பிரதமர் அலுவலகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்


ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார்

ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, விண்வெளி வீரராக நியமிக்கப்பட்டவர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கத்தை' வழங்கினார்

"புதிய கால சக்கரத்தில், உலக அளவில் விண்வெளித் துறையில் இந்தியா தனது இடத்தை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது, இது நமது விண்வெளித் திட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது"

"நியமிக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் வெறும் நான்கு பெயர்கள் அல்லது தனிநபர்கள் அல்ல, அவர்கள் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் நான்கு சக்திகள்"

"விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்குபேர் இன்றைய இந்தியாவின் நம்பிக்கை, துணிச்சல், வீரம், ஒழுக்கத்தை அடையாளப்படுத்துகிறார்கள்"

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்கிறார். ஆனால் தற்போது, தருணம் நெருங்குகிறது. ராக்கெட் நம்முடையது"

"உலகின் முதல் 3 பொருளாதார நாடாக இந்தியாவைத் திகழச் செய்யவுள்ள அதே நேரத்தில், நாட்டின் ககன்யான் நமது விண

Posted On: 27 FEB 2024 1:19PM by PIB Chennai

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்  'டிரைசோனிக் காற்றியல் சுரங்கம்' ஆகியவை அடங்கும்.  ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த திரு மோடி, நான்கு விண்வெளி வீரர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார். குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களால் அரங்கம் எதிரொலித்த நிலையில், விண்வெளி வீரர்களுக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்ப அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணமும் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினரையும் வரையறுக்கும் சிறப்பான தருணங்களைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நிலம், காற்று, நீர், விண்வெளி ஆகியவற்றில் நாட்டின் வரலாற்று சாதனைகள் குறித்து தற்போதைய தலைமுறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் இன்று என்று கூறினார். அயோத்தியில் உருவான புதிய காலச் சக்கரத்தின் தொடக்கம் குறித்த தமது அறிக்கையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, உலக அளவில் இந்தியா தொடர்ந்து தமது இடத்தை விரிவுபடுத்தி வருவதாகவும், அதன்  அம்சங்களை நாட்டின் விண்வெளித் திட்டத்தில் காணலாம் என்றும் கூறினார்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதன் மூலம் சந்திரயான் விண்கலத்தின் வெற்றியை பிரதமர் நினைவு கூர்ந்தார். "இன்று சிவ-சக்தி முனை உலகில் இந்தியாவின் வலிமையை அறிமுகப்படுத்துகிறது" என்று அவர் கூறினார். விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்ட நான்கு ககன்யான் வீரர்களின் அறிமுகம் ஒரு வரலாற்று நிகழ்வு என்று அவர் கூறினார். "அவை வெறும் நான்கு பெயர்கள் அல்லது தனிநபர்கள் அல்ல, அவை 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் நான்கு சக்திகள்" என்று பிரதமர் கூறினார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்கிறார். ஆனால், தற்போது தருணம் நெருங்குகிறது, ராக்கெட்  நமக்கு சொந்தமானது என்று அவர் கூறினார்.  விண்வெளி வீரர்களாக நியமிக்கப்படுபவர்களை சந்தித்து நாட்டுக்கு அறிமுகம் செய்து வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், நாட்டின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் பெயர்கள் இந்தியாவின் வெற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இன்றைய இந்தியாவின் நம்பிக்கை, துணிச்சல், வீரம், ஒழுக்கத்தின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்றும் கூறினார். பயிற்சியில் அவர்களின் அர்ப்பணிப்பு, முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் இந்தியாவின் அமிர்த தலைமுறையின் பிரதிநிதிகள் என்றும், அனைத்துத் துன்பங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் வலிமையைக் காட்டுகிறார்கள் என்றும் கூறினார். இந்த இயக்கத்திற்கு ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனதின் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக யோகாவின் பங்கைக் குறிப்பிட்டார். நாட்டின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் அவர்களின் மீது உள்ளது என்று பிரதமர் திரு மோடி தெரிவித்தார். ககன்யான் திட்டத்துடன் தொடர்புடைய இஸ்ரோவைச் சேர்ந்த அனைத்துப் பயிற்சி ஊழியர்களுக்கும் அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நான்கு விண்வெளி வீரர்கள் மீது பிரபலங்களின் கவனம் செலுத்தப்படுவது அவர்களின் பயிற்சியில் இடையூறை ஏற்படுத்தக்கூடும் என்றும், பிரதமர் சில கவலைகளைத் தெரிவித்தார். விண்வெளி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார், இதனால் அவர்கள் கவனச்சிதறல் இல்லாமல் தங்கள் பயிற்சியைத் தொடர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ககன்யான் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்ட போது, ககன்யானில் உள்ள பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறவுள்ள நிலையில், ககன்யான் தயாராகி வருவது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார். இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் மகளிர் சக்தியின் பங்கைப் பாராட்டியப் பிரதமர், "அது சந்திரயான் விண்கலமாக இருந்தாலும் சரி, ககன்யானாக இருந்தாலும் சரி, பெண் விஞ்ஞானிகள் இல்லாமல் இதுபோன்ற எந்த ஒரு திட்டத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாது" என்று கூறினார். இஸ்ரோவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைப் பதவிகளில் உள்ளனர்.

