பிரதமர் அலுவலகம்

பாதுகாப்புத் துறை குறித்த பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை

“அண்மைக் காலமாக பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது”

“உங்களது சொந்த நாட்டில் சாதனங்களை உருவாக்கினால்தான் தனித்துவமான வியக்கத்தக்க பொருட்களை பெற முடியும்”

“ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வலிமையான சூழலை உருவாக்குவதற்கான வரைபடம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது”

“உள்நாட்டிலேயே ரூ.54,000 கோடி அளவுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதவிர, 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் பல்வேறு நிலைகளில் உள்ளது”

“வெளிப்படையான, குறிப்பிட்ட கால வரையறைக்குள், நடைமுறை சாத்தியமான மற்றும் நியாயமான பரிசோதனை அமைப்புகள், சோதனை மற்றும் சான்றளிப்பு ஆகியவை வலிமையான பாதுகாப்புத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும்”

Posted On: 25 FEB 2022 11:57AM by PIB Chennai

‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பு-செயல்பாட்டிற்கு அழைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்தது.  பிரதமர் உரையாற்றி வரும் பட்ஜெட்டிற்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் இது நான்காவது ஆகும். 

‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பு-செயல்பாட்டிற்கு அழைப்பு’ என்ற இணையவழிக் கருத்தரங்கின் தலைப்பு நாட்டின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்திலும் சரி, அதன்பின் சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, முற்றிலும் வலிமையாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.  “பிற்காலங்களில் நமது இந்த திறமை வீழ்ச்சி அடைந்த போதிலும், இப்போதும் சரி அல்லது எப்போதும் சரி, நமது திறமைக்கு எவ்வித குறையும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அவர் கூறினார். 

எதிர்மறைகளை முறியடிக்க திடுக்கிடச் செய்யவும் சாதனங்களை நாம் பெற்றிருக்கும் வகையில், நமது பாதுகாப்புத் தளவாடங்கள் தனித்துவமிக்கவையாகவும், தனிப்பயனுடையதாகவும் இருப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். “உங்களது சொந்த நாட்டில் சாதனங்களை உருவாக்கினால்தான் தனித்துவமான திடுக்கிட வைக்கும் பொருட்களை பெற முடியும்”  என்றும் அவர் குறிப்பிட்டார்.  ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வலிமையான சூழலை உருவாக்குவதற்கான வரைபடம்  இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.    பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் 70 சதவீதம் உள்நாட்டுத் தொழில்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை, 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சாதனங்களைக் கொண்ட உள்நாட்டு பொருட்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்புக்குப் பிறகு, சுமார் 54,000 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  இதுதவிர, 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் பல்வேறு நிலைகளில் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.  3-ஆவது பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

ஆயுதக் கொள்முதல் நடைமுறைகள் நீண்டநாட்களுக்கு இழுத்தடிக்கப்பட்டதால், அவை செயல்பாட்டிற்கு வரும்போது, காலம் கடந்தவையாக ஆகிவிடும் சூழல் ஏற்பட்டதையும் பிரதமர் விவரித்தார்.  “இதற்கு ஒரே தீர்வு ‘தற்சார்பு இந்தியா’ மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ ” ஆகியவைதான் என்றும் அவர் வலியுறுத்தினார்.  பாதுகாப்புப் படைகள், தற்சார்பின் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டு முடிவுகள் எடுப்பதற்கும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.  ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் விவகாரத்தில் வீரர்களின் பெருமிதம் மற்றும் உணர்வுகளை மனதில் கொள்வது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த துறைகளில் தற்சார்பு அடைந்தால்தான் இது சாத்தியமாகும் என்றும்  அவர் கூறினார்.

இணைய பாதுகாப்பு என்பது இனியும் டிஜிட்டல் உலகிற்கு மட்டும்தான் பொருந்தக்கூடியது என்றில்லாமல், தேசப் பாதுகாப்பு அம்சமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். “தகவல் தொழில்நுட்பத் துறையில் நமது வலிமை மிகுந்த ஆற்றலை, பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தினால், நமது பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தங்களை பெறுவதில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்களிடையே நிலவும் போட்டி பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது பணத்திற்காகவும், ஊழலுக்கும்தான் வழிவகுப்பதாக கூறினார்.  ஆயுதங்களின் தரம் மற்றும் விரும்பத்தக்க தன்மையில் ஏராளமான குழப்பங்கள் உருவாக்கப்படுகிறது.  இந்த பிரச்சினைக்கு தற்சார்பு இந்தியா இயக்கம்தான் தீர்வு காண்கிறது என்றும் அவர் கூறினார். 

உறுதிப்பாட்டுடன் கூடிய முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக படைக்கல தொழிற்சாலைகள் திகழ்வதாகவும் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.  கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறைசார்ந்த 7 புதிய பொதுத் துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்த நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி, புதிய சந்தை வாய்ப்புகளை எட்டியிருப்பதாகவும் கூறினார்.  “கடந்த 5-6 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு சாதன ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது.  தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் சேவைகளை 75 –க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் வழங்கி வருகிறோம்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு அரசு அளிக்கும் ஊக்கம் காரணமாக, கடந்த 7 ஆண்டுகளில் பாதுகாப்பு சாதன உற்பத்தியை மேற்கொள்ள 350-க்கும் மேற்பட்ட புதிய தொழிற்சாலைகளுக்கான உரிமங்கள்  வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.  அதேவேளையில், 2001 முதல் 2014 வரையிலான 14 ஆண்டுகளில், 200 உரிமங்கள் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது.  டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த துறையின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இணையாக தனியார் துறையினரும் முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 25%, தொழில் நிறுவனங்கள், புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் கல்வியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கென, பிரத்யேக அமைப்புக்கான மாதிரி ஒன்றும் பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “இந்த ஒதுக்கீடு தனியார் தொழில் துறையினரை வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தராக மட்டுமின்றி, பங்குதாரராக மாற்றவும் வகை செய்யும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிப்படையான, குறிப்பிட்ட கால வரையறைக்குள், நடைமுறை சாத்தியமான மற்றும் நியாயமான பரிசோதனை அமைப்புகள், சோதனை மற்றும் சான்றளிப்பு ஆகியவை வலிமையான பாதுகாப்புத் தொழில் துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார்.  சுதந்திரமான அமைப்பால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட் ஒதுக்கீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்த தேவையான புதிய கருத்துக்களை  தெரிவிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.  சமீப ஆண்டுகளாக பட்ஜெட் தாக்கல் ஆகும் தேதி ஒருமாதம் முன்கூட்டியே மாற்றப்பட்டு இருப்பதை முழுமையாக பயன்படுத்தி, பட்ஜெட் நடைமுறைக்கு வரும் தேதியில் களத்தில் பணியாற்ற தொடங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.  

***************



(Release ID: 1801093) Visitor Counter : 196