மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கர்ப்பப்பைப் புற்று நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இது குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடையே ஏற்படுத்துமாறும் மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

Posted On: 22 DEC 2022 9:24AM by PIB Chennai

கர்ப்பப்பைப் புற்று நோய் தடுத்தல் மற்றும் எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் நாடு முழுவதும் உள்ள மாணவிகளிடையே, விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து மத்திய கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், கர்ப்பப்பைப் புற்றுநோய் என்பது உலக அளவில், பெண்களைப் பாதிக்கும் 4-வது முக்கியப் புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில், கர்ப்பப்பைப் புற்று நோய் என்பது 2-வது முக்கியப் புற்று நோய் என்றும் உலக அளவில் இந்தியாவில், இதனால் பாதிக்கப்படுவோர் அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.  முன்கூட்டியே கண்டறியப்பட்டால் கர்ப்பப்பைப் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்றும் குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர்.  எச்பிவி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பைப்  புற்றுநோயைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.   இதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட  சிறுமிகளுக்கு  ஒரு முறை எச்பிவி தடுப்பூசியை செலுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தடுப்பூசி, முதல் கட்டமாக பள்ளிகளில், படிக்கும் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில், எச்பிவி தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மேலாண்மை  நிர்வாகங்களை ஒருங்கிணைக்குமாறும் பள்ளிகளில் படிக்கும் 9 வயது முதல் 14 வயது உடைய மாணவிகளின் விவரங்களை சேகரிக்குமாறும் அதனை யு-வின் செயலியில் பதிவேற்றம் செய்யுமாறும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அக்கடிதத்தின்  மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

**************

AP/IR/KPG/RR



(Release ID: 1885639) Visitor Counter : 169