பிரதமர் அலுவலகம்

ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 08 NOV 2022 7:00PM by PIB Chennai

எனது அன்பிற்கினிய நாட்டுமக்களே மற்றும் உலக சமூகத்தின் குடும்ப உறுப்பினர்களே,

சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 1-ம் தேதி முதல், ஜி-20 தலைமைப் பதவியை இந்தியா ஏற்கிறது. இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இந்நிலையில் இன்று இந்த உச்சிமாநாட்டின் இணையதளம், கருப்பொருள் மற்றும் இலச்சினை ஆகியவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம்  மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 உள்ளது.

ஜி-20  என்பது உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட 20 நாடுகளின் குழுவாகும்.

இந்தியா இப்போது இந்த ஜி-20 குழுவிற்கு தலைமை தாங்கப் போகிறது. இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம்.   தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில் ஜி-20 தலைவர் பதவி வகித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஜி-20 மற்றும் அது தொடர்பான நிகழ்வுகள் குறித்த இந்தியாவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜி-20 இலச்சினை வெளியீட்டில் குடிமக்களின் பங்களிப்பு சிறப்பானதாகும் இலச்சினைக்காக ஆயிரக்கணக்கான பேர் ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்கியதற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரின் ஆதரவிற்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  இந்த ஆலோசனைகள் உலகளாவிய நிகழ்வின் முகமாக மாறிவருகின்றன.

 

நண்பர்களே,

ஜி-20 இலச்சினை என்பது வெறும் இலச்சினை அல்ல.  இது ஒரு செய்தி, இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. ‘வாசுதைவ குடும்பகம்’-உலகமே ஒரே குடும்பம் என்பது நம் எண்ணங்களில் என்றும்  நிறைந்திருக்கும் ஒரு தீர்மானம். உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனை ஜி-20 இலச்சினை மூலம் பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைதத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும். இந்த இலச்சினை மற்றும் கருப்பொருள், இந்தியாவின்  பல முக்கிய போதனைகளைக் குறிக்கிறது. போரில் இருந்து விடுதலை பெற புத்தரின் போதனை, வன்முறையை எதிர்கொள்ள மகாத்மா காந்தியின் தீர்வுகள், ஜி-20 மூலம், இந்தியா அவர்களுக்கு ஒரு புதிய உயரத்தை அளிக்கிறது.

 

நண்பர்களே,

இந்தியாவின் ஜி-20 தலைமைப் பொறுப்பு நெருக்கடி மற்றும் குழப்பமான நேரத்தில் வருகிறது. ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் உலகளாவிய தொற்றுநோய், மோதல்கள் மற்றும் பல பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் பின்விளைவுகளை உலகம் கையாள்கிறது. ஜி-20 இலச்சினையில் உள்ள தாமரை இது போன்ற கடினமான காலங்களில் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. உலகம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அதை சிறந்த இடமாக மாற்றி  நாம் முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம்.

இந்திய கலாச்சாரத்தில், அறிவு மற்றும் செழுமை என்ற இரு தெய்வங்களும் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறது. ஜி-20 இலச்சினையில் தாமரையின் மீது வைக்கப்பட்டுள்ள பூமியானது, பகிரப்பட்ட அறிவு கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகிறது. அதே நேரத்தில் அந்த வளமை  கடைசி மைலை அடைய உதவுகிறது.

அதனால்தான், ஜி 20 இலச்சினையில்,தாமரை மீது பூமி வைக்கப்பட்டுள்ளது. இலச்சினையில் உள்ள தாமரையின் ஏழு இதழ்களும் குறிப்பிடத்தக்கவை. அவை ஏழு கண்டங்களைக் குறிக்கின்றன. ஏழு என்பது இசையின் உலகளாவிய மொழியில் உள்ள குறிப்புகளின் எண்ணிக்கையாகும். இசையில், ஏழு சுவரங்களும் ஒன்றிணைந்தால், அவை சரியான இணக்கத்தை உருவாக்குகின்றன. ஆனால் ஒவ்வொரு குறிப்புக்கும் தனித்தன்மை உண்டு. அதேபோல், ஜி20 பன்முகத்தன்மையை மதிக்கும் அதே வேளையில் உலகை ஒற்றுமையுடன் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நண்பர்களே,

உலகில் ஜி-20 போன்ற பெரிய அமைப்புகளின் மாநாடு நடக்கும் போதெல்லாம், அது அதன் சொந்த இராஜதந்திர மற்றும் புவி-அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான். அது இயற்கையும் கூட.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த உச்சி மாநாடு வெறும் ராஜதந்திர சந்திப்பு அல்ல. இந்தியா இதை தனக்கான புதிய பொறுப்பாக பார்க்கிறது.

இதனை இந்தியா, உலக நாடுகள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையாகவே பார்க்கிறது. இன்று, இந்தியாவை அறிய, இந்தியாவைப் புரிந்துகொள்ள உலகில் முன்பு எப்போதும் இல்லாத ஆர்வம் உள்ளது.

இன்று இந்தியா ஒரு புதிய கோணத்தில் இருந்து  பார்க்கப்படுகிறது. நமது தற்போதைய வெற்றிகள் மதிப்பிடப்படுகின்றன. நமது எதிர்காலம் குறித்து முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கைகள் வெளிப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாகச் செய்ய வேண்டியது நாட்டு மக்களாகிய நம் பொறுப்பாகும். இந்தியாவின் சிந்தனை மற்றும் வலிமை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூக ஆற்றல் ஆகியவற்றை உலகுக்கு அறிமுகப்படுத்துவது நமது பொறுப்பு. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது கலாச்சாரத்தின் அறிவுத்திறன் மற்றும் அதில் உள்ள நவீனத்துவத்துடன் உலக அறிவை மேம்படுத்துவது நமது பொறுப்பு. 'ஜெய்-ஜகத்' – நீதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பிரச்சாரா இயக்கத்தை பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து காட்டிய விதத்தில், இன்று அதை உயிர்ப்பித்து நவீன உலகிற்கு வழங்க வேண்டியுள்ளது.

நாம் அனைவரையும் இணைக்க வேண்டும்.

உலகளாவிய கடமைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலகின் எதிர்காலத்திற்காக அவர்களை பங்கேற்ப வைக்க வேண்டும்.

**************

MSV/GS/DL



(Release ID: 1875586) Visitor Counter : 1047