வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தெரு வியாபாரிகளுக்கு நுண்கடன் வசதி, அவர்கள் இல்லங்களுக்கே சென்று சேரும் வகையில் பிரதமர் ஸ்வநிதி அலைபேசிச் செயலி அறிமுகம்.

Posted On: 17 JUL 2020 5:36PM by PIB Chennai

தெருவோர வியாபாரிகள், பிரதமர் ஆத்ம நிர்பார் நிதி (பிரதமர் ஸ்வநிதி) அலைபேசிச் செயலியை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செயலர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா இன்று புதுதில்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இது, இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களைப் பெறுவது, அதற்கான கடன் வழங்குமுறைகளைப் பின்பற்றுவது, போன்ற பல்வேறு பணிகளை உள்ளடக்கிய, களப் பணியாளர்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு டிஜிட்டல் பாலமாக அமைவதை நோக்கமாகக் கொண்ட, எளிமையான வகையில் பயன்படுத்தக்கூடிய செயலியாகும். இந்தச் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, காணொளி மாநாடு மூலமாக நடைபெற்றது. இதில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர்களும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் இதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

பாங்கிங் கரஸ்பாண்டன்ட் - வங்கி தொடர்பாளர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ நுண்கடன் நிதிஅமைப்புகள் ஆகியவற்றின் முகவர்கள், தெரு வியாபாரிகளுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள். துபோன்ற களப் பணியாளர்கள் மூலமாக இத்திட்டம் அதிக அளவிலான மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த களப்பணியாளர்களுக்கு உதவும் வகையிலான டிஜிட்டல் தொழில்நுட்பத் தளமாக இந்தப் பிரதமர் ஸ்வநிதி அலைபேசிச் செயலி உள்ளது. தெருவோர வியாபாரிகள், நுண்கடன் பெறுவதற்கு காகிதங்கள் இல்லாமல், டிஜிட்டல் தளம் மூலமாகவே கடன் பெறமுடியும் என்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேலும் ஒரு உந்துசக்தியாக இந்தச் செயலி அமையும் என்று நம்பப்படுகிறது.

 

பிரதமர் ஸ்வநிதித் திட்டம் பற்றிய விவரங்கள் கொண்ட இணையதளத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்தச் செயலிலும் உள்ளன. எங்கே வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்ற வசதியும் உள்ளது. பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது 2 ஜூலை 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு வியாபாரிகள் பணி மூலதனக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்/ 48,000 பேருக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் ஸ்வநிதித் திட்டம் 1. 7. 2020 அன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. கோவிட்-19 பொது முக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காக, திரும்பச் செலுத்தக்கூடிய வகையிலான, பணி மூலதனக்கடன் வழங்குவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. 24 மார்ச் 2020 அன்று அல்லது அதற்கு முந்தைய காலம் வரை நகர்ப்புறப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தெருக்களில் வியாபாரம் செய்துவந்த 50 லட்சத்துக்கும் அதிகமான தெரு வியாபாரிகள், த்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் பணி மூலதனக் கடனாக பத்தாயிரம் ரூபாய் வரை பெற முடியும். இந்தக் கடன் ஓராண்டு காலத்தில், மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். உரிய காலத்தில் இந்தக் கடன் தொகையைச் செலுத்தி வந்தால், அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தி விட்டால், ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும். இந்த மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாக செலுத்தப்படும். பணத்தை முன்னதாகவே திருப்பிச் செலுத்தி விட்டால், அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது. இத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்களுக்கு, ஊக்கத்தொகையாக மாதமொன்றுக்கு 100 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றின் மூலமாக, மேலும் அதிகக் கடன் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்கான தங்களது லட்சியத்தையும் தெரு வியாபாரிகள் அடைய முடியும்.

***************



(Release ID: 1639462) Visitor Counter : 263