பிரதமர் அலுவலகம்

செராவீக் 2021-ல் பிரதமர் சிறப்புரை ஆற்றினார்


செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

மக்களுக்கும் இந்திய பாரம்பரியங்களுக்கும் விருதை பிரதமர் அர்ப்பணித்தார்

இது வரை வாழ்ந்த சுற்றுச்சூழல் போராளிகளில் மிகச் சிறந்தவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர்: பிரதமர்

நடத்தை முறையை மாற்றுவதே பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த முறையாகும்: பிரதமர்

தர்க்கரீதியாகவும், சுற்றுச்சூழல் சார்ந்தும் சிந்திப்பதற்கான நேரம் இதுவாகும். இது உங்களை பற்றியதோ, என்னை பற்றியதோ அல்ல. இது நமது பூமியின் எதிர்காலம் பற்றியது: பிரதமர்


Posted On: 05 MAR 2021 7:49PM by PIB Chennai

செராவீக் 2021 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதை மிகுந்த அடக்கத்தோடு நான் பெற்றுக்கொள்கிறேன்,” என்று கூறிய பிரதமர் மக்களுக்கும் இந்திய பாரம்பரியங்களுக்கும் விருதை அர்ப்பணித்தார்.

சுற்றுச்சூழலை பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பாதுகாத்து வருவதாகவும், இயற்கையும், தெய்வீகமும் நமது கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது வரை வாழ்ந்த சுற்றுச்சூழல் போராளிகளில் மிகச் சிறந்தவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர் என்று கூறிய பிரதமர், அவரது பாதையை மனிதகுலம் பின்பற்றியிருந்தால், இன்றைக்கிருக்கும் பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம் என்றார்.

மழை நீரை சேமிப்பதற்காக குஜராத்தின் போர்பந்தரில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சேகரிப்பு தொட்டிகளை பார்வையிடுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

பருவநிலை மாற்றத்தையும் பேரிடர்களையும் எதிர்த்து போராட இரண்டு வழிகளே உள்ளன என்று கூறிய பிரதமர், கொள்கைகள், விதிகள் மற்றும் உத்தரவுகள் அவற்றில் ஒன்று என்றார். உதாரணங்களை வழங்கிய பிரதமர், மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் பங்கு இந்தியாவில் 38 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பாரத்-6 மாசு விதிகளை அமல்படுத்தியிருப்பதையும், தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதையும், பிரதமர் சூரியசக்தி பம்பு திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

2030-ம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்போதைய 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்காக இந்தியா பணியாற்றி வருவதாக அவர் கூறினார். இருந்த போதும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கான மிகச் சிறந்த வழி நடத்தை முறை மாற்றமே என்றார் அவர்.

நம்மை நாம் மாற்றிக்கொண்டால் மட்டுமே உலகை சிறந்த இடமாக மாற்ற முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காக விவசாயிகளை பாராட்டிய பிரதமர், மண் வளத்தை பெருக்கவும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்கவும் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக கூறினார்.

உடல் வலிமை மற்றும் உடல்நலம் மீது உலகம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும், ஆரோக்கியமான, இயற்கை உணவுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.

நமது வாசனை பொருட்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் மூலம் இந்த சர்வதேச மாற்றத்திற்கு இந்தியா தலைமையேற்கலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்குவதற்காக 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பெரிய அளவிலான நடத்தைமுறை மாற்றங்களுக்காக, புதுமையான, குறைந்த விலையிலான, பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய தீர்வுகளை நாம் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர், எல் ஈ டி விளக்குகள், கிவ் இட் அப் இயக்கம், அதிக சமையல் எரிவாயு பயன்பாடு, குறைந்தவிலை போக்குவரத்து முன்னெடுப்புகள் ஆகியவற்றை உதாரணங்களாக சுட்டிக் காட்டினார்.

 

எத்தனால் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள காடுகளின் அளவும், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் நீர் கோழிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் கடந்த ஏழு வருடங்களாக அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். நேர்மறை நடத்தைமுறை மாற்றங்களின் விளைவுகள் இவை என்று அவர் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் பொறுப்புணர்ச்சி தத்துவம் குறித்து பேசிய பிரதமர், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவதே அதன் சாரம் என்றும், அனைவரையும் ஒன்றிணைத்து, கருணையோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

தர்க்கரீதியாகவும், சுற்றுச்சூழல் சார்ந்தும் சிந்திப்பதற்கான நேரம் இதுவாகும். இது உங்களை பற்றியதோ, என்னை பற்றியதோ அல்ல. இது நமது பூமியின் எதிர்காலம் பற்றியது, நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று பிரதமர் கூறினார்.

*****************



(Release ID: 1702892) Visitor Counter : 144