சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தேசிய மருத்துவ ஆணையத்துடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 30 JUL 2021 3:23PM by PIB Chennai

தேசிய மருத்துவ ஆணையத்துடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று தலைமை வகித்தார். மருத்துவக் கல்வி குறித்த முக்கிய விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தவாறு, தேசிய எக்சிட் தேர்வை (NExT) திட்டமிட்டவாறு 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செயல்முறையை சோதனை செய்து பார்ப்பதற்காகவும், மருத்துவ மாணவர்களின் அச்சத்தை போக்குவதற்காகவும், மாதிரி தேர்வு திட்டமிடப்பட்டு, 2022-ல் நடத்தப்படும்.

(1) தகுதி பெறும் இறுதி எம்பிபிஎஸ் தேர்வு, (2) நவீன மருத்துவ முறையை இந்தியாவில் மேற்கொள்வதற்கான உரிமம் பெறுதல் மற்றும் (3) விரிவான சிறப்புத்துறைகளில் முதுநிலை இடங்களை மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றுக்கு நெக்ஸ்ட் (நிலை 1 மற்றும் 2) முடிவுகளை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

நெக்ஸ்ட் தேர்வை உலகத்தரம் வாய்ந்ததாக ஆக்குவதற்கான வழிகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்தியா அல்லது உலகின் எந்த பகுதியில் பயிற்சி பெற்றிருந்தாலும் ஒரே மாதிரியான நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படுவது இதன் சிறப்பாகும். இதன் மூலம் வெளிநாட்டு மருத்துவ பட்டம் பெற்றவர்கள்/பரஸ்பர அங்கீகாரம் ஆகிய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், தரமான மருத்துவக் கல்வி, வெளிப்படைத்தன்மை மிக்க தேர்வு உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை உருவாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், இந்த நோக்கத்தை அடைவதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் தொய்வின்றி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740678

*****************



(Release ID: 1740807) Visitor Counter : 280