பிரதமர் அலுவலகம்

நாஸ்காம் தொழில்நுட்ப, தலைமைத்துவ அமைப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 17 FEB 2021 5:17PM by PIB Chennai

வணக்கம்! இந்த நேரத்தில் நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ அமைப்பு எனது கருத்தில் மிகவும் சிறப்பாக உயர்ந்து நிற்கிறது. இந்தியாவை உலகம் முன்னெப்போதையும் விட மேலும் நம்பிக்கையுடன் நோக்கிக் கொண்டிருக்கும் நேரம் இது.

எத்தகைய கடினமான சவாலாக இருந்தாலும், நாம் நம்மை பலவீனமாகக் கருதக்கூடாது, நாம் அதைக் கண்டு அஞ்சி தப்பிக்க முயலக்கூடாது. கொரோனா காலத்தில் இந்தியாவின் அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தனக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் உதவியது. அந்த அளவுக்கு பெரிய அளவில் அது உருவெடுத்தது. பெரியம்மை தடுப்பூசிகளுக்கு பிற நாடுகளை நாம் ஒரு காலத்தில் சார்ந்திருந்தோம். உலகின் பல நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை இப்போது வழங்கி வருகிறோம். இதுவும்  ஒரு காலம். கொரோனா காலத்தில் உலகம் முழுவதற்கும் இந்தியா உந்துசக்தியை வழங்கியுள்ளது. இந்தியாவின் ஐடி தொழில் துறை அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாக, இங்கு உரையாற்றிய சில தலைமை செயல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். உலகம் முழுவதும் சுவர்களுக்குள் முடங்கி கிடந்த போது, வீடுகளில் இருந்தவாறே நீங்கள் சுமுகமாக தொழிலை நடத்தி வந்தீர்கள். கடந்த ஆண்டின் மதிப்பீடுகள் உலகை பிரமிப்பில் ஆழ்த்தின. ஆனால், இந்திய மக்கள் அதை வெகு இயல்பாக எடுத்துக் கொண்டனர்.

நண்பர்களே, கொரோனாவால், ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்ட ஒரு சூழலில், நீங்கள் 2 சதவீத அளவுக்கு வளர்ச்சியை எட்டினீர்கள். இந்தியாவின் ஐடி துறையில் வளர்ச்சி குன்றும் என்ற சந்தேகம் நிலவிய போது, ஐடி தொழில் துறை கூடுதலாக 4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இது பாராட்டுக்குரியதாகும். நீங்கள் அனைவரும் அந்தப் பாராட்டுக்குத் தகுதியுள்ளவர்கள். இந்தக் காலகட்டத்தில், ஐடி தொழில் இந்திய வளர்ச்சியின் வலுவான தூண் என்பதை லட்சக்கணக்கானோருக்கு புதிய வேலைகளை வழங்கி நிரூபித்தது. இன்று, எல்லா தரவுகளும், ஒவ்வொரு குறியீடும் ஐடி தொழிலின் வளர்ச்சி வேகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அது மேலும் புதிய உச்சங்களைத் தொடப் போகிறது.

இன்றைய இந்தியா, வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. புதிய இந்தியாவையும். அதன் இளைஞர்களின் மனநிலையை அரசு புரிந்து கொண்டிருக்கிறது. 130 கோடி இந்தியர்களின் அபிலாசைகள் நம்மை அதி விரைவாக முன்னேறச் செய்ய ஊக்குவிக்கின்றன.  புதிய இந்தியா குறித்த எதிர்பார்ப்பு அரசிடம் மட்டுமல்லாமல் தனியார் துறையிடமும் உள்ளது.

நண்பர்களே, இந்தியாவின் ஐடி தொழில் துறை பல ஆண்டுகளுக்கு முன்பே உலக தளங்கள் பலவற்றில் கால் பதித்துவிட்டது. நமது வல்லுநர்கள் உலகம் முழுவதற்கும் சேவைகளையும், தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இந்தியாவின் விரிந்த உள்நாட்டு சந்தைகளிடம் இருந்து ஐடி தொழில் பயனடையவில்லை. இது இந்தியாவில் டிஜிடல் பிளவுக்கு வழிவகுத்தது. இது ஒருவகையில் விளக்கின் கீழே இருக்கும் இருட்டைப் போன்றது. இந்த அணுகுமுறையை நாம் எப்படி மாற்றியுள்ளோம் என்பதற்கு நமது அரசின் கொள்கைகளும், முடிவுகளும் சான்றாக விளங்குகின்றன.

