பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ‘ஒத்துழைப்பினால் செழிப்பு’ என்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
Posted On:
28 MAY 2022 9:57PM by PIB Chennai
குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல், எனது அமைச்சரவை சகாக்கள் திரு அமித் ஷா, திரு மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டில், குஜராத் அரசின் அமைச்சர் திரு ஜெகதீஷ் விஷ்வகர்மா, கூட்டுறவு இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த பிரமுகர்கள் அனைவருக்கும் வணக்கம். ‘கூட்டுறவு’ என்பது கிராமங்களின் தன்னம்பிக்கைக்கான ஒரு சிறந்த ஊடகமாகவும் உள்ளது, இது தற்சார்பு இந்தியாவிற்கு ஆற்றல் அளிக்கிறது. தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கு, கிராமங்களுக்கு தன்னிறைவு கிடைப்பது மிகவும் முக்கியம். அதனால்தான், பூஜ்ய பாபு மற்றும் சர்தார் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் கூட்டுறவு கிராம மாதிரியை உருவாக்கும் திசையில் நாம் முன்னேறுகிறோம். குஜராத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நண்பர்களே,
காலோல் நகரில் உருவாக்கப்பட்டுள்ள நானோ யூரியா நவீன உரத்தொழிற்சாலை 1.5 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று 8 ஆலைகள் நாட்டில் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் யூரியா மீதான வெளிநாட்டு சார்பு குறைவதுடன், நாட்டின் பணமும் சேமிக்கப்படும். வருங்காலத்தில் இதர நானோ உரங்களும் நமது விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது குறித்து நமது விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.
நண்பர்களே,
உரங்களுக்கான நானோ தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைவதற்காக நாம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 7-8 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான யூரியா, விவசாயிகளுக்கு செல்லாமல் கருப்பு சந்தைக்கு வந்ததால், விவசாயிகள் பெரும் இன்னலை சந்தித்தனர். புதிய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் பெரிய யூரியா ஆலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. 2014-ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு 100% வேம்பு பூசப்பட்ட யூரியா முன்முயற்சியைத் தொடங்கினோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு போதிய யூரியா விநியோகம் உறுதி செய்யப்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் தெலங்கானாவில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியையும் நாங்கள் எடுத்தோம். இவற்றில் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகின்றன. இதர ஆலைகளிலும் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும்.
நண்பர்களே
உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல தசாப்தங்களாக இந்தியா வெளிநாடுகளை அதிகளவில் சார்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கினால் சர்வதேச சந்தையில் உரங்களின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இது தவிர போர் சூழலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. விவசாயிகள் மீது அதிக அக்கறை கொண்டுள்ள நமது அரசு, பிரச்சினைகளைப் பொறுத்துக் கொள்வது என்று முடிவு செய்ததுடன் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் உறுதிபூண்டது. அதனால் தான் எவ்வளவு கடினமான சூழலிலும் பெரும் உர நெருக்கடி நாட்டில் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. விவசாயிகளின் நலனுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம், விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
தன்னிறைவைப் பொறுத்த வரையில், இந்தியாவின் ஏராளமான சவால்களுக்கு கூட்டுறவே தீர்வாக உள்ளது. இந்த வெற்றியை குஜராத்தில் நாம் அனுபவித்துள்ளோம். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் முன்பு விதைக்கப்பட்ட விதைகள், இன்று குஜராத்தின் பொதுவாழ்வில் ஆக்கப்பூர்வமான ஆதிக்க ஆலமரமாக மாறி, பொருளாதார மற்றும் கூட்டுறவு ஆதிக்கமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியோடு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***************
(Release ID: 1829804)
Visitor Counter : 110
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam