தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

விடுதலைப் பெருவிழாவைக் கொண்டாடும் விதமாக, இளைஞர்களின், இளைஞர்களால் மற்றும் இளைஞர்களுக்காக #AIRNxt- நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி தொடங்கியுள்ளது

Posted On: 29 NOV 2021 11:49AM by PIB Chennai

இதற்குமுன் இல்லாத ஒரு நடவடிக்கையாக, இளைய இந்தியா-வை பிரதிநிதித்துவப்படுத்தும் குரல்களுக்காக, நவம்பர் 28,   2021 முதல் தனது ஒலிப்பதிவு அரங்கங்களைப் பயன்படுத்திக்கொள்ள அகில இந்திய வானொலி அனுமதித்துள்ளது.   இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள், அடுத்த 52 வாரங்களுக்கு, உள்ளூர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இளைஞர்களை மையப்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்து நெறிப்படுத்த அனுமதிக்கும்.   இந்த நிகழ்ச்சிகள், கடந்த 75 ஆண்டுகளில் நாடு அடைந்த சாதனைகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் நாடு எட்ட வேண்டிய இலக்கு குறித்த அவர்களது எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசுவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும்.   இதன் மூலம் இளைஞர்கள், தங்களது பரந்த கனவுகளை வெளிப்படுத்தி, இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி விவரிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள 1000 கல்வி நிலையங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இளைஞர்கள், அடுத்த ஓராண்டிற்கு 167 வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். 

வானொலியில் இதுவரை கேட்டிராத இந்தக் குரல்கள், விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக,   #AIRNxt  என்ற புதிய நிகழ்ச்சி மூலம், முதன்முறையாக அகில இந்திய வானொலியில் இடம்பெறும்.  

நாடு முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அகில இந்திய வானொலி-யில் பங்கேற்கக் கூடிய, ஒற்றை மையக்கருத்தைக் கொண்ட மிகப்பெரிய நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும்.  திறமையை கண்டறியக் கூடிய #AIRNxt  என்ற இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகள் மற்றும் பேச்சுமொழிகளில் ஒலிபரப்பப்படும்.  

                                       *****



(Release ID: 1776098) Visitor Counter : 255