நண்பர்களே, எதிர்கால தலைமைத்துவம் அடிமைத் தளையிலிருந்து உருவாக முடியாது என்பதை  அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. எனவே, தேவையற்ற கட்டுப்பாடுகளிலிருந்து தொழில்நுட்பத்துறைக்கு விலக்கு அளிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய டிஜிடல் தொலைத்தொடர்பு கொள்கை இத்தகைய ஒரு பெரிய முயற்சியாகும். தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, சர்வதேச மென்பொருள் முனையமாக இந்தியாவை மாற்றுவதற்காக வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிற சேவை வழங்குவோருக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. உங்கள் விவாதத்திலும் இது குறிப்பிடப்பட்டது. இது புதிய சூழல்களிலும் தடையின்றி நீங்கள் இயங்க வழி வகுக்கும். இன்றும், 90 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வேலை பார்த்து வருவதாகவும், சிலர் தங்கள் சொந்தக் கிராமங்களில் இருந்தும் வேலை செய்து வருவதாகவும் சில நண்பர்கள் இங்கு சுட்டிக்காட்டினர். இது தகவல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பலனாகும். 12 முக்கிய சேவை துறைகளுள் தகவல் சேவையையும் இணைத்ததன் வாயிலாக நல்ல பலன் கிடைத்திருகிறது.

நண்பர்களே, இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றொரு சீர்திருத்தம் முக்கியமான கொள்கையை வகுத்துள்ளது. இதை நீங்கள் அனைவரும் வரவேற்றீர்கள். வரைபடங்கள் மற்றும் புவிசார் தரவுகள் அண்மையில் தாராளமயமாக்கப்பட்டிருப்பதன் மூலம் தொழில்நுட்ப புதுமை நிறுவனங்களுக்கான சூழலியல் வலுவடைவதுடன் தற்சார்பு இந்தியா இயக்கமும் விரிவடையும்.

புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் இளம் தொழில்முனைவோருக்கு கிடைக்க வேண்டும். புதுமை நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் மீது அரசு முழு நம்பிக்கை வைத்திருக்கிறது.  டிஜிட்டல் இந்தியா வாயிலாக சுய சான்று, நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், பெருவாரியான மக்களிடையே தரவுகளை எடுத்துச் செல்லுதல் போன்றவை செயல்முறையை முன்னெடுத்துச் சென்றுள்ளன.

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையானது, அரசு மீது மக்களின் நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. குடிமக்களின் முறையான கண்காணிப்பிற்காக, நிர்வாகம், கோப்புகளிலிருந்து தகவல் பலகைக்கு (டாஷ்போர்டுமாறியிருக்கிறது.  அரசு மின் சந்தை தளம் வாயிலான அரசின் கொள்முதலில், செயல்முறை மேம்பட்டிருப்பதோடு வெளிப்படைத் தன்மையும் ஏற்பட்டிருக்கிறது.

