பிரதமர் அலுவலகம்

மொரீஷியஸில் உச்சநீதிமன்றத்துக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 30 JUL 2020 1:16PM by PIB Chennai

மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் மேதகு பிரவிந்த் குமார் ஜுக்நாத் அவர்களே, மொரீஷியஸின் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளே, சிறப்பு வாய்ந்த விருந்தினர்களே, வணக்கம்.

உங்கள் அனைவருக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக, கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றை சிறப்பான முறையில் எதிர்கொண்ட மொரீஷியஸ் அரசுக்கும், மக்களுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நேரத்தில் மருந்துகளை விநியோகித்தும், அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டும் இந்த முயற்சிகளுக்கு இந்தியாவால் ஆதரவளிக்க முடிந்தது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

நண்பர்களே, இந்தியா-மொரீஷியஸ் இடையேயான சிறப்புவாய்ந்த  நட்புறவில் மற்றொரு மைல் கல்லை நாம் இன்று கொண்டாடிவருகிறோம். போர்ட் லூயிஸ் பகுதியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டிடம், நமது ஒத்துழைப்பு மற்றும் நமது ஒத்த தன்மைக்கு அடையாளமாகத் திகழ்கிறது. இந்தியாவும், மொரீஷியஸும் நமது சுதந்திரமான நீதித்துறையை நமது ஜனநாயக அமைப்பின் முக்கியமான தூணாக மதிக்கிறோம். இந்த மரியாதைக்கு அடையாளமாக நவீன வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துடன் கூடிய இந்த அற்புதமான புதிய கட்டிடம் அமைந்துள்ளது. திட்டமிடப்பட்ட காலத்திற்குள்ளும், தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட தொகையிலும் இந்தக் கட்டுமானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் ஜுக்நாத் அவர்களே, சில மாதங்களுக்கு முன்பு, முக்கியத்துவம் வாய்ந்த மெட்ரோ திட்டத்தையும், அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையையும் நாம் கூட்டாகத் தொடங்கிவைத்தோம். இந்த இரு திட்டங்களும் மொரீஷியஸ் மக்களுக்கு பயனளிக்கிறது என்று  நிரூபித்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

நண்பர்களே, பிராந்தியத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, அதாவது சாகர் (SAGAR) என்ற இந்தியாவின் இலக்கு குறித்து நான் முதன்முதலாக மொரீஷியஸில் பேசினேன். இதற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கான இந்தியாவின் நிலைப்பாட்டில் மையமாக மொரீஷியஸ் இருப்பதே காரணம். மேலும், மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான இந்தியாவின் செயல்பாடுகளின் மையமாகவும் மொரீஷியஸ் இருப்பதை நான் இன்று சேர்த்துக் கூற விரும்புகிறேன்.

நண்பர்களே, மகாத்மா காந்தி சரியாக கூறியுள்ளார். அதாவது, “நான் ஒட்டுமொத்த உலகம் என்ற அடிப்படையிலேயே சிந்திக்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த மனிதசமூகத்தின் நலன் உள்ளிட்டவற்றுக்காகவே எனது தேசப்பற்று உள்ளது. எனவே, இந்தியாவுக்கான எனது சேவை என்பது மனித சமூகத்துக்கான சேவையை உள்ளடக்கியது,” என்று அவர் தெரிவித்துள்ளார். இதுவே இந்தியாவுக்கு வழிகாட்டும் தத்துவம். இந்தியா மேம்பட விரும்புவதுடன், மற்றவர்களின் சொந்த மேம்பாட்டுத் தேவைகளுக்கு உதவவும் விரும்புகிறது.

நண்பர்களே, வளர்ச்சிக்கான இந்தியாவின் நிலைப்பாடு என்பது முக்கியமாக மனிதர்களை மையமாகக் கொண்டது. மனித சமூகத்தின் நலனுக்காக பணியாற்றவே நாங்கள் விரும்புகிறோம். மேம்பாட்டு ஒத்துழைப்பு என்ற பெயரில் சார்ந்திருக்கும் ஒத்துழைப்பை ஏற்படுத்த நாடுகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன என்பதையே நமக்கு வரலாறு கற்றுக் கொடுத்துள்ளது. இது காலனி மற்றும் சர்வாதிகார ஆட்சி என்ற நிலைக்கு கொண்டுவந்தது. இது சர்வதேச சக்திக்குத் தடையை ஏற்படுத்தியது. மேலும், மனிதசமூகம் பாதிக்கப்பட்டது.

நண்பர்களே, மரியாதை, வேற்றுமை, எதிர்காலத்துக்கான நலன், நீடித்த வளர்ச்சி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மேம்பாட்டு வளர்ச்சியை இந்தியா உருவாக்கி வருகிறது.

நண்பர்களே, நமது கூட்டாளிகளுக்கு மதிப்பளிப்பது என்பதே இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான மிகவும் அடிப்படையான கொள்கையாகத் திகழ்கிறது. மேம்பாட்டுக்கான இந்தப் பாடங்களைப் பகிர்ந்துகொள்வதே நமது ஒரே ஊக்குவிப்பு நடவடிக்கை. இதன் காரணமாகவே, நமது மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு என்பது எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் வந்துள்ளது. இது அரசியல் அல்லது வர்த்தக விவகாரங்களால் ஏற்படவில்லை.

