விவசாயத்துறை அமைச்சகம்

மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலத்தில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டு இதே காலத்தின் ஏற்றுமதி அளவுடன் ஒப்பிடுகையில் 23.24 சதவிகிதம் அதிகரிப்பு

Posted On: 18 AUG 2020 12:50PM by PIB Chennai

உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக புள்ளி விவரங்களின்படி 2017ஆம் ஆண்டில், உலக வேளாண் வர்த்தகத்தில், வேளாண் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முறையே 2.27 சதவிகிதம், 1.90 சதவிகிதமாக இருந்தது பெருந்தொற்று பொது முடக்க, சிரமமான காலத்தின் போதும், உலக உணவு வழங்கு தொடருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இந்தியா தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலத்தில் ரூ.25552.7 கோடி மதிப்பிலான வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2019ஆம் ஆண்டு இதே காலத்தில் ரூ.20734.8 கோடி அளவிற்கு செய்யப்பட்ட ஏற்றுமதி அளவுடன் ஒப்பிடுகையில் இது 23.24 சதவிகிதம் அதிகமாகும்.

 

இந்தியாவின் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2017-18ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதி 9.4 சதவிகிதமாக இருந்தது. இது 2018 -19 இல் 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் இறக்குமதி 5.7 சதவீதமாக இருந்ததிலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது இந்தியாவில் வேளாண் பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்து இருக்கும் தன்மை குறைந்து உள்ளது என்பதையும், ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு உபரியாக வேளாண் பொருட்கள் உள்ளன என்பதையும் இது குறிக்கிறது.

 

விடுதலை அடைந்த காலத்தில் இருந்து வேளாண் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. 1950 -51 இல் இந்தியாவில் வேளாண் ஏற்றுமதி சுமார் ரூ.149 கோடி அளவிற்கு இருந்தது. இது 2019- 20 ஆம் ஆண்டில் ரூ.2.53 லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்டு காலத்தில், ஏறத்தாழ அனைத்து வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியா வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை. உதாரணமாக உலகில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆனால் ஏற்றுமதியில் இந்தியா 34 ஆவது இடத்தை வகிக்கிறது. இதேபோல் காய்கறி உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடத்தை வகிக்கும் இந்தியா, ஏற்றுமதியில் 14 ஆவது இடத்தை வகிக்கிறது. பழங்களைப் பொறுத்தவரையும் இதே நிலைதான். பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் ஏற்றுமதியில் இருபத்தி மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் உற்பத்திக்கு ஏற்ற விதத்தில் முன்னணி நிலையில் இருக்கும் நாடு என்ற இடத்தை அடைவதற்கு நாமாகவே முன்வந்து செய்யவேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக டி ஏ சி எஃப் டபிள்யூ முழுமையான செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளது. முழுமையான உத்தி ஒன்றைத் தயாரிப்பதற்காக, உற்பத்திக்கு முந்தைய பணிகள், உற்பத்தி தொடர்பான பணிகள், உற்பத்திக்கு பிந்தைய பணிகள் ஆகிய அனைத்து விவரங்கள், பிரச்சினைகள் குறித்த விரிவான தகவல்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. பொருட்களை வகைப்படுத்துதல்; அதன் பிறகு குறிப்பிட்ட பொருட்களை வகைப்படுத்துதல்; அவை பற்றிய உற்பத்தி ஏற்றுமதி விவரங்களின் தற்போதைய நிலைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்; அப்பொருட்களின் வலிமைகள், சவால்கள், பிரச்னைகளுக்கான தீர்வுகள் ஆகியவை; அவை தொடர்பான பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இரு வழி அணுகுமுறை இறக்குமதியை மாற்றியமைக்கும் கவனம் கொண்ட செயல் திட்டமாகவும்; மதிப்பு கூட்டுவதை வலியுறுத்துவதாகவும், ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்கும். இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள தீர்வுகள் கால வரையறைக்கு உட்பட்ட செயல் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

 

 

****



(Release ID: 1646696) Visitor Counter : 610