சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ரூ. 4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் : அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்

Posted On: 04 DEC 2020 1:44PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, நாகலாந்தில் 15 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார். மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங், நாகலாந்து முதல்வர் திரு நெஃபி ரியோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 266 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் ரூ. 4127 கோடி செலவில் அமையவிருக்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கட்கரி, வடகிழக்கு மாகாணங்கள், குறிப்பாக நாகலாந்தில், வளர்ச்சித் திட்டங்களை அதிகரிக்க மத்திய அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் நாகலாந்து தேசிய நெடுஞ்சாலையில் 667 கிலோமீட்டர் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். அந்த மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களைத் தவிர எஞ்சியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காகக் கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 1063.41 கிலோமீட்டர் தொலைவில் 55 திட்டங்களை செயல்படுத்த ரூ. 11,711 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், நாகலாந்து மாநிலத்தின் சுற்றுலா வரத்தை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678267

*******

 

(Release ID: 1678267)



(Release ID: 1678302) Visitor Counter : 170