பிரதமர் அலுவலகம்

உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 21 JUL 2024 9:33PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகா எஸ்.ஜெய்சங்கர் அவர்களே, கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, யுனெஸ்கோ தலைமை இயக்குநர்  ஆட்ரி அசௌலே அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களான ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, சுரேஷ் கோபி அவர்களே, உலக பாரம்பரியக் குழுவின் தலைவர் விஷால் சர்மா அவர்களே, அனைத்து பிரமுகர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே

வணக்கம்,

இன்று குரு பூர்ணிமாவின் புனித தருணமாகும். இதையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டம் இத்தகைய புனித நாளில் தொடங்குவதும், இந்தியா முதல் முறையாக இந்த நிகழ்வை நடத்துவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கிலும் இருந்து வந்துள்ள அனைத்துப் பிரமுகர்கள், விருந்தினர்களுக்கு, குறிப்பாக யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் திருமதி ஆட்ரி அசௌலேவை அன்புடன் வரவேற்கறேன். இந்தியாவில் நடைபெறும் மற்ற உலகளாவிய சந்திப்புகளைப் போன்று  உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டமும் வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைக்கும்.

நண்பர்களே,

வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலங்களில் 350-க்கும் மேற்பட்ட பாரம்பரிய பொருட்கள் நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளன. பண்டைய பாரம்பரிய கலைப்பொருட்கள் திருப்பி கொண்டுவரப்பட்டு இருப்பது, உலகளாவிய தாராள மனப்பான்மையின் வெளிப்பாடாகும். தொழில்நுட்பம் முன்னேறும்போது இந்தத் துறையில் வாய்ப்புகளும் அதிகரிக்கும். 

 
நண்பர்களே,

உலகப் பாரம்பரியக் குழுவை நான் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவது இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் விஷயம். வடகிழக்கு இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைதாம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவின் 43-வது உலகப் பாரம்பரிய தளம் என்பதுடன், உலகப் பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்ற வடகிழக்கு இந்தியாவின் முதல் பாரம்பரிய தளமாகும். 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேதார்நாத் கோயில், குளிர்காலத்தில் இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இன்று சவாலான இடமாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியம், உயர்மட்ட பொறியியல் நுட்பத்திற்குச் சாட்சியாக உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், அதன் அற்புதமான கட்டிடக்கலை அமைப்பு, அதில் இடம் பெற்றுள்ள சிலைகள் ஆகியவை அதியசயம் நிறைந்தவை.

நண்பர்களே,

வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டது.   இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியிம் பாரம்பரியமும் சார்ந்தது. காசி விஸ்வநாதர் வழித்தடம், ஸ்ரீ ராமர் ஆலயம், பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் நவீன வளாகம் போன்று  கடந்த 10 ஆண்டுகளில்  குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பாரம்பரியம் தொடர்பான இந்தியாவின் இந்தத் தீர்மானம் முழு மனிதகுலத்திற்கும் சேவை செய்யும் உணர்வுடன் இணைந்துள்ளது. இந்திய கலாச்சாரம் நம்மைப் பற்றியும் பொதுவானதைப் பற்றியும் பேசுகிறது. சுயத்தைப் பற்றி, தனிப்பட்டதைப் பற்றி அல்ல.

நண்பர்களே,

இறுதியாக, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் மேலும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். பாரதத்தை கண்டு உணருங்கள். உங்கள் வசதிக்காக பாரம்பரிய தளங்களுக்கான சுற்றுலா வசதியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த அனுபவம் உங்கள் பயணத்தை மறக்கமுடியாததாக மாற்றும் என்று நான் நம்புகிறேன். உலக பாரம்பரியக் குழுக் கூட்டத்திற்கு வந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள். 

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****

PLM/DL
 



(Release ID: 2038123) Visitor Counter : 22