ஜவுளித்துறை அமைச்சகம்

10-வது தேசிய கைத்தறி தின கொண்டாட்டங்கள் 2024, ஆகஸ்ட், 7 அன்று நடைபெறுகிறது

Posted On: 06 AUG 2024 2:05PM by PIB Chennai

10-வது தேசிய கைத்தறி தினம் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில்  2024, ஆகஸ்ட் 7 புதன்கிழமை கொண்டாடப்படும். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபல பிரமுகர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

 

விழாவில், கைத்தறி துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கைத்தறி நெசவாளர்களுக்கு சந்த் கபீர் விருதுகள் மற்றும் தேசிய கைத்தறி விருதுகள் வழங்கப்பட உள்ளன. "பாரம்பரியம்– இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தில் நிலைத்தன்மை என்ற புத்தகத்தை" குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட உள்ளார்.

 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி, தேசிய கைத்தறி தினத்தை இந்த அரசு 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி கொண்டாடி வருகிறது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், இந்த நாள் குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இது உள்நாட்டு தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது.

 

தேசிய கைத்தறி தினம் கைத்தறி நெசவாளர்களை கௌரவிப்பதையும், நாட்டின் கலாச்சார, பாரம்பரிய மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதன் மூலம் கைத்தறித் தொழிலுக்கு ஊக்கம் மற்றும் பெருமை உணர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042036  

--------------

IR/RS/KR



(Release ID: 2042139) Visitor Counter : 66