இளைய தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மைக்கான விதைகளை விதைப்பதே இந்தியாவின் விண்வெளித் துறையின் முக்கிய பங்களிப்பு என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இஸ்ரோ அடைந்துள்ள வெற்றி, இன்றைய குழந்தைகளிடையே விஞ்ஞானியாக வளரும் எண்ணத்தை விதைக்கிறது என்று குறிப்பிட்டார். "ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இன்று காகித விமானங்களை உருவாக்குபவர்கள் உங்களைப் போன்ற விஞ்ஞானிகளாக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் விஞ்ஞானிகளை நோக்கி கூறிய பிரதமர், இளைஞர்களின் மன உறுதி ஒரு நாட்டின் செல்வத்தை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். சந்திரயான் 2 தரையிறங்கும் நேரம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது என்று கூறிய அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது இளைஞர்களுக்கு புதிய சக்தியை  ஊட்டியது என்று கூறினார். "இந்த நாள் இப்போது விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது" என்று கூறிய அவர், விண்வெளித் துறையில் நாடு செய்துள்ள பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்தார். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது, ஒரே ராக்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஆதித்யா எல்1 சூரிய ஒளி விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது போன்ற நாட்டின் சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், வெகு சில நாடுகளே இதுபோன்ற சாதனைகளைச் செய்துள்ளன என்றார். 2024-ம் ஆண்டின் முதல் சில வாரங்களில் செயற்கைக் கோள் கண்காட்சி, இன்சாட் 3டிஎஸ் ஆகியவற்றின் சமீபத்திய வெற்றிகளையும் அவர் குறிப்பிட்டார்.

