குடியரசுத் தலைவர் செயலகம்

ஜனநாயக அமைப்பில், விவாதம் சர்ச்சையாக மாற அனுமதிக்காத பேச்சுவார்த்தைதான் சிறந்த வழிமுறை: குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த்

Posted On: 25 NOV 2020 1:58PM by PIB Chennai

ஜனநாயக அமைப்பில், விவாதம் சர்ச்சையாக மாற அனுமதிக்காமல், நடைபெறும் பேச்சுவார்த்தைதான் சிறந்த வழிமுறை என அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவைத் தலைவர்களின் 80வது கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் கூறினார்.

 

நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவைத் தலைவர்களின் 80வது கூட்டத்தை குஜராத் மாநிலம் கெவாடியாவில், குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த இன்று தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ஆளுங்கட்சியுடன்எதிர்கட்சிகளுக்கும் முக்கிய பங்குள்ளது எனவும், இருதரப்பினர் இடையே நல்லிணக்கமும், ஒத்துழைப்பும், அர்த்தமுள்ள கலந்துரையாடலும் அவசியம் என குடியரத் தலைவர் கூறினார். அவையில் மக்கள் பிரதிநிதிகள் இடையே ஆரோக்கியமான விவாதம் நடைபெற இணக்கமான சூழலை ஏற்படுத்துவதும், மரியாதையான பேச்சுவார்த்தையையும், விவாதத்தையும் ஊக்குவிப்பதும் அவைத் தலைவர்களின் பொறுப்பு என அவர் கூறினார்.   

நியாயம், நீதி ஆகியவை நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் அடித்தளம் என குடியரசுத் தலைவர் கூறினார். அவையில் சபாநாயகரின் இருக்கை கவுரவத்தையும், கடமையையும் குறிக்கிறது. இது பாரபட்சமின்மை, நீதி மற்றும் நியாயத்தையும் குறிக்கிறது. இந்த உயர்ந்த லட்சியங்களுடன் அவைத் தலைவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலனுக்கான மிகவும் பயனுள்ள வழிமுறையாக, ஜனநாயக அமைப்பு தன்னை நிரூபித்துள்ளது என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  அதனால்தான், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருப்பது கவரவமான விஷயம். மக்கள் நலனுக்காவும், நாட்டின் முன்னேற்றத்துக்காவும்அவை உறுப்பினர்களும், அவைத் தலைவரும் தங்களின் கவுரவத்தைப் பேணிக் காக்க வேண்டும். பேரவைத் தலைவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதன் மூலம், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்களுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் மரியாதையை தேடிக் கொள்கின்றனர்.

நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், நமது ஜனநாயக அமைப்பின் தூண்கள். நாட்டு மக்களின் சிறந்த எதிர்காலத்துக்கு பணியாற்ற அவற்றுக்கு முக்கியமான பொறுப்பு உள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, மக்களின் எதிர்பார்ப்பும், ஆசைகளும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அதனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் பங்கும், பொறுப்புகளும் அதிக கவனத்துக்கு வந்துள்ளன. ஜனநாயக விதிமுறைகளுக்கு உண்மையாக மக்கள் பிதிநிதிகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதுதான் ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்பு உள்ள மிகப் பெரிய சவால்.

இந்தாண்டு மாநாட்டின் கருப்பொருளான, ’பேரவை, நிர்வாகம், நீதித்துறை இடையே இணக்கமான ஒருங்கிணைப்புபற்றி மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் தலைவர், ‘‘அரசின் மூன்று அங்கங்களான நிர்வாகம், பேரவை, நீதித்துறை ஆகியவை இணக்கத்துடன் செயல்படுகின்றன எனவும், இந்தப் பாரம்பரியம் இந்தியாவில் வலுவாக வேரூன்றியுள்ளது என கூறினார்.  இந்த மாநாட்டு விவாதத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பின்பற்றுவது மூலம் நமது ஜனநாயக அமைப்பு மேலும் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டு மக்களின் நலன், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் ஆகிய உயர்ந்த லட்சியங்களால் ஜனநாயக அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது என குடியரசுத் தலைவர் கூறினார்.  இந்த இலக்கை நோக்கி நிர்வாகத்தின் மூன்று அங்கங்களும், தொடர்ந்து பணியாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

*******************



(Release ID: 1675651) Visitor Counter : 179