பிரதமர் அலுவலகம்

இந்தியா - மத்திய ஆசியா உச்சி மாநாட்டின் முதல் கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 27 JAN 2022 6:31PM by PIB Chennai

மேன்மைமிகுந்தவர்களே,

இந்தியா - மத்திய ஆசியா  முதல் உச்சி மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இந்தியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் அர்த்தமுள்ள 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன.

கடந்த மூன்று தசாப்தங்களாக நமது ஒத்துழைப்பு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இப்போது, இந்த முக்கியமான தருணத்தில், வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் ஒரு லட்சியப்  பார்வையை நாம் வரையறுக்க வேண்டும்.

மாறிவரும் உலகில் நமது மக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் லட்சியங்களை நிறைவேற்றக்கூடிய ஒரு பார்வையாக அது இருக்க வேண்டும்.

மேன்மைமிகுந்தவர்களே,

இருதரப்பு மட்டத்தில், அனைத்து மத்திய ஆசிய நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.

மேன்மைமிகுந்தவர்களே,

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு கஜகஸ்தான் ஒரு முக்கிய பங்குதாரராக மாறியுள்ளது. கஜகஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உஸ்பெகிஸ்தானுடனான வளர்ந்து வரும் ஒத்துழைப்பில் எங்கள் மாநில அரசுகளும் துடிப்புமிக்க பங்குதாரர்களாக உள்ளன. இதில் எனது சொந்த மாநிலமான குஜராத்தும் அடங்கும்.

கல்வி மற்றும் உயர்மட்ட ஆராய்ச்சித் துறையில் கிர்கிஸ்தானுடன்  கூட்டு வைத்துள்ளோம். ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.

பாதுகாப்புத் துறையில் தஜிகிஸ்தானுடன் எங்களுக்கு நீண்டகால ஒத்துழைப்பு உள்ளது. மேலும் அதை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்.

பிராந்திய இணைப்புத் துறையில் இந்திய தொலைநோக்குப் பார்வையின் முக்கிய பகுதியாக துர்க்மெனிஸ்தான் விளங்குகிறத: அஷ்கபாத் ஒப்பந்தத்தில் நாம் பங்கேற்பதில் இருந்து இது தெளிவாகிறது.

மேன்மைமிகுந்தவர்களே,

பிராந்திய பாதுகாப்பில் நம் அனைவருக்கும் ஒரே கவலைகள் மற்றும் குறிக்கோள்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானின் நிகழ்வுகள் குறித்து நாம் அனைவரும் கவலை கொண்டுள்ளோம்.

இந்தச் சூழலில், பிராந்தியப்  பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு நமது பரஸ்பர ஒத்துழைப்பு மேலும் முக்கியமானது.

மேன்மைமிகுந்தவர்களே,

இன்றைய உச்சி மாநாடு மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, பிராந்தியப்  பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியக் கண்ணோட்டத்தில் , ஒருங்கிணைந்த மற்றும் நிலையான பிராந்தியம் என்ற இந்தியாவின் பார்வைக்கு மத்திய ஆசியா மையமாக உள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

நமது ஒத்துழைப்புக்குப்  பயனுள்ள கட்டமைப்பை வழங்குவதே இரண்டாவது நோக்கம். பல்வேறு நிலைகளில் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடையே வழக்கமான தொடர்புகளின் கட்டமைப்பை இது நிறுவும்.

மேலும், நமது ஒத்துழைப்புக்கான ஒரு லட்சியத்  திட்டத்தை உருவாக்குவது மூன்றாவது நோக்கம் ஆகும்.

மேன்மைமிகுந்தவர்களே,

இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் முதல் கூட்டத்திற்கு உங்களை மீண்டும் அன்புடன் வரவேற்கிறேன்.

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.

------



(Release ID: 1793031) Visitor Counter : 272