நண்பர்களே, இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்பு என்பது வேற்றுமை கொண்டது. வர்த்தகம் முதல் கலாச்சாரம் வரை, எரிசக்தி முதல் பொறியியல் வரை, சுகாதாரம் முதல் வீட்டுவசதி வரை, தகவல் தொழில்நுட்பம் முதல் கட்டமைப்பு வரை, விளையாட்டு முதல் அறிவியல் வரை, உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு உதவியதில் பெருமிதம் கொள்ளும் நிலையில், நைஜரில் மகாத்மா காந்தியின் மாநாட்டு மையத்தை உருவாக்குவதில் இணைவதிலும் பெருமை கொள்கிறது. அவசரகால மற்றும் விபத்து சிகிச்சைக்கான மருத்துவமனையைக் கட்டியதன் மூலம், நேபாளத்தின் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த உதவியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் அவசரகால ஊர்தி சேவையை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பையும் பெற்றோம்.

நேபாளத்துடன் நாங்கள் மேற்கொள்ளும், குழாய் வழியாக பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டத்தின் மூலம், பெட்ரோலியப் பொருள்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த உதவுவோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல, மாலத்தீவில் உள்ள 34 தீவுகளிலும் குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் பங்களிப்பை செய்ததில் பெருமிதம் கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மற்றும் கயானாவில் மைதானங்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்த உதவி செய்ததன் மூலம், பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.

 

இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயிற்சி பெற்று வளர்ந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம். அதே போன்ற ஆதரவை, மாலத்தீவில் உள்ள திறன் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு தற்போது அளித்து வருகிறோம். இலங்கையில் மிகப்பெரும் வீட்டுவசதித் திட்டங்களில் இந்தியா முன்னிலை வகித்ததை மிகப்பெரும் கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். நமது வளர்ச்சி ஒத்துழைப்பு என்பது நமது கூட்டு நாடுகளின் வளர்ச்சியின் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே, உங்களின் தற்போதைய நிலைக்கு உதவுவதில் மட்டும் இந்தியா பெருமை கொள்ளவில்லை. உங்களது இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உங்களுக்கு உதவுவதை  பெருமையாக நாங்கள் கருதுகிறோம். இதன் காரணமாகவே, நமது வளர்ச்சி ஒத்துழைப்பில் பயிற்சியும், திறன்வளர்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக விளங்குகின்றன. எதிர்காலத்தைப் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் வழிகாட்டுவதற்கு அவர்கள், நமது கூட்டாளி நாடுகளின் இளைஞர்களை சுயசார்பு கொண்டவர்களாகவும், அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றுவார்கள்.

நண்பர்களே, எதிர்காலம் என்பது நீடித்த வளர்ச்சி. நமது இயற்கைச் சூழலுக்கு மாறாக, மனிதர்களின் தேவையும், விருப்பங்களும் அமைந்துவிடக் கூடாது. இதன் காரணமாகவே, மனித மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மீதான கவனம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே, சர்வதேச சூரியக் கூட்டமைப்பு போன்ற புதிய அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. மனித வளர்ச்சிக்கான பாதைக்கு சூரியக்கதிர்கள் பிரகாசமடைவதை அனுமதிப்போம். பேரிடரை எதிர்கொள்ளும் கட்டமைப்புக்கான வலுவான கூட்டணியை ஏற்படுத்தவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சிகள் தீவு நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளித்துவரும் விதம்  மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே, நான் பேசிய இந்த அனைத்து மதிப்புகளும் மொரீஷியஸுடனான நமது சிறப்பு ஒத்துழைப்பில் இணைந்து வருகின்றன. மொரீஷுயஸுடன் இந்தியப் பெருங்கடலின் நீரை மட்டும் நாங்கள் பகிர்ந்துகொள்ளவில்லை. சொந்தங்கள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றின் பொதுவான பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நமது நட்புறவு கடந்த காலங்களிலிருந்து பலத்தை வடிவமைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தை நோக்கியும் உள்ளது. மொரீஷியஸ் மக்களின் சாதனைகளில் இந்தியா பெருமைகொள்கிறது. மொரீஷியஸின் புனித ஆப்ராவசி படித்துறையின் செங்குத்தான படிகள் முதல், இந்த நவீன கட்டிடம் வரை, அனைத்தும் கடினஉழைப்பு மற்றும் புத்தாக்கத்தின் மூலம் வெற்றியை கட்டமைத்துள்ளது. மொரீஷியஸின் உணர்வுகள் ஊக்குவிக்கின்றன. நமது ஒத்துழைப்பு, வரும் ஆண்டுகளில் மேலும் உயர உள்ளது.

विव लामिते एंत्र लांद मोरीस 

भारत और मॉरिशस मैत्री अमर रहे

இந்தியா-மொரீஷியஸ் நட்புறவு நீண்டகாலம் வாழட்டும்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

 

***



(Release ID: 1642515) Visitor Counter : 176