நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூலதன முதலீடு செலவு ரூ. 10 லட்சம் கோடியாக, 33% உயர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2023 1:01PM by PIB Chennai

தொடர்ந்து மூன்றாவது முறையாக மூலதன முதலீடு செலவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மூலதன முதலீடு செலவு 33% கூடுதலாக, ரூ. 10 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019- 20ஆம் ஆண்டின் செலவை விட மூன்று மடங்கு அதிகமான இந்த தொகை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும்.

மத்திய அரசின் நேரடி மூலதன முதலீடு, மாநிலங்களுக்கு மானியங்கள் மூலம் மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்கான முயற்சிக்கு வலு சேர்ப்பதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அரசின் இந்த ‘செயல்திறன் வாய்ந்த மூலதன செலவு’, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%ஆக, ரூ. 13.7 லட்சம் கோடியாக இருக்கும்.

மாநிலங்களை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிக்கவும், மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகால வட்டியில்லா கடனை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ. 1.3 லட்சம் கோடியாக இருக்கும்.

ரயில்வே, சாலை, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி போன்ற உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் தனியார் துறையினரின் முதலீட்டை ஈர்ப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு நிதி செயலகம், பங்குதாரர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தமது உரையின்போது நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

******

(Release ID: 1895289)


(வெளியீட்டு அடையாள எண்: 1895690) வருகையாளர் எண்ணிக்கை : 285
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam