரிய சர்வதேச மேடைகளில் பாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக அளவில் பாரதத்திற்கு எவ்வளவு மரியாதை கிடைக்கிறது என்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாரதத்தையும், இந்தியர்களையும் அனைவரும் இருகரம் நீட்டி வரவேற்கின்றனர். பாரதத்துடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எங்காவது ஒரு நெருக்கடி அல்லது பிரச்சினை ஏற்பட்டால், மக்கள் தீர்வுகளுக்காக பாரதத்தை நாடுகிறார்கள். பாரத மக்கள் மூன்றாவது முறையாக நிலையான அரசை தேர்வு செய்துள்ள விதமும், பாரதம் வேகமாக வளர்ந்து வரும் விதமும் நம்மிடம் உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. 140 கோடி இந்தியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைதான், பெருமையுடன் நிமிர்ந்து நிற்கவும், நமது நாட்டின் வலிமையை உலகிற்கு உறுதிப்படுத்தவும் என்னை அனுமதிக்கிறதுபாரதத்தின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கை நமது விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கிறது. பாரதத்தின் மீதான உலகின் நம்பிக்கை அதிகரிக்கும் போது, நமது திறன் வாய்ந்த இளைஞர்களுக்கான தேவை அதிகரிக்கிறது. பாரதத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் போது, நமது ஏற்றுமதி வளர்கிறது. மேலும் அதிக முதலீடுகள் நாட்டிற்கு வருகின்றன. பாரதத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், இங்கு தொழிற்சாலைகளை அமைக்கவும் செய்கிறார்கள்

சகோதர சகோதரிகளே

ஒருபுறம், ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் விளம்பர தூதராக மாற விரும்புகிறார்கள். அதன் திறனை மேம்படுத்த உழைக்கிறார்கள். மறுபுறம், எதிர்மறை எண்ணங்கள் நிறைந்த சிலர் நாட்டிற்கு எதிராக செயல்படுகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். சர்தார் படேல் 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து பாரதத்தை ஒருங்கிணைத்தார். சில அதிகார வெறி பிடித்தவர்கள் பாரதத்தை துண்டு துண்டாக உடைக்க நினைக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் இப்போது கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஜம்மு-காஷ்மீரில் இரண்டு அரசியலமைப்பு, இரண்டு சட்டங்களின் ஆட்சியை மீண்டும் அறிமுகப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். சில குழுக்களை திருப்திப்படுத்த, அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். வெறுப்பு நிறைந்த இவர்கள், பாரதத்தை நிந்திக்க விரும்புகின்றனர். மேலும் குஜராத் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, குஜராத் விழிப்புடன் இருந்து இந்த சிலர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்

நண்பர்களே,

வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் செல்லும் பாரதம், இத்தகைய பிரிவினை சக்திகளை எதிர்த்து உறுதியாக நிற்கும். பாரதத்தின் நற்பெயரை மேம்படுத்தி, ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். இதிலும் குஜராத் முன்னிலை வகிக்கும் என்று எனக்குத் தெரியும். எங்கள் அனைத்து முயற்சிகளாலும் ஒவ்வொரு இலக்கையும் அடைவோம். இன்று, நீங்கள் எனக்கு அளிக்கும் உற்சாகம், ஆசீர்வாதங்களுடன், நான் புதிய சக்தியுடன் முன்னேறிச் செல்வேன், புதிய உத்வேகத்துடன் பணிபுரிவேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காகவும், உங்கள் கனவுகளுக்காகவும் அர்ப்பணிப்பேன். உங்கள் நல்வாழ்வு, உங்கள் வெற்றி, உங்கள் கனவுகளை நனவாக்குவதைத் தவிர எனக்கு வேறு எந்த விருப்பமும் லட்சியமும் இல்லை. பாரதவாசிகளாகிய நீங்கள் எனது கடவுள். இந்த தெய்வ வழிபாட்டில் என்னை அர்ப்பணித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன். இந்த சேவையில் என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன்

எனவே, நண்பர்களே,

நான் உங்களுக்காக வாழ்வேன், உங்களுக்காக போராடுவேன், உங்களுக்காக எனது அனைத்தையும் கொடுப்பேன். என்னை ஆசீர்வதியுங்கள். கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களுடன், 140 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற புதிய நம்பிக்கை, உற்சாகம், தைரியத்துடன் நான் தொடர்ந்து செயல்படுவேன். என்னை ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்ததற்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை நான் குஜராத்துக்கு வந்தாலும், உங்கள் அன்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எனது மனவுறுதி மேலும் வலுவடைகிறது. புதிய வசதிகள், புதிய திட்டங்கள், புதிய வாய்ப்புகள் ஆகியவற்றுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சொல்லுங்கள்

'பாரத் மாதா கீ ஜெ!'

இரு கைகளையும் உயர்த்தி முழு பலத்துடன் உரக்கச் சொல்லுங்கள்.

பாரத் மாதா கி -ஜெ!

பாரத் மாதா கி -ஜெ!

பாரத் மாதா கி -ஜெ!

மிக்க நன்றி.

***

PLM/AG/KR/DL



(Release ID: 2056397) Visitor Counter : 17