பிரதமர் அலுவலகம்

மஹாராஷ்டிராவில் 511 திறன் மேம்பாட்டு மையங்கள் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 OCT 2023 7:48PM by PIB Chennai

வணக்கம்!

மஹாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், திரு அஜித் பவார், திரு மங்கள் பிரபாத் லோதா மற்றும் மாநில அரசின் மற்ற அனைத்து அமைச்சர்களே!

நவராத்திரிப் பண்டிகை நடந்து வருகிறது. அன்னையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதாவை வணங்கும் நாள் இன்று. ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு எல்லா சந்தோஷமும், புகழும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த மகிழ்ச்சியையும் புகழையும் அடைவது கல்வி மற்றும் திறமையால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய நல்ல தருணத்தில், மகாராஷ்டிராவின் பிள்ளைகளுக்காகத் திறன் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய திட்டம் தொடங்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பாதையில் முன்னேற உறுதி பூண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின், வாழ்க்கை இன்று காலை மங்களகரமானதாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிராவில் 511 ஊரகத் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நண்பர்களே,

இன்று திறன்மிக்க இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் மூத்தக் குடிமக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அங்கு முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயிற்சி பெற்ற இளைஞர்கள் அரிதாகவே இருக்கின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள், உலகின் 16 நாடுகள் சுமார் 40 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளில் திறமையான தொழில் வல்லுநர்கள் இல்லாததால், அவர்கள் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளனர். கட்டுமானத் துறை, சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை, விருந்தோம்பல், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற பல துறைகளுக்கு இன்று வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. எனவே, இன்று இந்தியா தனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும் தனது திறமையான நிபுணர்களைத் தயார் செய்து வருகிறது.

மகாராஷ்டிராவின் கிராமங்களில் அமைக்கப்பட உள்ள இந்தப் புதிய திறன் மேம்பாட்டு மையங்கள் உலகெங்கிலும் உள்ள வாய்ப்புகளுக்கு இளைஞர்களாட தயார்படுத்தும். இந்த மையங்களில் கட்டுமானத் துறை தொடர்பான திறன்கள் கற்பிக்கப்படும். நவீன முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது தொடர்பான திறன்களும் கற்பிக்கப்படும். மகாராஷ்டிராவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பணிகளுக்கான வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளன. இது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கும் பல மையங்களும் அமைக்கப்படும். இன்று இந்தியா மின்னணு மற்றும் கணினி சாதனங்களின் முக்கிய மையமாக மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த துறை தொடர்பான திறன்களும் பல்வேறு மையங்களில் கற்பிக்கப்படும். இந்தத் திறன் மேம்பாட்டு மையங்களுக்காக மகாராஷ்டிராவின் இளைஞர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்.

நண்பர்களே,

இத்தகைய திறன் மேம்பாட்டு முயற்சிகளால் சமூக நீதியும் அதிக உத்வேகம் பெற்றுள்ளது. பாபா சாகேப் அம்பேத்கரும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். பாபா சாகேபின் சிந்தனை கள எதார்த்தத்துடன் தொடர்புடையது. நமது தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு போதுமான நிலம் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக, தொழில்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு மிக முக்கியமான முன்நிபந்தனை திறன் ஆகும். கடந்த காலங்களில், சமூகத்தின் இந்தப் பிரிவினரில் பெரும்பாலோர் திறமையின்மை காரணமாக நல்ல வேலைவாய்ப்புகளை இழந்தனர். இன்று மத்திய அரசின் திறன் திட்டங்களால் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின குடும்பத்தினர் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

நண்பர்களே,

இந்தியாவில் பெண் கல்விக்கான சமூகத் தடைகளைத் தகர்த்தெறிவதற்கான வழியை மாதா சாவித்திரிபாய் புலே காட்டியுள்ளார். அறிவும் திறமையும் உள்ளவர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. மாதா சாவித்திரிபாயால் ஈர்க்கப்பட்ட அரசும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பயிற்சிக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. இன்று ஒவ்வொரு கிராமத்திலும் மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது நாடும் ட்ரோன்கள் மூலம் விவசாயம் மற்றும் பல்வேறு பணிகளை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, கிராமங்களில் வசிக்கும் சகோதரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

நண்பர்களே,

ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற குடும்பங்கள் உள்ளன, அவை தங்கள் திறமைகளைத் தலைமுறைக் தலைமுறையாக கடத்துகின்றன. முடி திருத்துபவர்கள், காலணி தயாரிப்பவர்கள், சலவைத்தொழிலாளர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், குயவர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள் போன்ற திறமையான குடும்பங்கள் இல்லாத கிராமமே இல்லை. அத்தகைய குடும்பங்களுக்கு ஆதரவளிக்க, அரசு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதன் கீழ், பணிகளை முன்னெடுத்துச் செல்லப் பயிற்சி முதல் நவீன உபகரணங்கள் வழங்குவது வரை ஒவ்வொரு நிலையிலும் அரசு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி செலவிட உள்ளது. மகாராஷ்டிராவில் அமைக்கப்பட உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற திறன் மேம்பாட்டு மையங்களும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிரா அரசை நான் குறிப்பாகப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

திறன் மேம்பாட்டிற்கான இந்த முயற்சிகளுக்கு இடையே திறன்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டை வலுப்படுத்தும் துறைகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

வணக்கம்!

***


ANU/AD/BS/RS/KPG



(Release ID: 1969518) Visitor Counter : 86