பிரதமர் அலுவலகம்

காசி தமிழ் சங்கமம் 2023-ஐப் பிரதமர் தொடங்கிவைத்தார்


திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழ் இலக்கியங்களின் பல மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார்

கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

"காசி தமிழ் சங்கமம் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை மேலும் அதிகரிக்கிறது"

"காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவுகள் உணர்வுபூர்வமானவை, ஆக்கபூர்வமானவை"

"ஒரு தேசமாக இந்தியாவின் அடையாளம் ஆன்மீக நம்பிக்கைகளில் வேரூன்றியுள்ளது"

"நமது பகிரப்பட்ட பாரம்பரியம் நமது உறவுகளின் ஆழத்தை உணர வைக்கிறது"

Posted On: 17 DEC 2023 8:11PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2023 மாநாட்டைப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலைக்  கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழ் இலக்கியங்களின் பல மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். கண்காட்சியைப்  பார்வையிட்ட அவர், கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். நாட்டின் மிக முக்கியமான மற்றும் தொன்மையான கல்வி நிலையங்களான தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளைக் கொண்டாடுவதையும், மீண்டும் உறுதிப்படுத்துவதையும்,  கண்டறிவதையும் காசி தமிழ் சங்கமம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் விருந்தினர்களாக அல்லாமல் தனது குடும்ப உறுப்பினர்களாக வரவேற்றார். தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது  மகாதேவரின் ஒரு இருப்பிடத்திலிருந்து மதுரை மீனாட்சி முதல் காசி விசாலாட்சி வரை பயணம் செய்வதாகும். தமிழக மக்களுக்கும் காசி மக்களுக்கும் இடையிலான தனித்துவமான அன்பு மற்றும் தொடர்பை எடுத்துரைத்த பிரதமர், காசி மக்களின் விருந்தோம்பல் பற்றியும் கூறினார். மகாதேவரின் ஆசீர்வாதத்துடன், பங்கேற்பாளர்கள் காசியின் கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் நினைவுகளுடன் தமிழகம் திரும்புவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி தனது உரையை  தமிழில் மொழிபெயர்ப்பதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை முதல் முறையாக எடுத்துரைத்தார். மேலும் எதிர்கால நிகழ்வுகளில் அதன் பயன்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர், திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற உன்னதமான தமிழ் இலக்கியங்களின் பல மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை இந்த விழாவில் வெளியிட்டார். சுப்பிரமணிய பாரதியை மேற்கோள் காட்டிய பிரதமர், காசி தமிழ் சங்கமத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகின்றன என்றார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக மடங்களின் தலைவர்கள், மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என்றும், இது உரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சிறந்த தளமாக மாறியுள்ளது என்றும் திரு. மோடி குறிப்பிட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,  சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் கூட்டு முயற்சி குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.  வித்யா சக்தி முன்முயற்சியின் கீழ் வாரணாசியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் சென்னை ஐ.ஐ.டி ஆன்லைன் மூலம் ஆதரவை வழங்குகிறது. காசி மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான பிணைப்புக்கு  சமீபத்திய இந்த நிகழ்வுகள் சான்று என்று பிரதமர் கூறினார்.

"காசி தமிழ் சங்கமம் ஒரே  பாரதம், உன்னத  பாரதம்" என்ற உணர்வை மேலும் அதிகரிக்கிறது என்று பிரதமர் கூறினார். காசி தெலுங்கு சங்கமம், சவுராஷ்டிரா காசி சங்கமம் ஆகியவற்றை உருவாக்கியதன் பின்னணியில் இந்த உணர்வு இருந்தது என்றார். நாட்டின் அனைத்து ஆளுநர் மாளிகைகளிலும்  பிற மாநில தினங்களைக் கொண்டாடும் புதிய பாரம்பரியத்திலிருந்து 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வு மேலும் வலுவடைந்தது. புதிய நாடாளுமன்றத்தில் ஆதினத் துறவிகளின் மேற்பார்வையில் புனித செங்கோல் நிறுவப்பட்டதையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார், இது 'ஒரே பாரதம், உன்னத  பாரதம்' என்ற அதே உணர்வை பிரதிபலிக்கிறது. "ஒரே பாரதம், உன்னத  பாரதம்" என்ற உணர்வின் இந்த ஓட்டம் இன்று நமது தேசத்தின் ஆன்மாவை உட்செலுத்துகிறது", என்று அவர் கூறினார். 

இந்தியாவின் ஒவ்வொரு நதியின்  நீரும் கங்கை நீர் என்றும், நாட்டின் ஒவ்வொரு புவியியல் இருப்பிடமும் காசி என்றும் மன்னர் பராக்கிரம பாண்டியன் கூறியபடி இந்தியாவின் பன்முகத்தன்மை ஆன்மீக உணர்வில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். வட இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து அந்நிய சக்திகளால் தாக்கப்பட்டு வந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தென்காசி மற்றும் சிவகாசி கோயில்கள் கட்டுவதன் மூலம் காசியின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த மன்னர் பராக்கிரம பாண்டியனின் முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மை மீது ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் ஆர்வத்தையும் திரு. மோடி நினைவு கூர்ந்தார்.

மற்ற நாடுகளில்  அரசியல் ரீதியாக தேசம் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு தேசமாக இந்தியா ஆன்மீக நம்பிக்கைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.  ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜம்  போன்ற மகான்களால் இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். சிவ ஸ்தலங்களுக்கு ஆதின துறவிகள்  யாத்திரைகளின் பங்கையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். "இந்த யாத்திரைகள் காரணமாக, இந்தியா ஒரு தேசமாக நித்தியமாகவும் அசைக்க முடியாததாகவும் உள்ளது" என்று திரு மோடி மேலும் கூறினார்.

காசி, பிரயாக், அயோத்தி மற்றும் பிற புனிதத் தலங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயணம் செய்து வருவதைக் கவனித்த பிரதமர் மோடி, பண்டைய பாரம்பரியங்கள் மீது நாட்டின் இளைஞர்களின் ஆர்வம் உச்சத்தில் இருப்பது குறித்து திருப்தி தெரிவித்தார். "மகாதேவருடன் ராமேஸ்வரத்தை நிறுவிய அயோத்தியில் ராமரை தரிசனம் செய்வது தெய்வீகமானது" என்று கூறிய பிரதமர், காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்பவர்களின் அயோத்தி வருகைக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஒருவருக்கொருவர் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தைப்  பிரதமர் வலியுறுத்தினார், ஏனெனில் இது நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நல்லுறவை வளர்க்கிறது. இரண்டு பெரிய கோயில் நகரங்களான காசி மற்றும் மதுரையை எடுத்துக்காட்டாகக் கூறிய திரு. மோடி, தமிழ் இலக்கியம் வைகை,  கங்கை ஆகிய இரண்டையும் பற்றி பேசுகிறது என்றார். "இந்தப்  பாரம்பரியத்தைப் பற்றி நாங்கள் அறியும்போது எங்கள் உறவுகளின் ஆழத்தை உணர்கிறோம்", என்று அவர் கூறினார்.

காசி - தமிழ் சங்கமம்  தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் என்றும், ஒரே பாரதம் உன்னத  பாரதம்  என்ற உணர்வை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்த பிரதமர், காசிக்கு வருகை தருபவர்களுக்கு இனிமையான தங்குமிடத்தை எதிர்பார்ப்பதுடன், தனது நிகழ்ச்சியால் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கவர்ந்த பிரபல பாடகர் ஸ்ரீராமுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    

    

        

*******

ANU/AD/SMB/DL



(Release ID: 1987548) Visitor Counter : 91