ஆயுஷ்

பணியாற்றும இடத்தில் ‘யோகா இடைவேளை’-யை இன்று தொடங்கியது ஆயுஷ் அமைச்சகம்

Posted On: 25 SEP 2020 12:27PM by PIB Chennai

கொவிட்-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகா இடைவேளையைஆயுஷ் அமைச்சகம் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வு பெற்று மீண்டும் பணியில் கவனம் செலுத்தும் நோக்கத்தில், இந்த 5 நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கம்.

யோகா என்பது பண்டைய இந்திய ஒழுக்கமாகும்.  இது உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக பரிமாணங்களுக்கு தனிநபர்களின் சமநிலையையும் ஆரோக்கியத்தையும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலைமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, குறிப்பாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் தொடர்ச்சியாக உட்காருவது, வேலை தொடர்பான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அப்போது சிறிது நேரம் யோகா செய்தால், இது போன்ற அழுத்தம் குறையலாம். வேலையின் மீதான கவனமும் அதிகரிக்கும்.

இதற்காக ஆயுஷ் அமைச்சகம் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன்  இணைந்து 5 நிமிட யோகா இடைவேளை நெறிமுறைகளை  கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கியது. பிரபல யோகா நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த நெறிமுறையில், தடாசனா, கதி சக்ராசனா, நாடிசோதனா பிராமாரி பிரணாயமா போன்ற யோகா பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன.  இந்த நெறிமுறைகள் பரிசோதனை  அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இது பயனுள்ளதாக இருப்பதாக இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இந்த யோகா இடைவேளை பயிற்சி ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மைய  வளாகத்தில் இன்று மீண்டும் தொடங்கியது.  தற்போதைய தொற்று சூழலை கருத்தில் கொண்டு, மூச்சுப் பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இது நுரையீரல் திறனை அதிகரிக்கும். இந்த பயிற்சி ஆயுஷ் பவன் புல்வெளி தளத்தில் தினந்தோறும் 10 நிமிடங்கள் தொடரும். அப்போது சமூக இடைவெளி விதிமுறைகள் உறுதி செய்யப்படும். வரும் வாரங்களில் இந்த யோகா பயிற்சியை, தில்லியில் உள்ள மற்ற அலுவலகங்களுக்கு ஆயுஷ் அமைச்சகம் இலவசமாக அளிக்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658927

*****



(Release ID: 1658964) Visitor Counter : 241