நித்தி ஆயோக்
தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்
Posted On:
23 AUG 2021 5:45PM by PIB Chennai
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ‘தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை (என்எம்பி தொகுதிகள் 1 மற்றும் 2)' மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகப்படுத்தினார்.
2021-22 நிதிநிலை அறிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆதார பணமாக்கலை அடிப்படையாகக் கொண்டு உள்கட்டமைப்பு அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து இந்த வழிமுறைகளை நிதி ஆயோக் வடிவமைத்துள்ளது. 2022 நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் மத்திய அரசின் முக்கிய சொத்துக்கள் வாயிலான ஒட்டுமொத்த பணமாக்கல் திறன் ரூ. 6.0 லட்சம் கோடியாக இருக்கும் என்று தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் மதிப்பீடு செய்துள்ளது.
இந்த வழிமுறைகளை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், “இந்தியாவின் சாமானிய குடிமக்களுக்கு உயர்தரத்தில், அணுகக்கூடிய வகையில் உள்கட்டமைப்பு கிடைக்க வேண்டும் என்ற மேதகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் பணமாக்கல் ஆதார திட்டம் வடிவம் பெற்றுள்ளது”, என்று கூறினார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தவும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தற்போதைய அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றி திருமதி நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். அதன்படி மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான நிதி உதவித் திட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை பசுமை உள்கட்டமைப்புக்கு ஏதுவாக மறுசுழற்சி செய்ய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும்.
நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி, தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகள் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைய அனைத்து உள்கட்டமைப்பு அமைச்சகங்களின் செயலாளர்களும் உறுதியளித்தனர்.
http://www.niti.gov.in/national-monetisation-pipeline என்ற இணையதளத்தில் முழு அறிக்கையைக் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748297
*****************
(Release ID: 1748338)