ரெயில்வே அமைச்சகம்

நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் ரயில்வே: 24 மணி நேரத்தில் தில்லிக்கு மட்டும் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்

Posted On: 04 MAY 2021 4:53PM by PIB Chennai

அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 1585 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 103 டேங்கர்களில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

27 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், ஆறு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் 33 டேங்கர்களில் சுமார் 463 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை தற்போது சுமந்து சென்றுக் கொண்டிருக்கின்றன.

தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பது தான் இந்திய ரயில்வேயின் நோக்கமாகும்.

ஹாப்பா மற்றும் முந்த்ராவில் இருந்து 244 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனோடு கிளம்பிய 2 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் இன்றே தில்லியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து, 24 மணி நேரத்தில் (மே 4 அதிகாலையில் இருந்து) 450 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் தில்லி வந்தடையும்.

இன்று மட்டும் ரயில்வேயால் விநியோகிக்கப்படவுள்ள 382 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனில், 244 மெட்ரிக் டன் தில்லிக்கானது ஆகும். இன்றைய மொத்த விநியோகத்தில் இது 64 சதவீதம் ஆகும்.

அங்கூலில் இருந்து 60.23 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனுடன் தெலங்கானாவுக்கான இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இன்று தனது இலக்கை அடைந்தது.

போகாரோவில் இருந்து 79 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஒன்று லக்னோவை இன்று சென்றடையும்.

இது வரை, 1585 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது- மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (493 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (179 மெட்ரிக் டன்), தில்லி (464 மெட்ரிக் டன்), ஹரியானா (150 மெட்ரிக் டன்) மற்றும் தெலங்கானா (127 மெட்ரிக் டன்).

*****************



(Release ID: 1715951) Visitor Counter : 282