உள்துறை அமைச்சகம்

கட்டுப்படுத்தப்படாத பகுதிகளுக்கு முடக்கநிலை நீக்கம் நான்காவது கட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள்


கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் 2020 செப்டம்பர் 30 வரையில் கடுமையான முடக்கநிலை பின்பற்றப்படும்

Posted On: 29 AUG 2020 8:05PM by PIB Chennai

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்கநிலை நீக்கத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. முடக்கநிலை நீக்கத்தின் நான்காவது கட்டம் 2020 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. படிப்படியாகச் செயல்பாடுகளை அனுமதிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் நடந்த விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில், இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்

  • மெட்ரோ ரயில் சேவை 2020 செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக அனுமதிக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் / ரயில்வே அமைச்சகம் இதைச் செயல்படுத்தும். இதற்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிடும்.
  • சமூக/ கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு/ கலாச்சார / மத / அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் இதர கூடுதல் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேர் வரை பங்கேற்கும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும். இது 2020 செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். இருந்தபோதிலும், கட்டாயமாக முகக் கவச உறை அணிதல், தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்தல், தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கை கழுவுதல் அல்லது கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
  • திறந்தவெளி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்த 2020 செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படும்.
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விரிவான ஆலோசனை செய்ததை அடுத்து, 2020 செப்டம்பர்  30 வரையில் மாணவர்களுக்குப் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். அந்தத் தேதி வரை வழக்கமான வகுப்புகள் நடைபெறாது. ஆன்லைன்/ தொலைநிலை கற்றல் முறைகளைத் தொடர அனுமதிக்கலாம், ஊக்குவிக்கலாம். இருந்தபோதிலும், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மட்டும், 2020 செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து பின்வரும் விஷயங்களுக்கு அனுமதி அளிக்கலாம். அதற்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிடும்:
  1. ஆன்லைன் கற்பித்தல்/ தொலைவில் இருப்போருக்கு கலந்தாய்வு மற்றும் அவை தொடர்பான பணிகளுக்கு 50 சதவீதம் வரையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை பணிக்கு வரவழைக்க மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கலாம்.
  2. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் மட்டும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். அவர்களின் பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும்.
  3. தேசிய தொழில் திறன் மேம்பாட்டுக் கழகம் அல்லது மாநிலத் தொழில் திறன் மேம்பாட்டு அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசுகளின் மற்ற அமைச்சகங்களில் பதிவு செய்துள்ள தேசியத் தொழில் திறன் பயிற்சி நிலையங்கள், ஐ.டி.ஐ.கள், குறுகிய காலப் பயிற்சி மையங்களில் தொழில் திறன் அல்லது தொழில்முனைவோர் பயிற்சி அளிக்க அனுமதிக்கலாம்.

தொழில்முனைவோர் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு தேசிய நிறுவனம், தொழில்முனைவோர் இந்திய இன்ஸ்டிடியூட் மற்றும் அவற்றின் பயிற்சி அளிக்கும் அமைப்புகள் செயல்படவும் அனுமதிக்கப் படுகிறது.

  • உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வக/பரிசோதனைப் பணிகள் தேவைப்படும் ஆராய்ச்சி மாணவர்கள் (பிஎச் டி) மற்றும் தொழில்நுட்ப மற்றும் பணிமுறைப் படிப்புகளை சேர்ந்த முதுநிலை மாணவர்களுக்கு மட்டுமே நிலைமையை ஆய்வு செய்தும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளை மனதில் கொண்டும் உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு உயர் கல்வித் துறையால் இவை அனுமதிக்கப்படும்.

 

* கீழ்கண்டவற்றைத் தவிர அனைத்து செயல்களும் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே அனுமதிக்கப்படும்:

(i) திரையரங்குகள், நீச்சல் குளங்கள், அரங்கங்கள் (திறந்தவெளி அரங்கங்கள் தவிர) மற்றும் ஒத்த இடங்கள்

(ii) உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டதைத் தவிர பயணிகளின் சர்வதேச விமானப் பயணம்

* 30 செப்டம்பர், 2020 வரை கட்டுப்பாடு மண்டலங்களில் பொது முடக்கம் கடுமையாக செயல்படுத்தப்படும்

* தொற்றுச் சங்கிலியை திறம்பட உடைக்கும் நோக்கத்தோடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து பகுதி அளவில் மாவட்ட அதிகாரிகளால் கட்டுப்பாடு மண்டலங்கள் உருவாக்கப்படலாம். இந்த இடங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும், அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள், கடுமையான சுற்றளவு விதிகள் கடைபிடிக்கப்படும் மற்றும் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* இந்தக் கட்டுப்பாட்டு மண்டலங்களைப் பற்றிய தகவல்கள் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களாலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களாலும் இணையதளத்தில் பதிவிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.

கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர்ப் பொது முடக்கத்தையும் மாநிலங்கள் அமல்படுத்தக்கூடாது

மத்திய அரசுடன் முன்னரே ஆலோசிக்காமல் கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே எந்த ஒரு உள்ளூர் பொது முடக்கத்தையும் (மாநில / மாவட்ட / உள்-வட்ட / மாநகர / கிராம அளவில்) மாநில / யூனியன் பிரதேச அரசுகள் அமல்படுத்தக்கூடாது.

மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குள்ளும் பயணிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை

* மக்கள் மற்றும் சரக்குகள் மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குள் பயணிக்க எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இத்தகைய போக்குவரத்துக்கு தனியாக அனுமதி / ஒப்புதல் / மின்-அனுமதி (-பெர்மிட்) தேவைப்படாது.

கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய விதிமுறைகள்

தனி நபர் இடைவெளியை உறுதி செய்யும் நோக்கில் கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய விதிமுறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

வாடிக்கையாளர்களிடையே போதுமான தனி நபர் இடைவெளியைக் கடைகள் உறுதி செய்ய வேண்டும். தேசிய விதிமுறைகள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்று உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்.

பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான பாதுகாப்பு

* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்த்தன்மை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போன்ற பாதிக்கப்பட வாய்ப்புள்ள நபர்கள் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் உடல்நலக் காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தவும்

ஆரோக்கிய சேது கைபேசிச் செயலியைப் பயன்படுத்த தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்

 

*****



(Release ID: 1651211) Visitor Counter : 280