"நீங்கள் அனைவரும் எதிர்காலச் சாத்தியக்கூறுகளின் புதிய கதவுகளைத் திறக்கிறீர்கள்" என்று பிரதமர் திரு மோடி இஸ்ரோ குழுவினரிடம் கூறினார். மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்கு வளர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 44 பில்லியன் டாலர்களை எட்டும் என்று பிரதமர் கூறினார். விண்வெளித் துறையில் இந்தியா உலகளாவிய வர்த்தக மையமாக மாறி வருகிறது என்று அவர் கூறினார். வரும் நாட்களில், இந்தியா மீண்டும் சந்திரனுக்குச் செல்லும். நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை மீட்டெடுக்கும் புதிய லட்சியம் குறித்தும் அவர் தெரிவித்தார். வீனசும் ரேடாரில் உள்ளது என்று அவர் கூறினார். 2035-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அதன் சொந்த விண்வெளி நிலையம் இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், "இந்த அமிர்த காலத்தில், ஒரு இந்திய விண்வெளி வீரர் இந்திய ராக்கெட்டில் நிலவில் இறங்குவார்" என்று பிரதமர் திரு மோடி கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள சாதனைகளை 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், நாடு இதுவரை 400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதாகவும், தற்போது 33 செயற்கைக்கோள்கள் மட்டுமே விண்ணில் செலுத்தப்பட்டதாகவும், இளைஞர்கள் சார்ந்த விண்வெளி புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 அல்லது 3-ல் இருந்து 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அவர்களின் வருகையை இன்று அங்கீகரித்த பிரதமர், அவர்களின் தொலைநோக்கு, திறமை மற்றும் தொழில்முனைவோரைப் பாராட்டினார். விண்வெளித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் விண்வெளி சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் திரு மோடி பேசினார், சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையான விண்வெளித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதியைக் குறிப்பிட்டார். இந்தச் சீர்திருத்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய விண்வெளி நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் நிறுவ முடியும் என்றும், இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் தீர்மானம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், விண்வெளித் துறையின் பங்கை எடுத்துரைத்தார். "விண்வெளி அறிவியல் என்பது ராக்கெட் அறிவியல் மட்டுமல்ல, அது மிகப்பெரிய சமூக அறிவியலும் கூட. விண்வெளி தொழில்நுட்பத்தால் சமூகம் மிகவும் பயனடைகிறது. வேளாண்மை, வானிலை தொடர்பான, பேரிடர் எச்சரிக்கை, நீர்ப்பாசனம் தொடர்பான, வழிசெலுத்தல் வரைபடங்கள் மற்றும் மீனவர்களுக்கான நேவிக்கேசன்  அமைப்பு போன்ற பிற பயன்பாடுகள் பற்றி அவர் குறிப்பிட்டார். எல்லைப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற விண்வெளி அறிவியலின் பிற பயன்பாடுகள் குறித்தும் அவர் தொடர்ந்து பேசினார். "வளர்ச்சியடைந்த பாரத அமைப்பை உருவாக்குவதில்  உங்களுக்கும், இஸ்ரோ மற்றும் ஒட்டுமொத்த விண்வெளித் துறைக்கும் பெரும் பங்கு உள்ளது" என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான், கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன், விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான திரு எஸ். சோம்நாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

நாட்டின் விண்வெளித் துறையை அதன் முழுத் திறனை உணருமாறு சீர்திருத்துவதற்கான பிரதமரின் பார்வை, இந்தத் துறையில் தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாடு ஆகியவை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று மூன்று முக்கியமான விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதால் ஊக்கமளிக்கின்றன. இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி ஒருங்கிணைப்பு வசதி, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின் மற்றும் நிலைப் பரிசோதனை வசதி', திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 'ட்ரைசோனிக் காற்றியக்க சுரங்கம்'. விண்வெளித் துறைக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்கும். இந்த மூன்று திட்டங்களும் சுமார் 1800 கோடி ரூபாய் ஒட்டுமொத்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி, பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் போது ஆண்டுக்கு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த அதிநவீன வசதி எஸ்.எஸ்.எல்.வி, தனியார் விண்வெளி நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பிற சிறிய செலுத்து வாகனங்களின் ஏவுதல்களையும் பூர்த்தி செய்ய முடியும்.

ஐ.பி.ஆர்.சி மகேந்திரகிரியில் புதிய 'செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த என்ஜின், நிலைப் பரிசோதனை வசதி' ஆகியவை செமி கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் நிலைகளை உருவாக்க உதவும், இது தற்போதைய செலுத்து வாகனங்களின் பேலோட் திறனை அதிகரிக்கும். இந்த வசதி 200 டன் வரை உந்துவிசை இயந்திரங்களைச் சோதிக்க திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் விநியோக அமைப்புகளைக் கொண்டுள்ளது.

 

வளிமண்டலத்தில் ராக்கெட்டுகள், விமானங்களின் பண்புகளின் காற்றியக்கவியல் சோதனைக்கு காற்று சுரங்கங்கள் அவசியம். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் திறக்கப்படும் "ட்ரைசோனிக் காற்றியக்க சுரங்கம்" ஒரு சிக்கலான தொழில்நுட்ப அமைப்பாகும், இது நமது எதிர்காலத் தொழில்நுட்ப மேம்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யும்.

தமது பயணத்தின் போது, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், விண்வெளி வீரர்களுக்கு 'விண்வெளி வீரர் பதக்கங்களை' வழங்கினார்.  ககன்யான் திட்டம் என்பது இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமாகும், இதற்காக பல்வேறு இஸ்ரோ மையங்களில் விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

***

ANU/PKV/IR/AG/KV



(Release ID: 2009393) Visitor Counter : 88