பிரதமர் அலுவலகம்

குஜராத்தின் கச்சில் அமைந்துள்ள லாக்பட் சாஹிப் குருத்வாராவின் குருபரப் கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 DEC 2021 2:52PM by PIB Chennai

நண்பர்களே,

குருத்வாரா லாக்பட் சாஹிப் காலத்தின் ஓட்டத்திற்கு சாட்சியாக இருக்கிறது. லாக்பட் சாஹிப் கடந்த காலத்தில் எழுச்சிமிக்கதாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் இந்த இடம், மற்ற நாடுகளுக்கு செல்வதற்கான  மிகப் பெரிய வர்த்தக மையமாக இருந்தது.

2001-ஆம் ஆண்டு நில நடுக்கத்திற்குப் பின் குருவின் கருணையால் இந்தப் புனிதமான இடத்திற்கு சேவை செய்யும் பெருமையைப் பெற்றிருந்ததேன். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், இந்த இடத்தின் பழைய பெருமையை மீட்டனர்.

பழங்கால எழுத்து பாணியைப்  பயன்படுத்தி  இந்த சுவர்களில் குருவானி பதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் அப்போது யுனெஸ்கோவால் பெருமை செய்யப்பட்டது.

மகா குரு சாஹிபின் கருணையால், இந்த அரசு குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது ஆண்டுவிழா, குருநானக் தேவ் அவர்களின் 550-வது ஆண்டுவிழா, குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது ஆண்டுவிழா ஆகிய புனிதமான விழாக்களைக் கொண்டாடும் நிலையைப் பெற்றது.

சமீப ஆண்டுகளில் குருநானக் தேவ் அவர்களின் செய்தி புதிய சக்தியுடன் உலகம் முழுவதும் சென்றடைய அனைத்து நிலையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கர்த்தார்பூர் சாஹிப் பாதை 2019-ல் இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

புனிதமான குரு கிரந்த் சாஹிபி்ன் பிரதியை அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். குருவின் கருணைக்கு இதைவிட மகத்தான உதாரணம் என்னவாக இருக்க முடியும்.

ஒரு சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியாவிற்கு 150-க்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை அமெரிக்கா திருப்பித் தந்தது. அவற்றில் ஒன்றாக பாரசீக மொழியில் குரு ஹர்கோவிந்த் அவர்களின் பெயர் எழுதப்பட்ட குறுவாள் இருந்தது. இதையெல்லாம் செய்ய முடிந்தது இந்த அரசுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு.

கல்சா பந்த் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பாய் மோக்கம் சிங் அவர்கள், குஜராத்தை சேர்ந்தவர் என்பது, குஜராத்துக்கு எப்போதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. தேவ பூமியான துவாரகாவில் அவரது நினைவாக குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நாட்டின் சுதந்திரத்திற்கான நமது விடுதலைப் போராட்டத்தில், சீக்கிய சகோதரர்களும், சகோதரிகளும் தீரத்துடன் போராடினர். அவர்களின் தியாகங்களுக்கு ஜாலியன்வாலாபாக்  சாட்சியமாக இருக்கிறது.

கடந்த காலத்திலிருந்து நினைவூட்டல்களையும், ஊக்கத்தையும் பெறுகின்ற 75-வது ஆண்டுப் பெருவிழாக் காலத்தில், இந்தப் பாரம்பரியம் இப்போதும் உயிர்ப்புடனும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இருக்கிறது.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கச்சிலிருந்து கோஹிமா வரை ஒட்டுமொத்த தேசமும், தங்களின் கனவுக்காகவும், சாதனைக்காகவும், ஒருங்கிணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரே இந்தியா உன்னத இந்தியா என்பது நாட்டின் இன்றைய மந்திரமாக இருக்கிறது.  திறன் வாய்ந்த புதிய இந்தியாவை உருவாக்குவது நாட்டின் இன்றைய இலக்காக இருக்கிறது. அனைத்து ஏழைகளுக்கும் சேவை, நலிவுற்ற அனைவருக்கும் முன்னுரிமை என்பது நாட்டின் இன்றைய கொள்கையாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785103

                                                             *********



(Release ID: 1787492) Visitor Counter : 157