நண்பர்களே, நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் அவசியம் காலத்தின் கட்டாயமாகும்.  உள்கட்டமைப்புப் பொருட்கள், ஏழைகளின் வீடுகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு  புவிசார் அடையாளத்தை வழங்குவதன் வாயிலாக அவை உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படும். இதற்கு ஏராளமாக சான்றுகள் உள்ளன.  கிராமப்புற வீடுகளை வரைபடமிடுதலில் ட்ரோன்களின் பயன்பாடு  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக வரி சார்ந்த துறைகளில் மனித தொடர்பை குறைப்பதற்கு இது உதவும்.  மதிப்பீடு செய்வது மற்றும் வெளியேறும் நடவடிக்கைகளோடு மட்டுமே புதுமை நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களின் செயல்களை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது. இந்த நூற்றாண்டையும் கடந்து இயங்கும் நிறுவனங்களை எவ்வாறு நீங்கள் உருவாக்கலாம்  என்பது குறித்து சிந்தியுங்கள். சர்வதேசத் தரம் வாய்ந்த பொருட்களை நீங்கள் எவ்வாறு உருவாக்கலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.  இந்தியாவிற்காகத் தயாரிப்பது என்ற முத்திரையையும் தங்களது தீர்வுகளில் தொழில்நுட்பத் தலைவர்கள் கூற வேண்டும். உத்வேகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்குபோட்டியிடும் வகையிலான புதிய வரைகூறுகளை உருவாக்க வேண்டும். இந்தக் கோணத்தில் நீங்கள் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  நிறுவன உருவாக்கம் மற்றும் சிறப்பாக செயல்படும் தன்மை தலைமைத்துவத்துக்கு மிகவும் அவசியமானவை என்பதை வலியுறுத்தத் தேவையில்லை.

நண்பர்களே, 2047-ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள நூறாவது சுதந்திர தினம் வரையில் தலைசிறந்த பொருட்களையும், தலைவர்களையும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  உங்கள் இலக்குகளை நிர்ணயிங்கள், நாடு உங்களுடன் இருக்கிறது.

நண்பர்களே, 21-ஆம் நூற்றாண்டில் நாடு சந்திக்கும் சவால்களுக்கு, ஆக்கபூர்வமான தொழில்நுட்பத் தீர்வுகளை அளிப்பது தொழில்நுட்பத்துறையின் கடமையாகும்.  வேளாண் துறையில் தண்ணீர் மற்றும் உரத்தேவை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், தொலை மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு போன்ற துறைகளில் தீர்வுகளை உருவாக்கும் வகையில் செயல்படுவது அவசியமாகும். கல்விக் கொள்கை, அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், அடல் இன்குபேஷன் மையம் போன்று திறனையும் புதுமைகளையும் ஊக்கப்படுத்தும் முயற்சிகளில் தொழில்துறையின் ஆதரவு தேவை. தங்களது நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) பயன்களில் கவனம் செலுத்துவதும் முக்கியமாகும்.  பின்தங்கிய பகுதிகள், டிஜிட்டல் கல்வியை நோக்கி தங்களது நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.  2-ஆம் மற்றும் 3-ஆம் தர நகரங்களில் தொழில் முனைவோரும்,  கண்டுபிடிப்பாளர்களும் உருவாகி வருவதற்கு  வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் விவாதத்தில், நிகழ்கால, வருங்காலத் தீர்வுகள் பற்றி முக்கியமான ஆலோசனைகள் நடைபெறும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். வழக்கம் போல, உங்களது ஆலோசனைகளை அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும். ஒன்றை நான் உங்களுக்கு கூறவேண்டும். ஆகஸ்டு 15 அன்று நான் செங்கோட்டையில் உரையாற்றிய போது, ஆயிரம் நாட்களில், ஆறு லட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை கட்டமைப்பு பணிகள் நிறைவடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்தேன். நான் அதை பின்பற்றி வருகிறேன். நாம் நிச்சயம் அதை நிறைவேற்றுவோம். மாநிலங்களும் நம்முடன் சேரும் என்று நம்புகிறேன். இதை ஏழைகள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை உங்களது மனதில் இருத்தி செயல்பட வேண்டும். இந்தத் திட்டம் கிராமங்களை அடையும் போது, கிராமங்களில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

இது எப்படிப்பட்ட வாய்ப்பு என்பதை நீங்கள் உணரலாம். எனவே, உங்களை இதற்கு அழைக்கிறேன். அரசு இதை செய்து கொண்டிருக்கிறது. தலைமைத்துவத்தை நாம் நீண்டகாலத்துக்கு மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்போதே தீர்மானியுங்கள். ஒவ்வொரு துறையிலும், முழு ஆற்றலுடன் இதை எடுத்துச் செல்வதுடன், நாடு முழுவதற்கும் தொண்டாற்றும் வகையில் உருவெடுக்க வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புடன், மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன்.

நன்றிகள்!



(Release ID: 1699915) Visitor Counter : 203