நிதி அமைச்சகம்

மத்திய பட்ஜெட் 2022-23

Posted On: 01 FEB 2022 1:19PM by PIB Chennai

கட்டமைபைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பெருந்திட்டமான, பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய அரசின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வரும் நிதியாண்டில் நாட்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள்  அமைக்கப்படும் என  கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியின் உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. *நுண்ணிய மற்றும் பேரியல் பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே சுதந்திர பெருவிழாவின் நோக்கம்

1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒரு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்

பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.  இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றும் சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும். இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் 7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக 400 வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்.

பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்

ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் தொடங்கும்  திட்டத்தின் கீழ் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.8 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகம், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்படும்.  

மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடுதான் முக்கிய கோட்பாடாக அமையும். புதிய திட்டத்தின்கீழ் 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பமான ’KAWACH’ இன் கீழ் 2000 கி. மீ தூரம் சாலை 2022-23 இல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதுடன், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து திட்டம் அறிமுகம் வாகனங்களுக்கான மின்கலன்களை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும் என்றும், பொது போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத தூய்மையான போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நகர்ப்புற திட்டமிடலை மாற்றியமைக்க குழு அமைக்கப்படும். மின்னணு வாயிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், அரசு - தனியார் கூட்டு முயற்சியின் கீழ் கொண்டுவரப்படும்.

ரூ.44,605 கோடி மத்திப்பிலான கென் - பெட்வா நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்றும் இதன் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும்  நிதிநிலை அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

75 மாவட்டங்களில் வர்த்தக வங்கிகளின் கிளைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது. 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்

திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்

ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தற்போது தனித்தனியாக உள்ள 12 தொலைக்காட்சி அலைவரிசைகள் 200-ஆக உயர்த்தப்படும். துணைக் கல்வி வழங்கும் வகையில், பிராந்திய மொழியிலும் இந்த அலைவரிசைகள் மாணவர்களுக்கு வகுப்பு பாடங்களுக்கு இணையாக  போதிக்கும்.

சிறு & நடுத்தர தொழில் துறையில் விருந்தோம்பல் சேவையை மேம்படுத்த மார்ச் 2023க்குள் இசிஜிஎல் சேவையை ரூ.50 ஆயிரம் அளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. திறன் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் டிஜிட்டல் இணையதளம் ஏற்படுத்தப்படும்.

புதிய சட்டங்கள் வாயிலாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும். ஒப்பந்தங்கள் வாயிலாக கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்க, அரசு,  தனியார் கூட்டு முயற்சி அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டிருப்பது,  வர்த்தகம் புரிவதை எளிதாக்கும். பாதுகாப்பு மூலதன செலவின ஒதுக்கீட்டில், 68 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய துறைகளில் முன்னேற விரும்பும் 102 மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தப்படும் எனவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் வரும் நிதியாண்டில் கண்டறியப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 80 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். நகர்ப்புற மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் 280 கோடி ரூபாய் செலவில் திறன் மையங்கள் உருவாக்கப்படும்.

குறைந்த மக்கள்தொகை கொண்ட எல்லைப்புற கிராமங்களில் புதிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ்  இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம்

குஜராத்தின் கிப்ட் சிட்டியில் சர்வதேச சமரச தீர்வு மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வரைகலை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் விளையாட்டுகள் மற்றும் கார்ட்டூன் படங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் திறன் வளர்ப்புக்கான  திட்டங்களை வகுக்க சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும்.

சுலபமான வாழ்க்கை & எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம்  ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்

பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி மின்னணு கரன்சியை (மெய்நிகர் ரூபாய்) இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தும். வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க 10 நாட்களுக்குள் 75% அளவிற்கு பணமாக்கும் முறை உருவாக்கப்படும். இதற்காக காகிதமற்ற மின்னணு பில்களை அமைச்சகங்கள் தயாரிக்கும்.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்கு பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கவும்  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

உயர்திறன் மிக்க பாலிசிலிக்கான் உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு  ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிய மேம்படுத்தப்பட்ட வருமான வரித்தாக்கல் படிவம் அறிமுகம் செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று முறை குறைந்த பட்ச வரி விகிதம் 18.5-லிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அனல் மின் நிலையங்களில் ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயுவை குறைக்க 5-7% உயிரி உருண்டைகள் இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியமர்த்தும் நிறுவனத்தால் செலுத்தப்படும் பங்களிப்புக்கான வரிக்கழிவு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு வரி விதிக்கப்படும்.

நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காக பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 68% ஒதுக்கப்பட்டுள்ளது

நாட்டை நவீனப்படுத்தும் ஆற்றல் கொண்ட பசுமை எரிசக்தி & சுலபமான போக்குவரத்து முறைகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்திய தொழில்துறையை மாற்றக்கூடியதாகும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது. மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு. குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது, பட்டை தீட்டாத வைரத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும்  பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------- 



(Release ID: 1794427) Visitor Counter : 3136