பிரதமர் அலுவலகம்

குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் அபிதாமா தின விழாவில் பிரதமர் கலந்து கொண்டார்


“புத்தரின் போதனைகள் ஒட்டு மொத்த உலகிற்கும் பொருந்தும், புத்தரின் தம்மா மனிதகுலத்திற்கானது”

“புத்தர் ஒரு பிரபஞ்சம், ஏனெனில் இதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குவதாக புத்தர் கூறுகிறார். உச்சக்கட்ட பொறுப்புணர்வின் பலனே புத்தரின் புத்தத்துவம்”

“புத்தர் இன்றைக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உத்வேகம் அளிப்பவராகத் திகழ்கிறார், புத்த தம்ம சக்கரம் இந்தியாவின் மூவர்ணக் கொடியில் இடம் பெற்றிருக்கிறது, அது நமக்கு தூண்டுகோலாக திகழ்கிறது”

“புத்தபிரானின் போதனையான ‘அப்பா தீபோ பவா’ இந்தியா தற்சார்பு அடைவதற்கு ஊக்கமளிக்கிறது”

Posted On: 20 OCT 2021 1:26PM by PIB Chennai

குஷிநகர் மகாபரிநிர்வாணா கோயிலில் அபிதாம்மா தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். உத்தரப்பிரதேச ஆளுநர் மற்றும் முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் திரு.ஜி.கிஷன் ரெட்டி, திரு.கிரண் ரிஜிஜூ, திரு.ஜோதிராதித்ய சிந்தியா, இலங்கை அமைச்சர் திரு.நமல் ராஜபக்சே, இலங்கையைச் சேர்ந்த புத்தமத தூதுக்குழுவினர், மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அஸ்வின் மாத பவுர்ணமி புனித நாளில், புத்தபிரானின் புனித நூல் இங்கு கொண்டு வரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து வந்துள்ள தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்புகளை நினைவு கூர்ந்ததுடன் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மகேந்திரனும், புதல்வி சங்கமித்திரையும் புத்தரின் போதனைகளை இலங்கையில் பரப்பியதையும் சுட்டிக்காட்டினார். இதே நாளில்தான் (அஸ்வின் பவுர்ணமி) இளவரசர் மகிந்தா இலங்கையிலிருந்து திரும்பி வந்து, அந்நாடு புத்தரின் போதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டச் செய்தியை தமது தந்தையிடம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தச் செய்தி, புத்தரின் போதனைகள் ஒட்டுமொத்த உலகிற்குமானது புத்த தம்மம் மனிதகுலத்திற்கானது  என்ற நம்பிக்கையை அதிகரித்ததாகவும் பிரதமர் கூறினார்.

புத்தபிரானின் போதனைகளை பரப்புவதில் சர்வதேசப் புத்தமதக் கூட்டமைப்பின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், சர்வதேசப் புத்தமதக் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் பொறுப்பு வகித்த திரு.சக்தி சின்ஹாவின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். திரு.சின்ஹா அண்மையில் காலமானார்.

இன்றைய தினம், புத்தபிரான் துஷித சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய மற்றொரு புனித நாள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே அஸ்வின் பவுர்ணமி தினமான இன்று புத்த துறவிகள் தங்களது 3 மாத கால மழைக்கால தங்குமிடத்திலிருந்து வெளியே வருகின்றனர். அத்தகைய துறவிகளுக்கு கடைசி விடியலைத் தந்த பெருமிதத்தை இன்று தாமும் பெற்றுள்ளதாக திரு.மோடி தெரிவித்தார்.

புத்தர் ஒரு பிரபஞ்சம், ஏனெனில் இதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குவதாக புத்தர் கூறுகிறார். உச்சக்கட்ட பொறுப்புணர்வின் பலனே புத்தரின் புத்தத்துவம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி தற்போது பேசும் உலகம், பருவநிலை மாற்றம் குறித்துக் கவலை தெரிவிக்கிறது, பின்னர் இதிலிருந்து பல கேள்விகள் எழுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் புத்தரின் போதனைகளை நாம் பின்பற்றினால், ‘யார் செய்யப் போகிறார்கள் என்பதற்குப் பதிலாக ‘என்ன செய்ய வேண்டும்என்றப் பாதையை அது காட்டும். மனிதர்களின் ஆன்மாவில் வாழும் புத்தர், பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரத்தை இணைப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். புத்தரின் இந்தப் போதனையை இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளது. “அறிவாற்றல், மாமனிதர்களின் சிறந்த போதனைகள் அல்லது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நம்முடையது எதுவாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவேதான் அஹிம்சை மற்றும் கருணை போன்ற மனித நற்பண்புகள் இயற்கையாகவே இந்தியாவின் இதயத்தில் பதிந்துள்ளதுஎன்று பிரதமர் தெரிவித்தார்.

புத்தர் இன்றைக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறார், புத்த தம்ம சக்கரம் இந்தியாவின் மூவர்ணக் கொடியில் இடம் பெற்று, நமக்குத் தூண்டுகோலாகத் திகழ்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இன்றைக்கும் யாராவது இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்றால், ‘தர்ம சக்கரா பிரவார்தனைய என்ற வாசகத்தை நிச்சயம் காணலாம் என்றும் பிரதமர் கூறினார்.

குஜராத்தில், குறிப்பாக தாம் பிறந்த ஊரான வத்நகரில் புத்தபிரானின் ஆதிக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் மேற்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதியிலும் காணப்படும் அந்த ஆதிக்கம் அதே அளவிற்கு கிழக்குப் பகுதியிலும் இருப்பதாக தெரிவித்தார். “புத்தபிரான் எல்லைகள் மற்றும் திசைகளை கடந்தவர் என்பதை குஜராத்தின் கடந்த காலம் காட்டுகிறது. குஜராத் மண்ணில் பிறந்த மகாத்மா காந்தி, புத்தரின் போதனைகளான உண்மை மற்றும் அஹிம்சை ஆகியவற்றை கடைபிடித்தவர்என்றும் அவர் தெரிவித்தார்.

“நீங்களே உங்களுக்கு விளக்காக இருங்கள்என்ற பொருள்படும் “அப்பா தீபோ பவாஎன்ற புத்தரின் போதனையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒருவர் தன்னைத்தானே பிரகாசமாக்கிக் கொள்ளும் போது, அவர் ஒட்டுமொத்த உலகிற்கும் விளக்காகத் திகழ்வார் என்று குறிப்பிட்டார். இந்த போதனைதான் இந்தியா தற்சார்பு அடைவதற்கு உந்துசக்தியாக திகழ்கிறது. இந்த ஊக்கம்தான் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கேற்கும் வலிமையை நமக்கு அளிக்கிறது. அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் ஆதரவுடன், அனைவரும் முன்னேறுவோம் என்ற தாரக மந்திரத்தின் மூலம் புத்தபிரானின் போதனைகளை இந்தியா முன்னெடுத்துச் செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

*****
 



(Release ID: 1765198) Visitor Counter : 217